குரு பெயர்ச்சி பலன்கள் – 06.04.2021 முதல் 13.04.2022 வரை – விருச்சிகம்
குருபகவான் மகர ராசியில் இருந்து கும்ப ராசிக்கு வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இரவு 12.24.45க்கு பெயர்கிறார். அவர் இந்த ராசியில் 14.09.21 வரையிலும் பின் 20.11.21 முதல் 13.04.2022 மாலை 03.50.02 மணி வரையிலும் சஞ்சரிக்கிறார். பின் மீன ராசிக்கு இடையில் 14.09.21 முதல் 20.11.21 வரை மகர ராசியில் சஞ்சாரம்.
இந்த ஓராண்டுக்கான ராசிபலன்களை இங்கே பார்க்கலாம்…
குறிப்பு : குரு பகவான் கும்பத்திலும் பின் மகரத்திலும் பின் கும்பத்திலுமாக இந்த வருடம் சஞ்சரிக்கிறார். 20.06.2021 முதல் வக்ர கதியடைந்து 13.09.21ல் மகரத்தில் வக்ரியாக நுழைகிறார். பின்18.10.21ல் வக்ர நிவர்த்தி அடைந்து 14.11.21ல் கும்பத்தில் மீண்டும் ப்ரவேசிக்கிறார். ஒவ்வொரு மாதத்தில் மற்ற கிரஹ சஞ்சாரங்களையும் கருத்தில் கொண்டு பலன்கள் ராசிக்கு பொதுவாக எழுதப்பட்டு இருக்கிறது. இதைக் கொண்டு முடிவு செய்யாமல் , தனிப்பட்ட ஜாதகத்தில் குரு பலத்தைப் பொறுத்து நன்மையும் தீமையும் அமையும். அருகில் உள்ள ஜோதிடரிடம் தங்கள் ஜாதகத்தைக் காட்டி அவரவர்க்கான தனிப்பட்ட பலாபலன்களைக் கேட்டுக் கொள்வதே சரியானது.
லக்ஷ்மீ ந்ருஸிம்ஹாச்சாரி (ரவி சாரங்கன்)
ஜோதிடர், ஸ்ரீசார்வபௌம ஜோதிட நிலையம்
D1, Block 1, அல்சா கிரீன்பார் குடியிருப்பு
ஹஸ்தினாபுரம் பிரதான சாலை, நேரு நகர்
குரோம்பேட்டை, சென்னை – 600 044
ஃபோன் நம்பர் : 044-22230808 / 8056207965 (வாட்ஸப்)
Email ID : [email protected]
விருச்சிகம் : (விசாகம் 4ம்பாதம், அனுஷம் 4 பாதங்கள், கேட்டை 4 பாதங்கள் முடிய):
பொது (பொருளாதாரம், ஜீவனம்) : பொதுவா குருபகவான் 3,4ல் இருந்தால் பெரிய நன்மைகளை செய்வதில்லை ஜீவன வகையில் பிரச்சனை நண்பர்கள் உறவுகளால் தொல்லை, வழக்குகள் சாதகமற்ற நிலை இப்படியெல்லாம் இருக்கும் என்று பாடம் ஆனால் குரு பகவான் மனோ திடத்தையும், பார்வையால் நன்மைகளையும் செய்வதால் பலருக்கும் மேற்படி கஷ்டங்கள் மிக குறைவாகவே இருக்கும்.
இந்த வருடம் 4ல் சஞ்சாரம் பின் 13.09.21 முதல் 14.11.21 வரை 3ல் மற்றும் அதன் பின் திரும்ப 4ல் என்று சஞ்சரிக்கிறார். பெரிய அளவில் கஷ்டம் என்பது ஜென்ம கேது 7ல் ராகு இவர்களால் மட்டும் உண்டாகும். அதை மற்ற கிரஹங்களின் சஞ்சாரங்கள் சமன் செய்து தீமைகளை குறைக்கிறது.
உங்கள் முயற்சி தாமதம் உண்டாகும் சில சமயம் கடும் முயற்சிக்கு பின்னர் வெற்றி உண்டாகும். எதையும் யோசித்து செயல்படவேண்டும். குரு ஜீவன ஸ்தானத்தை நேரடியாக பார்ப்பதால் பணவரவு தாராளமாக இருக்கும் சிக்கணம், யோசித்து செலவு செய்தல் போன்றவை பணப்பற்றாக்குறையை போக்கும். சூரியன் செவ்வாய் சஞ்சாரமும் புதனின் வக்ர நிலைகளும் அதிகப்படியான நல்ல பலனை தரும். பொதுவாக இந்த வருடம் தேவைகள் கடும்முயற்சிக்கு பின்னர் பூர்த்தியாகும்.
பணவரவும் இருக்கும் செலவும் உண்டாகும். பரவாயில்லை என்ற அளவில் இருக்கும். எதையும் கவனத்துடன் ஆலோசித்து நல்லவர்கள் ஆலோசனை பெற்று பின் செயலில் இறங்கினால் வாழ்க்கை வளமாக இருக்கும்.
