திருச்செங்கோடு:
கடவுளுக்கு எதிராகப் பேசினால், எங்களாலும் கல்லெறிய முடியும் என ஸ்ரீவில்லிபுத்தூர் சடகோப ராமானுஜ ஜீயர் ஆவேசமாகப் பேசினார். ஆண்டாள் குறித்த சர்ச்சை அதிகமான நிலையில், துறவி ஒருவர் இவ்வாறு பேசியிருப்பது, இந்த விஷயத்தில் அவர்கள் எவ்வளவு தூரம் உணர்வுப் பூர்வமாக எடுத்துக் கொண்டுள்ளனர் என்பதையே வெளிப்படுத்துகிறது.
இறை நம்பிக்கைக்கு எதிராகப் பேசினால் எங்களாலும் சோடா பாட்டில் வீச முடியும் என்று ஸ்ரீவில்லிபுத்தூர் மணவாள மாமுனிகள் மடத்தின் சடகோப ராமானுஜ ஜீயர் பேசியுள்ளார். கடவுளுக்கு எதிராகப் பேசுபவர்கள் மீது தங்களாலும் கல்லெறிய முடியும் என்று, கவிஞர் வைரமுத்துவை கண்டித்து திருச்செங்கோட்டில் நடந்த கூட்டத்தில் சடகோப ராமானுஜ ஜீயர் பேசினார்.
வைரமுத்து வரும் பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாக அறிவித்த அவர், இறை நம்பிக்கையை யார் அவமதித்தாலும் இனி சும்மா இருக்க போவதில்லை என்றார். மேலும் எங்களுக்கும் கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் தெரியும்; ஆனால் அதை செய்ய மாட்டோம் என்றார்.
வைரமுத்து சொல்வது போல், அவர் தன் அம்மாவுக்கு என்ன இடத்தைத் தருகிறாரோ, அதை ஆண்டாளுக்கு தருவதாக இருந்தால், அவர் அம்மாவை உண்மையாகவே வணங்குவதாக நினைத்தால் அவர் ஸ்ரீவில்லிபுத்தூருக்கு வந்து மன்னிப்பு கேட்க வேண்டும். அப்படி கேட்கும் வரை இந்து மக்களாகிய நாம் அனைவரும் ஆண்டாளின் குழந்தைகள் அனைவரும், அவர் மன்னிப்பு கேட்கும் வரை, அறவழியில் போராடுவோம்.
அவசியம் ஏற்பட்டால் ஆங்காங்கே இருக்கக் கூடிய அனைத்து ஊர்களிலும் இருக்கக் கூடிய அனைத்து கடவுளின் குழந்தைகளுக்கும் ஒரு வேண்டுகோள் விடுக்கிறோம்.
பிப். 3ஆம் தேதிக்குள் மன்னிப்பு கேட்காவிட்டால் தொலைபேசி மூலம் தகவல் கூறுவோம். நாங்கள் சொல்வது போல் கூடியிருந்து சொல்வதைக் கேட்கவேண்டும். இனி எவரும் இந்து மதத்தைப் பற்றி பேசாமல் இருக்க வேண்டும். அதற்காக, நாங்கள் சொல்வது போல் நீங்கள் கூடியிருந்து… நீங்கள் கேட்கவேண்டும். அக்கம் பக்கம் இருப்பவர்களையும் நாம் கேட்க வைக்க வேண்டும்!
இப்போது கூட, அதே பிப்ரவரி 3 ஆம் நாள், கொளத்தூரில் ஆண்டாள் குறித்து சர்ச்சை செய்யப் போவதாக கூறியிருக்கிறார்கள். ஏற்கெனவே ஒருவர் வந்து ஸ்ரீவில்லிபுத்தூரில் பேசி விட்டுப் போய்விட்டார். ஆனால் இனி உலகத்தில் எந்தத் தாயையும் எந்தக் கடவுளையும் யாரும் மேடை போட்டு பேசக் கூடாது.
இத்தனை நாட்கள் சாமியார்கள் எல்லாம் சும்மாத்தான் உட்கார்ந்திருந்தோம்.. ஆனால், எங்களாலும் கல்லெறிய இயலும், சோடா பாட்டில் எடுப்போம்… ஆனால்
அப்படி எல்லாம் செய்யக் கூடாது என்று அறவழியில் போராடுவோம்.
ஆண்டாள் தாயாரைப் பழித்துப் பேசியதும் நாம் உணர்ந்த நிலை, இனி இந்து மக்களாகிய யாருக்கும் வரக்கூடாது. என்று பேசினார்.
ஆண்டாள் நாச்சியாரை இழிவாகப் பேசிய வைரமுத்துவைக் கண்டித்து கண்டனக் கூட்டம் திருச்செங்கோடு ஆயிர வைசியர் திருமண மண்டபத்தில் வெள்ளிக் கிழமை மாலை 4 மணிக்கு நடைபெற்றது. இதில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர், கோவை கந்தலோகம் முருகனடிமை பாஸ்கர சுவாமிகள், அகில பாரத துறவியர் பேரவை கொங்கு மண்டல செயலாளர் சுவாமி யுக்தேஸ்வரானந்த புரி மகராஜ், ஆயக்குடி குமார், இந்து முன்னணி மாவட்ட துணைத் தலைவர் இளமுருகன், தேசிய சிந்தனை பேரவை செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
நிகழ்ச்சி ஏற்பாடுகளை திருச்செங்கோடு மாதொருபாகன் இறை பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.