ஹைதராபாத்:
போதைப் பொருள் விநியோகித்த வழக்கில் தனது மானேஜர் கைதானது குறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை காஜல் அகர்வால், ‘சமூகத்தைச் சீரழிக்கும் எந்தச் செயலையும் நான் ஆதரிக்க மாட்டேன்’ என்று கூறியுள்ளார்.
நடிகர், நடிகையர் உள்ளிட்ட திரையுலகினர் பலருக்கு போதைப் பொருள்கள் விநியோகித்தவர்களை ஹைதராபாத் போலீசார் விசாரணை மேற்கொண்டு கைது செய்து வருகின்றனர். தெலுங்கு திரையுலகில் அதிர்சியை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவத்தில், நடிகர் நடிகையருக்கு போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக வெளியான தகவல் பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. இதனை அடுத்து நடிகர் நடிகையரிடம் தொடர்ந்து போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நடிகை காஜல் அகர்வாலின் மானேஜர் ரோனி என்ற குட்கர் ரோன்சனுக்கும் போதைப்பொருள் கும்பலுடன் தொடர்பு இருப்பதாக தெரிய வந்தது. இதை அடுத்து அவரது வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களை அங்கிருந்து கைப்பற்றிய அதிகாரிகள், ரோனியையும் கைது செய்தனர்.
இந்நிலையில், தனது மேனேஜர் கைதானது குறித்து நடிகை காஜல் அகர்வால் அறிக்கை ஒன்றினை வெளியிட்டார். அதில், ரோனி சம்பந்தப்பட்ட விஷயத்தைக் கேள்விப்பட்டு அதிர்ச்சி அடைந்தேன். நான் இந்தச் செயலை ஆதரிக்கவில்லை. சமூகத்தைச் சீரழிக்கின்ற எந்தச் செயலுக்கும் நான் ஆதரவு கொடுக்கமாட்டேன். என்னிடம் வேலை பார்ப்பவர்கள் மீது நான் அக்கறை காட்டுவது உண்டு. அதே நேரம் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கையில் நடைபெறும் சம்பவங்களுடன், எனக்கு எந்த தொடர்பும் கிடையாது. எனது சினிமா சம்பந்தப்பட்ட பணிகள் அனைத்தையும் எனது குடும்பத்தினரே கவனிக்கின்றனர். சினிமா துறையில் இருப்பவர்களுடன் தொழில் சம்பந்தமாக மட்டுமே எனக்கு உறவு இருக்கிறது. வேலை முடிந்ததும் சொந்த வாழ்க்கைக்கு போய்விடுகிறார்கள். அவர்கள் என்ன செய்கிறார்கள்? எங்கு போகிறார்கள்? என்ன நடவடிக்கைகளில் ஈடுபடுகிறார்கள்? என்பது எனக்கு தெரியாது” என்று காஜல் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார். கூறியுள்ளார்.