புது தில்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் சந்தித்துப் பேசினார். தில்லி துக்ளக் சாலையில் உள்ள ராகுலின் இல்லத்தில் இந்த சந்திப்பு நடைபெற்றது.
காங்கிரஸ் தலைமையிலான அணியில் இணைந்துதான் வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலை விடுதலை சிறுத்தைகள் எதிர்கொள்ளும் என திருமாவளவன் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.
தில்லியில் ராகுல் காந்தியை சந்தித்துப் பேசிய பின்னர், செய்தியாளர்களைச் சந்தித்தார் திருமாவளவன். அப்போது அவர் கூறியது… நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான அணியால்தான் மதச்சார்பற்ற சக்திகளை ஒருங்கிணைக்க முடியும். நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவா, காங்கிரஸ் அணியா என்றுதான் பார்க்கப்படும். எங்களைப் பொறுத்த வரையில் காங்கிரஸ் தலைமையிலான அணியில்தான் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவோம்.
நான் காவிரி பிரச்சனை குறித்து ராகுல் காந்தியிடம் எதுவும் பேசவில்லை. வன்கொடுமை தடுப்புச் சட்ட விவகாரத்தில் காங்கிரஸ் ஆதரவு தந்ததற்காக ராகுலுக்கு நன்றி தெரிவித்தேன். தமிழகத்தில் நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க வருமாறு ராகுலுக்கு அழைப்பு விடுத்தோம்… என்றார் அவர்.
முன்னதாக, கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீதாராம் யெச்சூரியை சந்தித்துப் பேசினார் தொல்.திருமாவளவன்.