குஜராத் மாநில அரசு நிறுவியுள்ள மாநில அளவிலான கணினி நெட்வொர்க்கையே அனைத்து அரசுத் துறை அலுவலகங்களும் பயன்படுத்த வேண்டுமென குஜராத் அரசு வலியுறுத்தியுள்ளது. வைரஸ் தாக்குதலின் தீவிரத்தால் இந்த அறிவிக்கையை அரசு கொடுத்துள்ளது.
நிதி தொடர்பான பிரிவுகளின் கணினிகளில் வைரஸ் தாக்குதல்கள் தொடர்வதால், குஜராத் அரசின் கீழ் இயங்கும் நெட்வொர்க்குகளில் வைரஸ் பரவி வருகிறது. இதனால் பல மாவட்ட அலுவலக கணினிகளிலும் வைரஸ் பரவி வருகிறது. இதில் பல்வேறு துறைகளும் பாதிக்கப்பட்டுள்ளன.
காந்திநகர், கோத்ரா ஆகிய பகுதிகளில் உள்ள காவல் நிலையங்கள், ஊழல் தடுப்பு துறைகள், மாவட்ட ஆட்சியர், பதிவாளர் அலுவலகங்கள், மண்டல போக்குவரத்துத் துறைகள், அரசு பொது மருத்துவமனைகள் ஆகியவற்றில் பயன்படுத்தப்படும் கணினிகளிலும் வைரஸ் ஊடுருவியுள்ளது.
எனவே, மாநில அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப நெட்வொர்க் அமைப்பான GSWAN ஐ மட்டுமே பயன்படுத்தவேண்டுமென அனைத்துத் துறைகளுக்கும் குஜராத் அரசு அறிவிக்கை அனுப்பியுள்ளது.
இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கணினிகள் மற்றும் ஐடி நெட்வொர்க்குகள் உடனே ஸ்விட்ச் ஆப் செய்யத்தக்க வகையில் ஓர் எச்சரிக்கையை அரசு வழங்கியது. மேலும், அனைத்து டிஜிட்டல் வலைப்பின்னல்களிலும் வைரஸ் தடுப்பு பதியப்பட்டுள்ளது.
இதனிடையே மாநிலத்தில் எந்த ஒரு தனியார் நிறுவனமும் தங்கள் நெட்வொர்க்கில் இணைய ஊடுருவல் நடந்ததாக புகார் எதுவும் கொடுக்கவில்லை. அதற்கு பதிலாக அவர்கள் இணைய பாதுகாப்பு மீறல்களைத் தடுக்க தங்கள் நெட்வொர்க்குகள் மேம்படுத்திவருகின்றனர்.
பணப்பரிவர்த்தனை தொடர்பான கணினி பாதுகாப்புகளில் பொதுமக்கள் தங்கள் கணினிகளில் ஏதாவது இணையதள ஊடுருவல்கள் நடந்தால் உடனடியாக தெரிவிக்கும்படி குற்றப்பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.