திருச்சி :
திருச்சி பகுதியில் புகழ்பெற்ற தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமத்தில் இன்று காலை முதல் வருமான வரித்துறையினர் திடீர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது தனலட்சுமி சீனிவாசன் கல்விக் குழுமம். இந்தக் குழுமத்தின் கீழ் பள்ளி, கல்லூரி உள்ளிட்ட பல்வேறு கல்வி நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு இன்று காலை முதல் வருமான வரித் துறையினர் சோதனை நடத்தி வருகிறார்கள்.
திருச்சி, சமயபுரம், மாமல்லபுரம் உள்ளிட்ட இடங்களிலும் இந்த கல்வி குழுமத்திற்கு சொந்தமான கல்லூரிகள் இயங்கி வருகின்றன.
இந்தக் குழுமத்திற்கு சொந்தமான சுமார் 26 இடங்களில் ஒரே நேரத்தில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டுள்ளனர். மாமல்லபுரம் அருகே பூஞ்சேரியில் உள்ள தனலட்சுமி சீனிவாசன் பொறியியல் மற்றும் தொழில்நுட்ப கல்லூரியிலும் சோதனை நடத்தப் பட்டு வருகிறது.
இந்தக் கல்விக் குழுமத் தலைவர் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது. வரி ஏய்ப்பு காரணமாக வந்த புகாரின் அடிப்படையில் சோதனை நடப்பதாகக் கூறப்படுகிறது.