கடையநல்லூர் :
கடையல்லூரில் வழிப்பறியில் ஈடுபட்ட 3 இளைஞர்களை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
கடையநல்லூர் மற்றும் தென்காசி, செங்கோட்டை பகுதிகளில் அடிக்கடி வழிப்பறிச் சம்பவங்கள் அரங்கேறி வந்த நிலையில் செங்கோட்டை காவல்நிலைய ஆய்வாளர் சுரேஷ்குமார் தலைமையிலான தனிப்படைக் காவலர்கள் அடங்கிய குழு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில் அமைக்கப்பட்டது.
கடையநல்லூர் பேருந்து நிலையத்தில் சங்கரன்கோவில் நேரு தெருவில் வசிக்கும் வெளியப்பன் என்பவருடைய மகன் மாரியப்பன் ரூ.25 ஆயிரத்தை கைப்பையில் வைத்துக் கொண்டு பஸ்சுக்காக நின்று கொண்டிருந்தார். அப்போது, பஸ்நிலையத்திற்குள் அதிவேகமாக காரில் வந்த 2 பேர் மாரியப்பன் கையில் வைத்திருந்த பணத்தை பறித்துக் கொண்டு காரில் ஏறியபோது மாரியப்பன் கூச்சலிட்டார்.
அப்போது அந்த வழியாக வந்த தனிப்படை ரோந்து வாகனம் காரை விரட்டிபிடித்து மடக்கியது.
விசாரணையில் செங்கோட்டையைச் சேர்ந்த சாகுல் ஹமீது என்பவருடைய மகன் இம்ரான்(25) காதர்பிச்சை மகன் முகம்மது இப்ராஹீம் அதே ஊரைச் சேர்ந்த பீர்முகம்மது மகன் சிகாத்முகம்மது(25)ஆகியோரை கைது செய்தனர்.
கடையநல்லூர் காவல்நிலைய குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் பாலாஜி விசாரணை செய்ததில் இம்ரான் பல வழிப்பறி உட்பட குற்ற வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் செங்கோட்டை பகுதியில் தி.மு.க.முக்கிய நிர்வாகிகளுள் ஒருவர் என்றும் தெரியவந்தது. வழிப்பறிக்கு பயன்படுத்தப் பட்ட காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். வழிப்பறியில் ஈடுபட்ட கும்பலை பிடித்த தனிப்படைக் காவலர்களை பொதுமக்கள் பாராட்டினர்.