குடும்பம் : கணவன் மனைவி ஒற்றுமையில் விட்டுக்கொடுத்தால் பிரச்சனையில்லை வாழ்க்கை துணைவரின் வார்த்தைகளுக்கு மதிப்பு கொடுத்து அனுசரித்து போனால் வாக்குவாதங்களில் ஈடுபடாமல் இருந்தால் சுகம் உண்டாகும். பிள்ளைகளாலும் பெற்றோராலும் மன கசப்பு விரோதம் உண்டாகும். இருந்தாலும் செவ்வாயும் சூரியனும் ஒரு மகிழ்ச்சியை குடும்பத்தில் உண்டாக்குவர். புதியவரவு நன்மை செய்யும். திருமணம் குழந்தை பாக்கியம் போன்றவை பெருமுயற்சிக்கு பின் வெற்றி தரும். குடும்பம் மற்றும் உறவுகள் அக்கம்பக்கத்தாரோடு அனுசரித்தும் கோபத்தை தவிர்த்தலும் நன்மை தரும்.
ஆரோக்கியம் : வாழ்க்கை துணைவர் உடல் ஆரோக்கியம் சிறுபாதிப்பு தரும் மருத்துவ செலவு உண்டாகும். பெற்றோர் பிள்ளைகள் சகோதரவகை இப்படி எவருக்காவது சில மருத்துவ செலவுகளை செய்ய வேண்டி இருக்கும். பெரிய அளவில் கஷ்டம் இருக்காது. தியான பயிற்சிகள் தகுந்த மருத்துவ ஆலோசனைகளை கடைபிடித்தல் என்பது ஆரோக்கியத்தை மேம்படுத்தும்.
வேலை: உத்தியோகத்தில் பெரிய பிரச்சனைகள் வராது. வாக்குவாதங்களை தவிர்த்தால் போதும். வேலை பளு இருந்து கொண்டிருக்கும். 3ல் இருக்கும் சனி மன உறுதியை கொடுத்து 5ம் இடம், 12ம் இடம் பார்ப்பதால் எதிர்பாராத பதவி சம்பள உயர்வு என்று இருக்கும். மேலும் நல்ல பெயர் கூடும். வேலையில் ஆர்வம் வரும். உயர் அதிகார பொறுப்பில் இருப்பவர்களை விட கீழ்நிலையில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு உண்டாகும். பண தேவைகள் பூர்த்தியாகும். 10ம் இடத்தை குரு நேரடியாக பார்ப்பதால் வேறு வேலை அல்லது வேறு இடம் மாற்றம் என்று இருக்கும் அதுவும் நன்மை தருவதாக இருக்கும். பலன் குறைவாக இருந்தாலும் உத்தியோகம் நிலைத்து இருக்கும்.
சொந்த தொழில் : வட்டிக்கு விடுதல், பண பரிவர்த்தனை செய்வோர், சேர்மார்க்கெட், நகை வியாபாரம், நகை தயாரித்தல், ஃபேன்ஸி கடைகள், கொஞ்சம் அதிகம் பாதிப்பு அல்லது மந்த நிலை இருந்து கொண்டிருக்கும். பண விஷயத்தில் உஷாராக இருக்க வேண்டும். மற்ற அனைத்து தொழிலுக்கும் பெரிய பாதிப்பு இல்லை எனினும் கணக்கு வழக்கை சரியாக வைத்து இருக்க வேண்டும். கூடுமான வரையில் கடன் வாங்குவதை தவிர்த்தல் நலம் தரும். புதிய தொழில் முயற்சிகளை வருட கடைசியில் தள்ளி போடுவதும் பண இழப்பை தவிர்க்க உதவும். பொதுவாக தொழிலில் நேர்மையாக இருப்போருக்கு பெரிய ஆபத்துகள் இல்லை சுமாராக வருமானம் வந்து தொழில் நன்றாக இருக்கும்.
கல்வி : மாணவர்களுக்கு மறதி மந்த நிலை இருப்பதால் மதிப்பெண்கள் குறைய வாய்ப்புள்ளது. அதிக முயற்ச்சி எடுத்து படிக்க வேண்டும். விரும்பிய பாடம், விரும்பிய கல்லூரி, வெளிநாட்டு படிப்பு போன்ற முயற்சிகளில் அதிக பிரயத்தன பட வேண்டி இருக்கும். பெற்றோர் ஆசிரியர்கள் ஆலோசனைப்படி நடப்பது நலம் தரும். நண்பர்கள் சேர்க்கையில் கவனம் தேவை பணம் சம்பந்தப்பட்ட விஷயங்களில் பெற்றோருடைய கவனம் அவசியம். பொதுவாக ஓரளவு மதிப்பெண் பெறுவார்கள் கல்வி தடைபடாது.
ப்ரார்த்தனைகள் : ராசிக்குறிய முருகனை வழிபடுவது அருகில் உள்ள முருகர் கோயிலுக்கு சென்று உழவாரப்பணி செய்வது விளக்கேற்றுவது சஷ்டி கவசம் படிப்பது, நாம ஜெபம் செய்வது முடிந்த வரை தான தர்மங்களை செய்வது பொறுமை அமைதி எப்பொழுதும் இறைத்யானம் இவை இருந்தால் இந்த வருடத்தை சுலபமாக கடந்துவிடலாம்.