மும்பை:
உ டல்நலக்குறைவு காரணமாக மும்பை லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர். அவரை பிரதமர் மோடி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
கடந்த சில தினங்களாக கணைய அழற்சி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் கோவா மாநில முதல்வர் மனோகர் பாரிக்கர். இதை அடுத்து அவர் மும்பையில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு அங்கு சிகிச்சை அளிக்கப் பட்டு வருகிறது. இதனிடையே, நிகழ்ச்சிகள் சிலவற்றில் பங்கேற்பதற்காக மும்பை வந்த பிரதமர் மோடி, மனோகர் பாரிக்கரை நேரில் சென்று சந்தித்து, நலம் விசாரித்தார். அவருடன் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, மகாராஷ்டிரா ஆளுநர் வித்யாசாகர் ராவ், முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்டோரும் சென்றிருந்தனர்.
இதனிடையே கோவா பட்ஜெட் கூட்டத் தொடர் திங்கள்கிழமை இன்று துவங்குகிறது. சிகிச்சையில் இருப்பதால் முதல்வர் இந்தக் கூட்டத் தொடரில் பங்கேற்க முடியாது என்றும், கூட்டத் தொடர் 3 நாள்களாகக் குறைக்கப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது. நிதித் துறையையும் பாரிக்கர் கவனித்து வந்ததால், அவருக்குப் பதிலாக மகாராஷ்டிர கோமந்தக் கட்சித் தலைவரும், அமைச்சருமான சுதீன் தவாலிகர் பட்ஜெட் தாக்கல் செய்யவுள்ளார்.