புது தில்லி:
இந்தியாவின் முதல் பெண் பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், இன்று சுகோய் 30 ஜெட் ரக போர் விமானத்தில் பயணம் செய்தார்.
நிர்மலா சீதாராமன் பாதுகாப்புத் துறை அமைச்சராகப் பொறுப்பேற்ற பிறகு, ராணுவம், விமானப்படை மற்றும் கப்பற்படை முகாம்களுக்கு அதிகமான முறை பயணித்து, அவர்களது செயல்பாடுகளை நேரில் கவனித்து வருகிறார்.
இன்று காலை ஜோத்புர் விமான நிலையத்தில் இருந்து சுகோய் போர் விமானத்தில் ஏறினார் நிர்மலாசீதாராமன். அவர், ஜி சூட் என்று அழைக்கப்படும் போர் வீரர்களுக்கான ஆடையை அணிந்து கொண்டிருந்தார். இந்தியாவில் சுகோய் போர் விமானத்தில் பயணிக்கும் இரண்டாவது பெண் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.
புவியீர்ப்பு சக்திக்கு எதிராக பணியாற்ற வசதியாக ஜி சூட் அணிந்த நிர்மலா சீதாராமன், ஆக்ஸிஜன் முகமூடி கொண்ட ஹெல்மெட்டையும் அணிந்து கொண்டு சுகோயில் பயணித்தார்.
அணு ஆயுதங்களைச் சுமந்து செல்லும் தகுதி கொண்ட சுகோய் – 30 எம்கேஐ ரக விமானங்கள், பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கும் இடங்களை துல்லியமாக தாக்கி அழிக்கவல்லது.
முன்னதாக ராணுவ வீரர்கள் அல்லாமல், முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் பிரதீபா பாட்டீல் ஆகியோர் இந்த சுகோய் போர் விமானத்தில் பயணித்தார்கள். 2003ம் ஆண்டு, பாதுகாப்புத் துறை அமைச்சராக இருந்த ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் சுகோய் விமானத்தில் முதன் முதலில் பயணித்த முக்கிய நபர். தொடர்ந்து 2016ல் மத்திய அமைச்சர் கிரென் ரிஜுஜுவும் இவ்வாறு பயணித்துள்ளார்.