திருமூர்த்திமலையில் அமைந்துள்ள உலக சமாதான மையம் போகிறோம், அங்கே பிரமிட் ஆலயத்தில் தியானம் செய்துவிட்டு, பரஞ்சோதி மகானிடம் சற்று நேரம் பேசப் போகிறோம், நீங்களும் வாருங்கள் என்று அழைத்தார் கலைமகள் ஆசிரியர். மேற்குத் தொடர்ச்சி மலையின் இயற்கைச் சூழல் எப்போதுமே இனிமையானதுதான். உடுமலைப்பேட்டை கடந்து சற்று தொலைவில், நீர்வீழ்ச்சி, சிவாலயம், அணைக்கட்டு என தெய்வீக அம்சமும் இயற்கைப் பேரழகும் இணைந்த இடத்தை தவிர்க்கலாகுமோ?
திருமூர்த்திமலை சென்றோம். வெள்ளை உடுப்புடன் தியானம் செய்ய பிரமிட் ஆலயத்துள் அமர்ந்தோம். இருளில் அமர்ந்து, ஒளியை நினைந்து கைகூடும் தியானத்தில், உள்ளப் பேரொளி உணர்வில் லயித்தது.
அதன் பின்னர் பரஞ்சோதி மகானுடன் சற்று நேரம் அளவளாவும் வாய்ப்பு கிடைத்தது. இன்றைய நாட்டு நடப்புகளை ஆன்மிகக் கண்ணோட்டத்தில் அழகாக விரித்துரைத்தார். அண்டை மாநிலங்களில் மழை பெய்ய வேண்டும் என்று நாம் பிரார்த்தனை செய்து, அங்கெல்லாம் மழை நன்கு பொழிந்தால், நமக்கு காவிரியிலும் பாலாற்றிலும் இன்னும் நம் ஆறுகளிலும் தண்ணீர் பெருக்கெடுத்து வரும் என்றார். ஏனென்றால், நம் தமிழக நில அமைப்பு, மற்ற மாநிலங்களின் ஆற்று வழி நீரை நம்பியுள்ளது. இதன் மூலம், நமக்கு மட்டும் பலன் என்று இல்லாது, அண்டை மாநிலங்களும் வளத்துடன் இருக்கும். நமது பிரார்த்தனை அவ்வாறு நம் மாநிலம் தாண்டி, அண்டை மாநிலங்களுக்கும் விரிந்து, பின் பிரபஞ்ச அளவில் அனைவரின் நலனையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்ற அவரது கருத்து நம்மை வெகுவாகக் கவர்ந்தது.
நீங்கள் ஏதாவது கேட்க விரும்பினால் கேளுங்கள் என்றார். முன்னதாக, பிரமிட் ஆலயத்தில் அமர்ந்திருந்தபோது, பரஞ்சோதி மகான் மேற்கொண்ட தவ வேள்வி பற்றியும் குண்டலினி தியானம் குறித்தும் உடன் வந்த நண்பர் புருஷோத்தமன் சொல்லியிருந்ததால், இதையே அவரிடம் கேள்வியாக முன்வைத்தேன்.
நீங்க குண்டலினி யோகம் பண்ணதா சொன்னாங்க. எனக்கு குண்டலினியை எப்படி நீங்க பயிற்சி செய்தீங்கன்னு சொல்லமுடியுமா?” என்று கேட்டுவிட்டு அமர்ந்தேன்.
குண்டலினி என்றால் என்ன? குண்டலினி தியானம் எவ்வாறு செய்வது? குண்டலினி எழுந்தால் என்னவாகும்? என்று அவரும் விளக்கமாகச் சொல்லத் தொடங்கினார்.
இது ஒரு பெரிய முறை என்றாலும், ஓரளவு கோடிட்டுக் காட்டலாம் என்றவர், சிவபெருமானையும், பார்வதி தேவியையும் மனத்தில் தியானித்து எவ்வாறு குண்டலினி சக்தியை எழுப்புவது என்பதைப் புரியவைத்தார்.
குண்டலினி சக்தியை எழுப்புவது குறித்து, சித்தர்கள் சில ரகசியங்களைச் சொல்லியுள்ளனர்.
நமக்குள் புதைந்திருக்கும் நிலை ஆற்றலைத்தான் குண்டலினி என்பார்கள். அது ஒரு பாம்பைப் போல சுருளாகச் சுருண்டு நமது மூலாதாரத்தில் புதைந்திருக்கிறது. இந்த குண்டலினி சக்தி என்பது, நம் எல்லோரிடமும் இருக்கிறது, இதை உணர்ந்து தூண்டுவதன் மூலம், அற்புதம் வாய்ந்த ஒரு அனுபவமாகவும், ஆற்றலாகவும் மாற்றிவிட முடியும் என்றார்கள் சித்தர்கள். ஆனால் அதற்கு முன்னர், நமக்கு நம் உடலைப் பற்றிய புரிதல் தேவை. நம் உடல் எழுபத்தி இரண்டாயிரம் நாடிகளால் பின்னப் பட்டிருக்கிறது. இந்த நாடிகள் எல்லாம் ஏழு மையங்களில் இனைக்கப் பட்டிருக்கிறது. மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தம், ஆக்ஞேயம், துரியம் என்பதே இந்த ஆதார மையங்கள். இவை மனித உடலில் முறையே மூலம், தொப்பூழ், மேல்வயிறு, நெஞ்சம், மிடறு, புருவநடு, உச்சந்தலை என ஆறு இடங்களில் அமைந்திருக்கிறது. இவற்றில் பத்து நாடிகள் முக்கியமானவை. பிங்கலை என்பது வலது நாசியிலும், இடங்கலை என்பது இடது நாசியிலும், சுழுமுனை இவை இரண்டுக்கும் நடுவிலும், சிகுவை உள்நாக்கிலும், காந்தாரி இடது கண்ணிலும், புருடன் வலது கண்ணிலும், அத்தி வலது காதிலும், அலம்புடை இடது காதிலும், சங்கினி பிறப்பு உறுப்பிலும், குரு ஆசனவாயிலிலும் ஓடுகிறது.
