குரு பெயர்ச்சி பலன்கள் – 06.04.2021 முதல் 13.04.2022 வரை – துலாம்
குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 12.24.45க்கு பெயர்கிறார். அவர் இந்த ராசியில் 14.09.21 வரையிலும் பின் 20.11.21 முதல் 13.04.2022 மாலை 03.50.02 மணி வரையிலும் சஞ்சரிக்கிறார். பின் மீன ராசிக்கு இடையில் 14.09.21 முதல் 20.11.21 வரை மகர ராசியில் சஞ்சாரம்.
இந்த ஓராண்டுக்கான ராசிபலன்களை இங்கே பார்க்கலாம்…
குறிப்பு : குரு பகவான் கும்பத்திலும் பின் மகரத்திலும் பின் கும்பத்திலுமாக இந்த வருடம் சஞ்சரிக்கிறார். 20.06.2021 முதல் வக்ர கதியடைந்து 13.09.21ல் மகரத்தில் வக்ரியாக நுழைகிறார். பின்18.10.21ல் வக்ர நிவர்த்தி அடைந்து 14.11.21ல் கும்பத்தில் மீண்டும் ப்ரவேசிக்கிறார். ஒவ்வொரு மாதத்தில் மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டு பலன்கள் ராசிக்கு பொதுவாக எழுதப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு முடிவு செய்யாமல் , தனிப்பட்ட ஜாதகத்தில் குரு பலத்தைப் பொறுத்து நன்மையும் தீமையும் அமையும். அருகில் உள்ள ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தைக் காட்டி அவரவர்க்கான தனிப்பட்ட பலாபலன்களைக் கேட்டுக் கொள்வதே சரியானது.
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : [email protected]
துலாம் : (சித்திரை 3,4 பாதங்கள், ஸ்வாதி 4 பாதங்கள் , விசாகம் 1,2,3 பாதங்கள் முடிய) :
பொது (பொருளாதாரம், ஜீவனம்) : உங்கள் ராசிக்கு 5ல் வந்திருக்கிறார் பின் 4ம் இடம் திரும்ப 5ம் இடம் என்று வருடம் முழுவதும் சஞ்சாரம். பொதுவா 5ல் சஞ்சரித்தால் குழந்தை பிறக்கும். புதியவீடு குடிபோகுதல், பொருளாதாரம் பூரணமாக இருத்தல், வளர்ச்சி பாதை நோக்கி செல்லுதல் என்று இருக்கும்.
4லில் அவ்வளவு நல்ல பலன் இல்லை ஆனாலும் பார்வை பலத்தினால் நன்மை உண்டு. இந்த வருடம் தேவைகள் பூர்த்தியாகும். இதுவரை தடங்கலாக இருந்த எந்த ஒரு விஷயமும் இனி பூர்த்தியாகி மகிழ்ச்சியை தரும்.
பெரிய அளவில் பண வரவு இருக்கும். சேமிப்பு அதிகம் ஆகும். மற்ற கிரஹ சஞ்சாரங்களும் பெரிய பாதிப்பை தரவில்லை, 4ல் சனி ஆட்சி சுகஸ்தானம், தாயார் ஸ்தானம் மட்டுமல்லாது பூமி லாபமும் கூட அந்த சனிபகவானை 2ல் இருக்கும் கேது பார்ப்பது ஆசைப்பட்ட வீடு வாங்கும் யோகம் உண்டாகும். மேலும் செவ்வாயின் பலமும் வீட்டை உறுதி படுத்தும்.
இதுவரை சங்கடத்தை கொடுத்துவந்த வழக்குகள் சாதகம் ஆகும் மேலும் திருமணம் கைகூடும் இல்லத்தில் சுப நிகழ்ச்சிகளால் புதிய உறவுகளால் மகிழ்ச்சி ஏற்படும். பணப்புழக்கம் தாராளமாக இருப்பதாலும் தெய்வ அனுகூலம் இருப்பதாலும் பிரயாணங்களால் நன்மை, கோயில் செல்லுதல், சமூகத்தில் அந்தஸ்து கூடுதல், எதிரிகள் மறைதல், எதிலும் வெற்றி என்று இருக்கும்.
அதே நேரம் 13.09.21 முதல் 18.10.21 வரையில் கொஞ்சம் மருத்துவ செலவுகள் முயற்சிகளில் தாமதம், நண்பர்களால் தொல்லை, இல்லத்தில் சலசலப்பு பணி மிக தாமதமாக செல்லுதல், அரசு வழியில் ஆதரவில்லை, கடன்வாங்கும் சூழல் என்று சில சங்கடங்கள் இருக்கும் ஆனால் பெரிய பாதிப்பில்லை. இந்த வருடம் உங்கள் எண்ணங்கள் தேவைகள் பூர்த்தியாகி மகிழ்ச்சி அதிகரிக்கும்.
