- Advertisement -
Home About Us

About Us

bharathiar ts chokkalingam, an sivaraman
bharathiar ts chokkalingam an sivaraman

தினசரி – இந்தப் பெயருக்கே ஒரு மகிமை உண்டு. தமிழ் பத்திரிகை உலக வரலாற்றில் மகாகவி பாரதியார் பெரும் பங்காற்றினார் என்றால், அவர் பெயருடன் சேர்ந்தே அடையாளம் காணப்படும் சுதேசமித்திரன், பின்னர் தினமணி ஆகியவை சுதந்திரப் போராட்ட காலத்தில் பெரும் மரியாதையுடன் அடையாளம் காணப்பட்டது.

தமிழக பத்திரிகை உலக வாசகர்களின் மத்தியில் நெல்லை மண்ணைச் சேர்ந்த மகாகவியும், டி.எஸ்.சொக்கலிங்கமும், ஏ.என்.சிவராமனும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருந்தார்கள். தினமணி நாளிதழின் துவக்கம் டி.எஸ்.சொக்கலிங்கத்தை மையமாகக் கொண்டிருந்தது.

ஆனால் பின்னாளில், பணியாளர்களின் ஊதியப் பிரச்னை தொடர்பாக நிர்வாகத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டில், உடன் பணியாற்றிய சிலருடன், தினமணியில் இருந்து வெளியேறிய தென்காசி – டி.எஸ்.சொக்கலிங்கம் தினசரி என்ற இதழைத் தொடங்கினார்….ஒரு பத்தாண்டு காலம் அது நல்ல முறையில் வெளிவந்தது.

ஆயினும் தொடர்ந்து நடத்த இயலாமல் போனது அவருக்கு! பொருளாதாரச் சிக்கல்கள்.  பின்னாளில் அவர் மீண்டும் தினமணியிலேயே பணிக்குச் சென்றார். அவருடைய சீடரான ஏ.என்.சிவராமன் தூண்டுதலில்.  ஆனால், ஆசிரியர் பொறுப்பில் அன்றி, நிர்வாகப் பணியில்! மணம் செய்து கொள்ளாமல் பத்திரிகை உலகுக்காகவும் தமிழுக்காகவும் வாழ்ந்த டி.எஸ்.சொக்கலிங்கத்துக்கு அவரது இறுதிக் காலம் வரை, ஏ.என்.சிவராமன் தன்னாலான உதவிகளைச் செய்து வந்தார்.

அவ்வாறு தமிழ்ப் பத்திரிகை உலகில் அறியப்பட்ட தினசரி, பின்னாளில் வேறு சிலரால் சிறிய அல்லது பெரிய கால இடைவெளிகளில் நடத்தப் பட்டது. அவ்வப்போது தொடங்குவதும் நடத்துவதும் தொடர்வதும் நிறுத்துவதுமாக இருந்த தினசரி அச்சுப் பதிப்பு தற்போது நின்று விட்டது. அது வெளிவரவில்லை. ஆனால், எங்கள் ஊர்க்காரர் டி.எஸ். சொக்கலிங்கத்தின் மீதான மதிப்பின் காரணத்தால், தினசரி என்ற இந்தப் பெயரைக் கைவிட ஒரு பத்திரிகையாளனான எனக்கு மனதில்லை. தென்காசி டி.எஸ். சொக்கலிங்கம், ஆம்பூர் நா. சிவராமன் ஆகியோரின் மீதுள்ள பற்றின் காரணத்தாலும், இவர்களை முன்னோடிகளாகக் கொண்டு பத்திரிகைத் துறையில் ஈடுபட்ட காரணத்தாலும், இவர்களின் அடியொற்றி என் பெயரிலும் செங்கோட்டையைச் சேர்த்து செங்கோட்டை ஸ்ரீராம் என்றே அமைத்துக் கொண்டு இதழியல் பணியில் ஈடுபட்டு, எழுதியும் வருகிறேன்.

பெரும் பணம் படைத்தவர்களே அச்சு இதழை நடத்தத்  திக்கித் திணறும்போது, என்னைப் போன்ற தனிநபரால் அது சாத்தியமில்லை. எனவே எனக்குப் பழக்கப்பட்ட இணையத்தில் தினசரியை உலவ விட உறுதி கொண்டேன்.

இருப்பினும், பெயர்க் குழப்பம் வந்துவிடக் கூடாது என்பதால், “தமிழ் தினசரி” என்றோ, “தினசரி இணையம்” என்றோ இதன் பெயரை பதிவிட யோசனை தெரிவித்தனர் நெருங்கிய நண்பர்கள்.

