சென்னை:
பிளஸ் 2 பொதுத் தேர்வில் நேரடியாகப் பங்கேற்க விரும்பும் தனித் தேர்வர்களுக்கான பதிவு இன்று துவங்குகிறது.
மார்ச் மாதம் பிளஸ் 2 பொது தேர்வு நடைபெறுகிறது. இந்தப் பொதுத் தேர்வில் நேரடியாக பிளஸ் டூ தேர்வு எழுத விரும்பும் தனித்தேர்வர்கள் இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என கூறப்பட்டுள்ளது. இந்த ஆண்டே கடைசியாக நேரடி தேர்வு எழுத முடியும்.
இது குறித்த விவரங்களை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் காணலாம். பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்று, குறைந்தபட்சம் இரண்டு ஆண்டு நிறைந்தவர்கள் இந்தத் தேர்வை எழுதலாம்.
இந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால், அடுத்த ஆண்டில் இருந்து தனித்தேர்வர்களும் பிளஸ் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, பிளஸ் 2 தேர்வை எழுத முடியும். எனவே 10ஆம் வகுப்பு முடித்து பிளஸ் 2 தேர்வை நேரடியாக எழுத இந்த ஆண்டே கடைசி வாய்ப்பு என தேர்வுத்துறை அறிவித்துள்ளது.
அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ள சேவை மையங்களில் இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரையில் சாதாரணமாகவும், பின் 18 முதல் 20ஆம் தேதி வரையில் அபராத கட்டணத்துடனும் விண்ணப்பிக்கலாம்.