பத்யாதிரிகையாளர்களுக்கு நலவாரியம் தமிழக அரசு உடனே அமைக்க வேண்டும் !
மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்களிடம் கோரிக்கை…
அகில இந்திய ஜனநாயக பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா சென்னை பாம்குரோவ் ஹோட்டலில் நடைபெற்றது.
தோழர் சி.கருணாகரன் தலைமையில் ஓவியர் ஆனந்த் வரவேற்புரை வழங்கினார்.
மாண்புமிகு அமைச்சர் கடம்பூர் ராஜூ, அ.தி.மு.க தலைவர்களான உயர்திரு நா.பாலகங்கா, சிறுணியம் P.பலராமன், உயர்திரு வாலாஜாபாத் கணேசன், உயர்திரு ஆர்.கனகராஜ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு பேசினர்.
இந்நிகழ்வில் திருமதி சசிகலாதேவி ரவீந்திரதாஸ், இயக்கணி விஜயன், கௌதம சித்தார்த்தன், இரா.கதிரவன், இராஜகவி ராஜகாந்தன், சி.தமிழ்செல்வன், தின உரிமை கல்பனா உட்பட பலர் அமைச்சர் அவர்களால் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டனர்.
அகில இந்திய ஜனநாயக பத்திரிகையாளர் சங்கத்தின் சார்பில் பத்திரிகையாளர்களின் நலனுக்காக நலவாரியம் உட்பட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டது.
தமிழ்நாடு பத்திரிகையாளர்களின் சங்கத் தலைவர் தோழர் டி.எஸ்.ஆர்.சுபாஷ் அவர்கள் பேசுகையில், தமிழகத்தில் பத்திரிகையாளர்களுக்கு மாநிலம் தழுவிய ஒரு அமைப்பு இருப்பதற்கு காரணமாக விளங்குபவர் மக்கள் திலகம் புரட்சித் தலைவர் எம்.ஜி்.ஆர். அவர்கள்தான் என்று குறிப்பிட்டுப் பேசினார்.
மேலும் அவர் பேசுகையில்…
” எம்.ஜி.ஆர். அவர்கள் முதல்வராக இருந்தபோது ஒரு தவிர்க்க முடியாத சூழலில் இந்து ராம் அவர்கள் மீது கைது நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.
அந்த சமயத்தில் முதல்வர் எம்.ஜி.ஆர் அவர்களிடம் பத்திரிகையாளர்கள் முறையிட்டபோது இது போன்ற விஷயங்களுக்கு ஒன்று கூடி குரல் கொடுக்க மாநில அளவில் பத்திரிகையாளர்களுக்கு என்று எந்த ஒரு அமைப்பும் இல்லையா என்று கேட்க, மாநிலம் தழுவிய ஒரு அமைப்பை உருவாக்க அதுவே தூண்டுதலாக இருந்தது எனலாம்.
மாவட்ட அளவில் பிரஸ் கிளப், கில்டு, மன்றங்கள் போன்றவைகள் இருந்த வேளையில் பல ஆண்டுகள் போராட்டத்திக்குப் பின்பு, மறைந்த தோழர் டி.எஸ்.ரவீந்திரதாஸ் அவர்களால் 1990 ல் தமிழகம் தழுவிய முதல் சங்கமாக தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் உருவாக்கப்பட்டது.
பத்திரிகையாளர்களுக்கான ஓய்வு ஊதியம், குடும்ப நல நிதி உட்பட பல வகையான சலுகைகளை பெற்றுத் தந்தார் தோழர் டி.எஸ்.ஆர்.
தமிழ்நாடு பத்திரிகையாளர் சங்கம் உருவாக காரணமாக விளங்கிய எம்.ஜி.ஆர் அவர்களின் நூற்றாண்டு விழாக்களை இந்த அரசு தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது.
தமிழகத்தில் கட்டிட தொழிலாளர்கள் துவங்கி, திரைப்பட கலைஞர்கள் வரை நலவாரியம் அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது.
ஆனால் மக்கள் திலகம் ஆதரவால் உருவாக்கப்பட்ட பத்திரிகையாளர்களுக்கு இன்றுவரை ஒரு நலவாரியம் அமைக்கப்படவில்லை.
பத்திரிகையாளர்களுக்கு பல்வேறு சலுகைகள் புரட்சித் தலைவி ஜெயலலிதா அவர்களின் வழியில் செயல்பட்டு வரும் இந்த அரசு வழங்கினாலும், நலவாரியம் அமைத்தால் கிரீடத்தில் ஒரு வைரக்கல்லை பதித்தது போல் ஆகிவிடும் ” என்று பேசினார்..
மேலும் ” ரஜினி,கமல் என யார் வந்தாலும் அவர்களால் எம்.ஜி.ஆர். ஆகிவிட முடியாது, காரணம் பல சோதனைகளையும், பல்வேறு எதிர்ப்புகளையும் சந்தித்து அவைகள் அனைத்தையும் தகர்த்தெரிந்து வந்தவர் எம்.ஜி.ஆர்.” என்றும் அவர் எப்படி படிப்படியாக வளர்ந்து மக்கள் மனதில் இடம் பிடித்தார் என்று பேசினார் டி.எஸ்.ஆர்.சுபாஷ்.
அமைச்சர் கடம்பூர் ராஜூ அவர்கள் பேசுகையில் ” எம்.ஜி.ஆர். அவர்களைப் பற்றி நாங்கள் பேசுவதை விட, அரசு விழாக்களை நடத்துவதைவிட உங்களைப் போன்றவர்கள் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றி இப்படி பேசுவது மகிழ்ச்சி அளிக்கிறது என்று பேசினார்.
கோரிக்கைகளை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் நிறைவேற்றுவதாக தெரிவித்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அகில இந்திய ஜனநாயக பத்திரிகையாளர் சங்க நிர்வாகிகள் ஏற்பாடு செய்து இருந்தனர்.