குடும்பம் : கணவர் மனைவி ஒற்றுமை நீடிக்கும். பெற்றோர், பிள்ளை மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும், வாக்கு எடுபடும். உறவினர்களிடம் மரியாதை கூடும். புதிய வீடு, வாகனம், ஜீவன வகையில் லாபம் என்று இருக்கும். தடைபட்ட திருமணம் கைகூடும். நீண்ட காலம் குழந்தைபேறு எதிர்பார்த்து இருந்தோருக்கு குழந்தை பிறக்கும். வசதிகள் கூடும். ஆடை ஆபரண சேர்க்கை இருக்கும். பிள்ளைகளுக்கு தேவையானதை கொடுக்கும் நிலை ஏற்படும்.
ஆரோக்கியம் : தாயார் வழியில் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும், மருத்துவ செலவு இருந்து கொண்டிருக்கும். 13.09.21-18.10.21 வரையில் கவனம் தேவை பிரயாணங்கள் சிறு விபத்து காயங்களை உண்டாக்கலாம். தாயார் ஆரோக்கியத்தில் மேலும் அதிக மருத்துவ செலவு கொடுக்கும். வீடு நிலம் விஷயத்தில் மன உளைச்சல் ஏற்படலாம். தியான பயிற்சி, மருத்துவ ஆலோசனையை பின்பற்றுவது என்று இருந்தால் இவை குறையும்.
வேலை: புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு எதிர்பார்த்த வேலை கிடைக்கு, சிலருக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு என்று பணவரவு அதிகரித்து தேவைகள் பூர்த்தியாகும். விரும்பிய இடமாற்றம் வெளிநாட்டு வேலை இவை உண்டாகும் அலுவலகத்தில் நல்ல பெயர் இருக்கும். 13.09.21 முதல் 18.10.21 வரையில் வேலை பளு அதிகரிக்கும், எதிர்பார்த்த பதவி தாமதம் ஆகும், சக ஊழியர்களுடன் விரோதம் உண்டாகும். வாக்கு தடிக்கும். கவனமாக இருக்க வேண்டும். வேலை இழப்புக்கு காரணமாக 2ல் இருக்கும் கேதுவும், 12ல் வரும் சூரியனின் சஞ்சாரமும் இருக்கலாம். பொறுமையும் நிதானமும் வார்த்தைகளை விடுவதில் கவனமும் இருந்தால் பெரிய பாதிப்புகள் இல்லை.
சொந்த தொழில் : கலைத்துறையில் சொந்த தொழில் செய்வோர், அரசு தொடர்பு தொழில் செய்வோர், பால், உணவு பொருட்கள் ஷேர் மார்கெட் போன்றவர்கள் சிறப்பான முன்னேற்றத்தை அனுபவிப்பர். மற்றவர்களுக்கும் நல்ல ஏற்றம் இருக்கும். தொழில் விரிவாக்கம் நல்ல முறையில் உண்டாகும் எதிரிகள் மறைந்து வெற்றி அதிகரித்து பணம் கொழிக்கும். முயற்சிகள் எளிதில் வெற்றி அடையும். அரசாங்க உதவி வங்கி கடன் எளிதில் கிடைக்கும். கிடைக்கும் சந்தர்பங்களை பயன்படுத்தினால் அடுத்த சில ஆண்டுகள் வரையிலும் கூட பெரிய துன்பங்கள் இருக்காது தொழில் நன்றாக இருக்கும். வரும் செப்டம்பர் அக்டோபர் மாதங்களில் நிதானம் தேவை தொழிலாளர்கள் உடல் நலம் பாதிக்கும் செலவுகளை உண்டாக்கும். பொருள் பாதுகாப்பையும் தொழிற்ச்சாலை பாதுகாப்பையும் சரியாக செய்யவும் தொழிலாளர்கள் நலனை காக்க உண்டான முயற்சிகளையும் சரியாக செய்தால் பெரிய பாதிப்பு இல்லை.
கல்வி : மாணவர்கள் சிறப்பாக படிப்பார்கள். மேல்படிப்பு படிக்க விரும்புவோர் தங்கள் முயற்சிகளுக்கு ஏற்ற வருடம் இது. வெளிநாட்டு படிப்பும் கைகூடும், உயர்ந்த கல்வி விரும்பிய கல்லூரி கிடைக்கும், சில சமயம் மந்த உணர்வு தோன்றும் ஆனாலும் பெற்றோர் பெரியோர் ஆசிரியர்கள் ஆலோசனை படி நடப்பது நலம் தரும். போட்டி பந்தயங்கள் வெற்றியை தரும்.
ப்ரார்த்தனைகள் : நன்மை மிக அதிகம் இருப்பதால் நரசிம்மரை வழிபடுங்கள் தங்கள் தேவைகள் பூர்த்தியாவதால் குலதெய்வ வழிபாடு அபிஷேகம் வஸ்திரம் சாற்றுதல் போன்றவை செய்யுங்கள். முடிந்த அளவு அன்னதானம், வஸ்திரதானம் எளியோருக்கு உதவி செய்வது என்று இருப்பதால் தீமைகள் கஷ்டங்கள் தீர்ந்துவிடும்.