லண்டன் கோல்ட்ஸ்மித்ஸ் பல்கலைக்கழகத்தில் செப்டம்பர் மாதம் முதல் மாட்டிறைச்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பூமியின் காற்று மண்டலத்தின் மேல் பகுதியில் மிதக்கும் வாயுக்கள் மற்றும் துகள்களின் அடர்த்தி அதிகரித்தால், சூரியக் கதிர்கள் பூமி மீது படுவதால் உண்டாகும் வெப்பம் வெளியேறாமல், காற்று மண்டலத்தின் கீழ் பகுதியிலேயே தங்கிவிடும். இதைத்தான் ‘பசுமை இல்ல விளைவு’ என்று விஞ்ஞானிகள் அழைக்கின்றனர்.
பசுமை இல்ல விளைவால் பூமி வேகமாக சூடேறும். இதனால் தான் பருவநிலை மாற்றம் ஏற்படுகிறது. இந்த ‘பசுமை இல்ல வாயு’ வில் 14.5 விழுக்காடு பால்தரும் மாடுகள் உமிழும் மீத்தேனால் தான் உருவாகிறது என்பதை பருவநிலை மாற்றத்திற்கான குழு அறிக்கை குறிப்பிடுகிறது.
நான் தொடர்ந்து பால் தரும் மாடுகள் உமிழும் மீத்தேன் வாயுவால் குறித்து பல கட்டுரைகளை எழுதியுள்ளேன்.ஆனால், தொடர்ந்து என்னை கேலி செய்தும் பல தமிழ் ஆர்வலர்கள் (?), வித்தகர்கள் (?) விமர்சித்து கொண்டிருப்பது குறித்து நான் கவலைப்படவில்லை.
தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் நெறியாளர் ஒருவர் கூட இது குறித்து என்னை அலட்சியப்படுத்தி பேசியபோது கூட அவரின் அறியாமையை நினைத்து தான் வருந்தினேன். பாஜக அரசு, மிருகவதை தடுப்பு (கால் நடை சந்தைகளை) ஒழுங்குபடுத்துதல் விதிகள் 2017 ஐ கொண்டுவந்ததே பருவநிலை மாற்றத்தில் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கத்தான்.
ஆனால் சில எதிர்க்கட்சிகளும், முற்போக்கு அடைமொழி சூட்டிக்கொள்கிற சமூக ஆர்வலர்களும் ‘மாட்டு கறிக்கு தடை செய்கிறது மோடி அரசு’, ‘என் உணவு என் விருப்பும்’ என்றெல்லாம் பேசி மக்களை சாதி, மத ரீதியாக தூண்டிவிட்டு குளிர் காய்ந்தனர். இன்னும் குளிர் காய்ந்து கொண்டிருக்கின்றனர்.
பருவநிலை மாற்றம் எனப்து மனித இனத்துக்கு மிக பெரிய சவால். அதை எதிர்கொள்வதில் பாஜக அரசு மிக சிறப்பாக பணியாற்றுகிறது. எதிர் கட்சிகள், அதை பாராட்ட மனமில்லாமல் போவதை கூட புறந்தள்ளி விடலாம்.
ஆனால், அதை சாதி ரீதியாக, மதரீதியாக விமர்சனம் செய்து நாட்டை, மக்களை அழிவு பாதைக்கு இட்டு செல்வதை அனுமதிக்க முடியாது. பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் தாக்கத்தை சமாளிக்க இந்தியா உலக நாடுகளுக்கு அறிமுகப்படுத்தி, அனைத்து நாடுகளும் ஏற்றுக்கொண்ட பாரம்பரிய கலையான யோகாவை, இந்தியாவில் உள்ள எதிர்க்கட்சிகளும், முற்போக்கு அடைமொழி சூட்டி கொண்டவர்களும் எதிர்த்தது, எதிர்ப்பது சுயநல மலிவு அரசியல் தானே?
லண்டனில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த மாட்டுக்கறி தடை குறித்து தமிழக அரசியல்வாதிகளும், முற்போக்குகளும் (?) என்ன சொல்லப் போகிறார்கள்? இனியாவது திருந்தி, வருந்தி, பருவநிலை மாற்றத்தினால் ஏற்படும் கேடுகளை தடுக்க மத்திய அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு தடை போடாமல், ஒத்துழைப்பார்களா? மக்கள் நலனில் அக்கறை செலுத்து வார்களா? அல்லது தங்களின் குறுகிய அரசியல் நலனிற்காக மக்களை துன்புறுத்துவார்களா?
காலம் பதில் சொல்லும். காத்திருப்போம்.
- நாராயணன் திருப்பதி. (பாஜக., பிரமுகர்)