மதுரை:
மதுரையில் புகழ்பெற்ற சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம், வரும் ஏப்.,30 ஆம் தேதி நடைபெறுகிறது.
புகழ்பெற்ற சித்திரைத் திருவிழா நிகழ்வுகள் குறித்து வெளியிடப் பட்ட விழா நிகழ்ச்சிகளின் படி, இந்த வருடம் ஏப்., 15 ஆம் தேதி, தல்லாகுளம் பிரசன்ன வேங்கடாசலபதி கோவிலில் காலை 8.15க்கு கொட்டகை முகூர்த்தம் நடைபெறுகிறது.
ஏப்.28ஆம் தேதி மாலை 4.45க்கு அழகர்கோவில் கொண்டப்ப நாயக்கர் மண்டபத்தில் இருந்து மதுரைக்குப் புறப்படுகிறார் கள்ளழகர்.
ஏப்.29ஆம் தேதி மூன்று மாவடியில் கள்ளழகர் எதிர்சேவை நடக்கிறது.
சித்ரா பவுர்ணமி தினமான ஏப்.30 ஆம் தேதி அதிகாலை 5.45க்கு மேல் காலை 6.15க்குள், தங்கக்குதிரை வாகனத்தில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்குகிறார்.
அதன் பின்னர் ராமராயர் மண்டபத்தில் தீர்த்தவாரி உற்சவம் முடிந்து, வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோவிலில் இரவு எழுந்தருள்கிறார்.
மே 1ஆம் தேதி தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு மோட்சம் கொடுத்தல் நிகழ்வும், இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
மே 2ஆம் தேதி அதிகாலை மோகனாவதாரத்தில் கள்ளழகர் காட்சியளித்தல் நிகழ்வும், மதியம் ராஜாங்க அலங்காரத்தில் கள்ளழகர் அருள்பாலித்தல், இரவு சேதுபதி மண்டபத்தில் பூப்பல்லக்கு நிகழ்ச்சிகள் ஆகியவை நடைபெறுகின்றன.