ஜெயலலிதாவின் பிறந்த நாள் வரும் பிப்ரவரி 24-ஆம் தேதிவருகிறது. அதற்குள் டி.டி.வி. தினகரன், அதிமுக., அம்மா என புதிய கட்சி தொடங்கும் பணியில் மும்முரமாக உள்ளார். இதனை தங்க. தமிழ்ச்செல்வன் கூறியுள்ளார்.
அதிமுக., அம்மா அணியில் அனைத்து நகர, ஒன்றிய, பேரூர் கிளை கழகங்களுக்கும் நிர்வாகிகள் நியமிக்கப்படுவார்கள் என்று தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஆண்டிபட்டி தொகுதி அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் தங்க. தமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.
தேனியில் டி.டி.வி. தினகரன் அணி சார்பில் திங்கள்கிழமை நேற்று மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம் நடந்தது. அதில் கலந்து கொண்ட தங்க தமிழ்ச் செல்வன் பேசியபோது…
தேனி மாவட்டத்தில் சசிகலா, டி.டி.வி.தினகரன் ஆகியோருக்கு ஆதரவாக செயல்பட்ட அதிமுக நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகளில் பெரும்பாலானோர் பதவியில் இருந்தும், கட்சியில் இருந்தும் நீக்கப்பட்டுள்ளனர். என்னை மாவட்டச் செயலர் பதவியில் இருந்து நீக்குவதாக அறிவித்தவர்கள், கட்சியில் இருந்து நீக்குவதாகக் கூறவில்லை. டி.டி.வி. தினகரன் உத்தரவுப்படி, அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளை அழைத்து இங்கு செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி வருகிறேன். இதற்காக, என்னையும், கூட்டத்தில் கலந்துகொண்ட ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொண்டர்களையும் அதிமுக விலிருந்து நீக்கிவிடுவார்களா? என்று கேள்வி எழுப்பினார்.
ஆர்.கே.நகர் தொகுதி வெற்றி மூலம் அதிமுக தொண்டர்களும், மக்களும் எங்கள் பக்கம் உள்ளனர் என்பதை நிரூபித்துள்ளோம். உள்ளாட்சித் தேர்தலை விரைவில் சந்திக்க உள்ளோம். வெற்றி பெற்று இரட்டை இலைச் சின்னத்தையும் மீட்போம். அதுவரைக்கும் தான் இந்த திட்டம் என்றார் தங்க தமிழ்ச் செல்வன்.
தமிழக அரசு பாஜகவின் கைப்பாவையாக செயல்பட்டு வருவதே நாங்கள் அடைந்த வெற்றிக்கும், அடையப் போகும் வெற்றிக்கும் முக்கியக் காரணம் என்று கூறிய அவர், அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னம் மீண்டும் நமக்கு வந்து சேருவது உறுதி. அதிமுக அம்மா அணி என்ற பெயரில் கட்சி தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்தக் கட்சியில் கிளை நிர்வாகிகளை நியமிக்க சம்பந்தப்பட்ட நகர, ஒன்றிய, பேரூர் செயலர்களிடம் படிவம் வழங்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவின் பிறந்த நாளான பிப்ரவரி 24-ஆம் தேதிக்குள் அனைத்து கிளைகளுக்கும் நிர்வாகிகளை நியமித்து, புதிய நிர்வாகிகள் பட்டியல் வெளியிடப்பட்டு விடும் என்றார்.