கிறிஸ்ட் சர்ச்:
ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அரையிறுதிப் போட்டியில் பாகிஸ்தான் அணியை வீழ்த்தி இந்திய அணி இறுதிப் போட்டிக்குச் சென்றது. இந்திய அணி பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், பாகிஸ்தான் அணி, 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது. இந்த வெற்றி மூலம் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற இந்திய அணி பிப்.3 ஆம் தேதி நடக்கும் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.
நியூசிலாந்தில் 19 வயதுக்கு உட்பட்டோருக்கான ஐ.சி.சி., உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இரண்டாவது அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொண்டது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது. அதன்படி, இந்திய துவக்க வீரர்கள் பிரித்வி ஷா(41), மன்ஜோட் கல்ரா(47) நல்ல துவக்கம் தர அடுத்து களமிறங்கிய ஷூப்மன் கில் அதிரடி ஆட்டம் ஆடினார். அவருக்கு ஹார்விக் தேசாய்(20) அனுகுல் ராய்(33) ஒத்துழைப்பு தந்தனர். இறுதியில், இந்திய அணி 50 ஓவரில் 9 விக்கெட் இழப்புக்கு 272 ரன் குவித்தது. ஷூப்மன் கில் 102 ரன்னுடனும், இஷான் போரல் 1 ரன்னுடனும் களத்தில் இருந்தனர்.
சதம் விளாசிய ஷூப்மன் கில்லை ஐ.பி.எல்., ஏலத்தில் ரூ.1.8 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியுள்ளது.
தொடர்ந்து ஆடிய பாகிஸ்தான் அணி 69 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்து தோல்வியை சந்தித்தது.