தமிழகத்தில் காலங்காலமாக சொல்லப்பட்டு வரும் குற்றச்சாட்டு மத்திய அரசு இந்தியை திணிக்கின்றது என்பதுதான். அண்ணா காலத்தில் இருந்தே தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏற்பட்டதால் தற்போது இந்தியாவிலேயே இந்தி தெரியாத மக்கள் உள்ள ஒரே மாநிலம் தமிழகமாகத்தான் உள்ளது.
நேற்று டெல்லியில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி பேசியபோது, ‘தமிழா்கள் தங்கள் மொழியில் இருந்து பிற மொழிக்கு மாறுமாறு நிர்ப்பந்திக்கப்படுவதாகவும், தமிழா்கள் மீது மாற்று மொழி திணிக்கப்படுவதாகவும் மத்திய அரசை குற்றஞ்சாட்டியுள்ளார்.
ராகுல்காந்தி சொல்வது சாத்தியமா? தமிழ் மொழி, மொழிகளுக்கெல்லாம் முன்னோடி. உலகம் முழுவதும் பரவியுள்ள தமிழ் மொழியை அழிக்க நினைப்பது என்பது கனவிலும் முடியாத காரியம். இணையத்தில் தமிழ் மொழியின் வளர்ச்சியில் இருந்தே இதனை புரிந்து கொள்ளலாம். ஏற்கனவே தமிழர்கள் தற்போது தமிழ், ஆங்கிலம் இரண்டிலும் புலமை பெற்று வருகின்றனர். மூன்றாவது மொழி என்பதை தமிழர்கள் இப்போதைக்கு ஏற்று கொள்ளும் நிலையில் இல்லை. இந்த நிலையில் மத்திய அரசு என்ன? ஐநாவே வற்புறுத்தினாலும் தமிழர்கள் மீது மொழி திணிப்பு என்பது சாத்தியமில்லை. ராகுல்காந்தி என்ன ஆதாரத்தை வைத்து தமிழர்கள் மீது மொழி திணிக்கப்படுவதாக கூறுகின்றார் என்பது தெரியவில்லை. அப்படியே திணிக்க முயற்சித்தாலும் அது தோல்வியில்தான் முடியும்