பழநி:
வரும் தை மாதத்தில் சுமார் 60 ஆண்டுகளுக்குப் பின் தைப்பூச தினத்தில் சந்திர கிரகணம் வருகிறது. கிரகணத்தை அடுத்து பழநி கோவில் நடை மாலையில் அடைக்கப்படுகிறது. எனவே, தைப்பூச தேரோட்டம் காலையில் நடக்கிறது.
பழநி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழா 2018ம் ஆண்டு ஜன.25ஆம் தேதி துவங்கி, பிப்.3 ஆம் தேதி வரை நடக்கிறது. முக்கிய நிகழ்ச்சியாக ஜன.30ஆம் தேதி திருக்கல்யாணமும், ஜன.31ஆம் தேதி தைப் பூச தினத்தன்று தேரோட்டமும் நடக்கிறது.
இந்த வருடம் தைப்பூச தினத்தன்று பௌர்ணமி வருகிறது. அன்று, சந்திர கிரகணம் மாலை 6:22 முதல் இரவு 8:41 வரை நிகழ்கிறது. இதனால் தேரோட்டம் பகல் 11:00 மணிக்கு நடக்கிறது. கோவிலில் மாலை 5:30க்கு நடைபெறும் சாயரட்சை பூஜை, மதியம் 2:45க்குத் துவங்கி 3:45க்கு நடை அடைக்கப்படுகிறது.
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன் இதே போல் தைப்பூச தினத்தன்று சந்திர கிரகணம் வந்து, பகலில் தைப்பூச தேரோட்டம் நடந்ததாக கோவில் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.