சென்னை:
காதலர் தினம் என்று பலரும் கை கோக்கும் நாளில் தன் காதல் மனைவியுடன் விவாகரத்து பெற்று சோகத்தில் ஆழ்ந்துள்ளார் நடிகர் யுதன் பாலாஜி.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கனா காணும் காலங்கள் நாடகத்தின் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் பாலாஜி. பள்ளி மாணவர்களின் பதின்ம வயதுகளை எடுத்துக் கூறிய இந்த நாடகம் இளைய தலைமுறையிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
தொடர்ந்து பட்டாளம் படத்தின் மூலம் வெள்ளித்திரையிலும் பாலாஜி அறிமுகமானார். தனி ஹீரோவாக பாலாஜி நடித்து வெளியான படம் காதல் சொல்ல வந்தேன்.
இதில் தன்னைவிட வயது அதிகமான பெண்ணை காதலிக்கும் மாணவராக நடித்திருந்தார். இப்படத்தின் பாடல்கள் நல்ல வரவேற்பைப் பெற்றாலும் படம் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை. இதனால் சோலோ ஹீரோவாக இல்லாமல் ஓரளவு முக்கியத்துவம் வாய்ந்த வேடங்களில் நடித்து வந்தார்.
இவருக்கு ப்ரீத்தி என்பவருடன் 2016 ஜூனில் திருமணம் ஆனது. திருமணமாகி 2 வருடங்கள் கூட கடக்காத நிலையில், மனைவியுடன் கருத்துவேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதனால் இருவரும் பிரிந்து வாழ்ந்து வந்தனர். தொடர்ந்து விவாகரத்து கோரி நீதிமன்றத்திலும் மனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், நீதிமன்றம் அவர்களுக்கு நேற்று விவாகரத்து அளித்தது. இந்தத் தகவலை யுதன் பாலாஜி தனது பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
காதலர் தினத்தன்று என்ன திட்டம் என அனைவரும் என்னிடம் கேட்கின்றனர். ஆனால், கடவுள் எனக்கு வேறு திட்டத்தை கொடுத்துள்ளார். நீதிமன்றம் எனக்கு விவாகரத்து அளித்துள்ளது என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.