புது தில்லி:
முழுக்க முழுக்க இந்தியாவிலேயே தயாரான இலகு ரக ‘தேஜாஸ்’ சோதனையில் தேர்ச்சி அடைந்துள்ளது. கண்காணாத இடத்தில் இருக்கும் இலக்கை துல்லியமாக விண்ணில் பாயும் ஏவுகணை மூலம் வீழ்த்துயுள்ளது. ஒடிசாவின் சந்திப்பூர் சோதனை பகுதியில் இந்தச் சோதனை நடைபெற்றது.
விமானத்தில் உள்ள ஏவுகணை தாக்குவதற்கு தயாராகும் திறன், கண்காணாத இலக்கை தாக்கும் திறன் போன்றவற்றின் அடிப்படையில் இந்தச் சோதனை நடத்தப்பட்டது. இதன் மூலம் தேஜாஸின் தாக்குதல் வேகம், தயாராகுதல் மற்றும் தடுப்புத்திறன் ஆகியவற்றை ஒருங்கிணைந்து கணக்கிட முடிந்ததாக பாதுகாப்பு துறையின் சார்பில் தெரிவிக்கப்பட்டது. ஒரு சின்னக்குறைகூட இல்லாத அளவில் இந்தத் தாக்குதலை தேஜாஸ் செய்து முடித்துள்ளதாகவும், மிக மிக திருப்திகரமாக கொடுக்கப்பட்ட இலக்கை துல்லியமாக தாக்கியதாவதும் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சோதனையின் மூலம், தேஜாஸின் மதிப்பு சர்வதேச அளவில் உயர்ந்துள்ளது. கண்காணாத இலக்கை தாக்கும் திறன் பெற்றதன் மூலம், இலகு ரக தாக்குதல் விமானத்துக்கான இறுதி செயல்பாட்டு அனுமதி கிடைத்துவிடும் என்றும் தன் அறிக்கையில் பாதுகாப்புத்துறை தெரிவித்துள்ளது. சோதனை செய்யப்பட்ட பகுதியில் அமைக்கப்பட்ட சென்சாரில் தாக்குதல் இலக்கையும் அதை தாக்கிய ஏவுகணையின் வேகமும் துல்லியமாக பதிவுசெய்யப்பட்டுள்ளது. அதேபோல விமான எதிர்ப்பு ஏவுகணைகள் தாக்குவதற்கு எத்தனிக்க முன்பே அதனை இனம் கண்டு தாக்கும் திறனும் தேஜாஸில் இருக்கிறது.
ஒரு தேஜாஸ் விமானத்தின் சர்வதேச மதிப்பு 600 கோடி ரூபாய்களாகும். இந்தியாவிடம் தற்போது 20 தேஜாஸ் விமானங்கள் தயார்நிலையில் உள்ளன.