கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி அருகே இன்று காலை அதிவேகமாக வந்த கார் மோதி 4 பேர் பலியாயினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்தக் காரை சாலையில் தள்ளி தீவைத்துக் கொளுத்தினர். பின்னர் சாலைமறியலில் ஈடுபட்ட அவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்திக் கலைத்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் கந்திகுப்பம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கந்திகுப்பம் பஸ் நிறுத்தம் அருகே இன்று காலை திருமண கோஷ்டியினர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது சென்னையில் இருந்து கிருஷ்ணகிரியை நோக்கி அந்த வழியாக கார் ஒன்று பஸ் நிறுத்தம் அருகே வந்த போது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் சாலையைக் கடக்க முயன்றனர்.
திடீரென அவர்கள் வந்ததால், சடன் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்த முயன்றார் கார் ஓட்டுநர். ஆனால் பிரேக் பிடிக்காமல் கட்டுப்பாட்டை இழந்த கார் தாறுமாறாக ஓடி மோட்டார் சைக்கிள் மீது மோதியது. எனினும் பிரேக் பிடிக்காமல் ஓடிய கார், கந்திகுப்பம் பஸ் நிறுத்தம் அருகே சென்ற திருமண கோஷ்டியினர் மீது பயங்கரமாக மோதி நின்றது. இதனால் பயந்து போன கார் டிரைவர் கீழிறங்கி தப்பி ஓடிவிட்டார்.
இந்த கோர விபத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரும், திருமண கோஷ்டியை சேர்ந்த 2 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். தர்மன் (40, மருதே பள்ளி), வனஜா(45, மல்லவாடி), கோகுல் (17 கந்திகுப்பம்), பரத்குமார்(18, கந்தி குப்பம்) ஆகியோர் உயிரிழதனர். காயம் அடைந்த நெட்லகுட்டை பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன் (40), ஜிஜேந்திரன் (14), ராஜ்குமார் (35) ஆகிய 3 பேருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த கோர விபத்தை நேரில் பார்த்த பொதுமக்கள் அலறி அடித்து ஓடி வந்து, காயம் அடைந்தவர்களை மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி மக்கள் விபத்தை ஏற்படுத்திய காரை சாலையின் ஓரத்திற்கு இழுத்துச் சென்று தலைகுப்புறக் கவிழ்த்தி பெட்ரோல் ஊற்றி தீவைத்துக் கொளுத்தினர். அதன் பின்னர் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தப் பகுதியில் அடிக்கடி விபத்து நிகழ்வதால், நெடுஞ்சாலையில் மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
இதனால் கந்திகுப்பம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. வாகனங்கள் செல்ல முடியாமல் வரிசையாக அணிவகுத்து நின்றன. இதைத் தொடர்ந்து விரைந்து வந்த கந்திகுப்பம், பர்கூர் போலீசார் பொதுமக்களை சமாதானப்படுத்தியும் அவர்கள் கலைந்து செல்லாததால், திடீரென தடியடி நடத்தினார்கள். இதனால் மறியல் செய்தவர்கள் நாலாப்புறமும் சிதறி ஓடினர். இதனால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.