கன்னியாகுமரிக்கு வருகை தந்த பிரதமர் மோடி, சுமார் ஒன்றரை மணி நேரம் ஓஹ்கி புயலால் பாதிக்கப்பட்டவர்களின் குறைகளைக் கேட்டறிந்தார்.
தனது பயணத்தின் முதல் பகுதியாக, லட்சத்தீவுக்கு சென்ற பிரதமர், அங்கு புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து குறைகளைக் கேட்டறிந்தார் .
அதன் பின்னர் திருவனந்தபுரம் வந்த பிரதமர் மோடி அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் கன்னியாகுமரிக்குச் சென்றார். கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வந்தடைந்த பிரதமர் மோடியை, ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வரவேற்றனர்.
இதனிடையே, அரசு விருந்தினர் மாளிகையில், முதல்வருடன் பிரதமர் மோடி ஆலோசனை நடத்தினார். மீனவர்கள் துயரம், புயல் பாதிப்புகளை சரிசெய்ய எடுத்த நடவடிக்கைகள் என பிரச்னைகள் குறித்து பேசினர்.
பின்னர் மீனவர்கள் மற்றும் விவசாய பிரதிநிதிகளிடம் பிரதமர் மோடி குறைகளைக் கேட்டறிந்தார்.
அப்போது, மீனவ மற்றும் விவசாய சமூகங்களைச் சேர்ந்த 31 பிரதிநிதிகள் அங்கே கூடியிருந்தனர். அவர்களிடம் சுமார் ஒன்றரை மணி நேரம் பிரதமர் விவரங்களைக் கேட்டறிந்தார்.
மக்களவைத் துணை சபாநாயகர் தம்பிதுரை, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்டோரும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
பிரதமர் மோடி வருகையை ஒட்டி, கன்னியாகுமரியில் 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்டு திருவனந்தபுரம் சென்ற பிரதமர் மோடியை கேரள ஆளுநர் சதாசிவம், முதலமைச்சர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் வரவேற்றனர். ஓஹ்கி புயலால் பாதிக்கப்பட்ட கேரள மீனவர்களை பிரதமர் மோடி சந்தித்து, குறைகளைக் கேட்டறிந்தார்.