உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கில், தூத்துக்குடியில் கைது செய்யப் பட்ட தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் பின்னர் புழல் சிறையில் அடைக்கப் பட்டார்.
உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் பண்ருட்டி வேல்முருகன் தலைமையில் கடந்த மாதம் நடைபெற்ற போராட்டத்தின்போது, சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. இதுதொடர்பாக 7 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார் 11 பேரைக் கைது செய்தனர். இந்த வழக்கு தொடர்பாக பண்ருட்டி வேல்முருகன் உள்ளிட்ட 3 பேரைத் தேடி வந்தனர்.
இந்நிலையில் நேற்று இரவு தூத்துக்குடிக்குச் சென்ற வேல்முருகனை தூத்துக்குடி போலீஸார் தடுத்து கைது செய்தனர். பின்னர், உளுந்தூர்பேட்டை சுங்கச் சாவடி அடித்து நொறுக்கப்பட்ட வழக்கு தொடர்பாக, உளுந்தூர்பேட்டை போலீசாரிடம் ஓப்படைத்தனர். இதை அடுத்து அவர் இன்று காலை திருக்கோவிலூர் முதலாவது குற்றவியல் நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை 15 நாள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இதையடுத்து வேல்முருகன் புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.