குண்டலினி என்பது, அசைவற்ற பாம்பினைப் போன்ற நிலையில் அமைதியாக இருக்கும். ஒரு பாம்பைச் சீண்டினால் என்ன ஆகும்? அது அப்படியே சீறிக் கிளம்பும் இல்லையா! அவ்வாறு சீறிக் கிளம்பும் பாம்பு ஊர்ந்து செல்ல வேண்டும் இல்லையா!? இப்படி குண்டலினியை நாம் தூண்டிவிடும் போது அது மூலாதாரத்தில் இருந்து மேல்நோக்கிக் கிளம்பும். அந்த சக்தி மூலாதாரத்திலிருந்து மேலே மேலே பயணித்து, அதனை துரியம் என்கிற உச்சந் தலை வரையிலும் கொண்டு வரலாம். இந்த துரியத்திற்கு குண்டலினி சக்தியைக் கொண்டு வந்தால் சமாதி சித்திக்கிறது. இதனை “சஞ்சார சமாதி” என்பார்கள். இப்படியாக குண்டலினியை துரியத்துக் கொண்டுவந்தால், நம் உடலின் நிலை எப்படி இருக்கும்?!
உணர்வற்று, அசைவற்று, நினைவற்று எல்லாம் பிரம்மத்தில் லயித்திருக்கும்.
இந்த குண்டலினியை எழுப்பி மேலே கொண்டு போக வேண்டும் என்கிறீர்கள்.. சரி.. குண்டலினி ஒரே மூச்சில் மேலேறிவிடுமா? அல்லது ஒவ்வொரு நிலையாக உயர்த்திக் கொண்டு போக வேண்டுமா? என்று கேள்வி உங்கள் மனத்தில் ஓடும். குண்டலினி என்பது ஒன்றும் மாய மந்திரம் இல்லை. அது ஒரு வகையான உள்நிலை உளவியல் நுட்பம். இதைப் புரிந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.
குண்டலினியை எழுப்ப, முதலில் சாதகன் மெய்யான குருவைக் கண்டறிய வேண்டும். இதற்கு சாதகன் ஆசைகளைக் குறைந்தவனாய், தீவிர வைராக்கியம் உள்ளவனாய் தூய மனம் உள்ளவனாய் இருக்க வேண்டும். அவனை மெய்யான குரு தானாகவே அருகில் வருவார். அவரே முன்னின்று அரவணைத்து அவனை வழி நடத்துவார். இத்தகைய குருவின் வழிகாட்டுதலில் பயிலும் சாதகனே குண்டலியை எழுப்புவதால் உண்டாகும் முழுப் பலனையும் அடைவான். குண்டலினி எழுப்பப்படும்போது சாதகனுக்கு வழியில் பல தவறுகள் செய்ய ஆவல் (சோதனை) உண்டாகும். ஆகவே சாதகன் ஒழுக்கமானவனாக இல்லாவிட்டால் அந்த ஆவலைத் தகர்க்கத் தக்க சக்தி அற்றவன் ஆகிவிடுவான்.
பொதுவாக, பிராணாயாமம் எனப்படும் மூச்சுப் பயிற்சி, ஆசனங்கள், முத்திரைகள் இவற்றால் குண்டலினியை எழுப்ப முடியும். ராஜயோகிகள் சலனமற்ற தியானத்தினாலும், மனப் பயிற்சியினாலும் எழுப்புகின்றனர். சாமான்ய மக்கள் பக்தி, அதாவது முழுமையான சரணாகதியின் மூலம் எழுப்புகின்றனர். ஞானிகள் பிரித்து அறியும் மன உறுதியினால் எழுப்புகின்றனர். தாந்திரிகர்கள் மந்திர சக்தியால் குண்டலினியை எழுப்புகின்றனர். இவை எல்லாவற்றையும் விட, நயன தீட்சையாகிற குருவைப் பார்த்தல் (தரிசித்தல்), ஸ்பரிச தீட்சையாகிற குருவினால் தொடப் படுதல், ஆசீர்வதித்தல் ஆகியவற்றால் குண்டலினி சட்டென எழும்பும்.
பொதுவாக, சிவபெருமானை சக்தியுடன் கூடிய சிவமாக தியானிக்க வேண்டும். சீவன் சிவனுடன் கலந்த நிலை. சீவன் சிவன் ஐக்கிய நிலை. இதை நான் மனத்தால் உணர்ந்தால் இந்த தியான யோகத்தால் யோகமுண்டாகும் என்று கூறினார் பரஞ்சோதி மகான்.