மதுரை:
உதயநிதி ஸ்டாலின் தீவிர அரசியலில் இறங்கப் போவதாகக் கூறியுள்ளது குறித்த கேள்விக்குப் பதிலளித்த மு.க.அழகிரி, அரசியல் ஒரு சாக்கடை, அதில் எந்தக் குப்பை வந்தால் என்ன என்று கூறி அதிர்ச்சி அளித்தார்.
விருதுநகர் மாவட்டம் தாயில்பட்டியைச் சேர்ந்த திமுக., தொண்டர் கொடியரசனின் மகள் கார்த்தீஸ்வரியின் திருமணம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களுக்கு ஆசி அளித்தார் மு.க.அழகிரி. வெளியில் வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி கேட்டனர். அப்போது, அவரிடம், உதயநிதி ஸ்டாலின் அரசியல் பிரவேசம் குறித்து கேட்டனர். அதற்கு அவர் பதில் அளித்த அழகிரி, அரசியல் சாக்கடை தான். அதில் எந்தக் குப்பை வந்து விழுந்தால் என்ன என்று பதிலளித்தார்.
அதன் பின்னர், தொடர்ந்து செய்தியாளர்கள் கேள்வி கேட்கத் தொடங்கினர். ஆனால் வேறு பதில் எதுவும் அளிக்காமல், அங்கிருந்து காரில் ஏறிச் சென்று விட்டார்.
இப்படி உதயநிதியை குப்பை என விமர்சித்தார் மு.க அழகிரி!
சமீப காலமாக திமுகவின் அரசியல் மேடைகளில் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டு பேசி வருகின்றார். திமுகவில் வரிசு அரசியல் இருப்பதாக விமர்சனங்கள் முன் வைக்கப்பட்டு வரும் நிலையில், உதயநிதியின் வருகை குறித்து மேலும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டது.
முன்னதாக, கடந்த ஜனவரியில் ஒரு தனியார் டிவிக்கு பேட்டி அளித்தார் உதயநிதி ஸ்டாலின். அப்போது அவரிடம் மு.க.அழகிரி குறித்தி கேட்கப் பட்டது. அதற்கு பதிலளித்த உதயநிதி, மு.க.அழகிரி கட்சியில் இல்லை; கட்சியில் இல்லாதவரைப் பற்றி பேசத் தேவையில்லை என்று கூறினார்.