திருப்பதி:
வரும் 31 ஆம் தேதி சந்திர கிரகணம் வருகிறது. அதன் காரணத்தால், வழக்கமாக பின்பற்றப் படும் நடைமுறையின் படி, திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை அடைக்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருமலை திருப்பதி கோயில், சந்திரன் தலமாக வணங்கப் படுகிறது. எனவே மற்ற ஆலய நடைமுறைகளை விட திருப்பதியில் அன்று மட்டும் சிறப்பு நடைமுறைகள் பின்பற்றப் படும். வரும் 31ஆம் தேதி சந்திர கிரகணம். அன்றையதினம், காலை 11 மணி முதல் இரவு 10.30 வரை திருப்பதி ஏழுமலையான் கோயில் நடை சாத்தப்படும்.
இருப்பினும், அன்றைய தினம், முன்னதாகவே தரிசன டிக்கெட் பெற்று பெருமாள் தரிசனத்துக்குக் காத்திருக்கும் பக்தர்களுக்கு, ஜன.31ஆம் தேதியன்று இலவச உணவு வழங்கப் படும் என்றும், அவர்கள் காத்திருப்பு அறையில் இருக்க அனுமதிக்கப்படுவார்கள் என்றும் திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாகம் தெரிவித்துள்ளது.
எனவே இதற்கு ஏற்ப, திருமலை திருப்பதி தரிசனத்துக்கு பக்தர்கள் தங்கள் திட்டத்தை வகுத்துக் கொள்ளுமாறு தேவஸ்தான நிர்வாகம் பக்தர்களைக் கேட்டுக் கொண்டுள்ளது.