சிறு வயது முதல் நெல்லை மண்ணின் சுதந்திரப் போராட்ட வீரர்கள், பிரபலங்களின் வாழ்க்கை வரலாறுகளைக் கேட்டு வளர்ந்த எனக்குள், எங்கள் ஊர்க்காரரான ஆசிரியர்  டி.எஸ்.சொக்கலிங்கமும் ஆம்பூரைச் சேர்ந்த ஏ.என்.சிவராமனும் பெரிதாகத் தெரிந்தார்கள். அவர்கள் பணி செய்த தினமணியிலேயே பணி செய்யும் பேறு எனக்குக் கிட்டியது.

அவ்வாறு இருந்த காலத்தில், அன்றைய தினமணியில் அவர்கள் செய்த புதுமைகள், எழுதிய கட்டுரைகள் ஆகியவற்றைப் பார்க்கும் வாய்ப்பும் கிடைத்தது. நல்ல தமிழ் நடை, செய்திகளில் உள்ள தெளிவு யாவும் தினமணியின் அன்றைய ஆசிரியர்கள், ஆசிரியர் குழுவினர், இதழியல் முன்னோடிகள் நமக்கு இட்ட பிட்சையாகக் கொண்டு கடந்த 5 வருடங்களாகப் பணியாற்றினேன்... அச்சு மற்றும் இணையத்தில்!

தினமணி இணையத்தில் ஆசிரியப் பணியில் இருந்த போது, பரபரப்பாக இயங்கும் தன்மை, பல்வேறு குணாதிசயங்கள், வட்டார மொழி கலாசார பின்புலம் கொண்ட நிருபர்களுடன் பேசி அவர்களுடன் கொண்ட பிணைப்பு… எல்லாம் புதிய அனுபவத்தைத் தந்தன. அந்த அனுபவத்தை விடாமல் தொடரவும், அச்சு ஊடக பின்புலம் இல்லாமல் கட்டற்ற வகையில் நேர்மையாக செய்திகளைத் தரும் வகையிலும் ஏன் இணைய ஊடகத்தைத் தொடங்கக் கூடாது என்ற என் எண்ணத்தால் எழுந்தது இந்த முயற்சி.

இந்த முயற்சியில், போகப் போக சில மாற்றங்களைச் செய்ய  எண்ணம் உண்டு. குறிப்பாக, செய்திகளின் தரம் அறிந்து தமிழறிவுடன் தங்கள் திறமையை வெளிக்காட்டும் பகுதி நேர செய்தியாளர்கள் குழுவை அமைத்து பயணிக்க திட்டமும் உண்டு.

இது வெறும் இணையம் தானே என்று எண்ணாமல், தங்கள் தமிழறிவையும் நுணுக்கத்தையும் கற்றுக்கொள்ள விழையும் இளைஞர்களுக்கு என் அனுபவங்களைக் கற்றுக் கொடுத்து தயாராக்க ஆசை.

இத்தகைய பின்புலத்தில் தினசரி தமிழ் இணையத்தைத் துவங்கி, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறேன். இது தொடங்கும் முன்னதாக, சமூக வலைத்தளமான பேஸ்புக்கில் இது குறித்து ஒரு செய்தி வெளியிட்டேன். அதற்கு நட்பு வட்டாரம் அளித்த ஆதரவு பிரமிப்பாக இருந்தது. சிலர், எப்போது இதனை செயல்படுத்துவீர்கள், என்னையும் உங்கள் குழுவில் இணைந்து செய்தியாளராகப் பரிமளிக்க வையுங்கள் என்று அன்பு வேண்டுகோள் விடுத்தனர்.

முதலில் இந்தத் தளத்தை சிறிய அளவில், குறைந்த பகுதிகளுடன் கொண்டு சென்று, பின்னாளில் விரிவாக்கலாம் என்று கருதுகிறேன்.

ஆக, இனி குழு முயற்சியாக “சேர வாரும் ஜெகத்தீரே” என்ற அழைப்புடன் இணையத்தில் செய்திப் பணியைத் துவங்குவோம்!

அன்பன்,

செங்கோட்டை ஸ்ரீராம்

(பத்திரிகையாளர் / எழுத்தாளர்)

தினசரி தளம்,
எஃப் 101, விஜிஎன் சதர்ன் அவின்யு,
பொத்தேரி,  சென்னை 600 004
கைபேசி எண்: +91 88388 53843

Tamil Dhinasari -Tamil News portal

Developed and Maintained by - Senkottai Sriram

SSS Media,

F - 101, VGN Southern Avenue,
Potheri, Chennai - 603 203
Cell No., : +91 88388 53843
Mail your suggestions to: dhinasarinews@gmail.com

Managing Team

CEO / Editor :

S. Sriram (Sengottai Sriram)

 

Advisor:

Sri. Srinivasan
CEO, Reyvish Group of companies, Madurai

Administrator:

S. Venkatesh
CEO, SGP Stamps, Madurai

Exit mobile version