அயோத்தியில், ஸ்ரீராமபிரான் கோயிலுக்கு பூமிபூஜை செய்தபின், பாரதப் பிரதமர் திரு.நரேந்திர மோடி
ஆற்றிய உரையில்,கம்ப ராமாயணத்தில் இருந்து ஒரு சொற்றொடரை எடுத்துரைத்தார்.திரு. மோடி அவர்கள் பல முக்கியமான நிகழ்வுகளில் தமிழ் இலக்கியங்களிலிருந்து(கம்ப ராமாயணம்,திருக்குறள்,பாரதியார் கவிதைகள்) மேற்கொள் காட்டிப் பேசி வருவது தமிழுக்கும்,தமிழகத்துக்கும் பெருமை சேர்ப்பதாக உள்ளது.இதற்கு முன்னால் இருந்த பிரதமர்களோ/வட இந்தியத் தலைவர்களோ இப்படித் தமிழின் புகழைப் போற்றவில்லை(தமிழ் நாட்டு அரசியல்வாதிகள் கூடச் சொல்வதில்லை என்பதே நிதர்சனம் !)
“காலம் தாழ ஈண்டு,இனும் இருத்தி போலாம்”
இந்த வாக்கியத்தைத் தான் பிரதமர் எடுத்து உரைத்தார்.இது கம்பராமாயணம்,
சுந்தர காண்டம்,திருவடி தொழுத படலம்,
49 ஆவது பாடலில் உள்ளது.ஸ்ரீராமர்,
ஆஞ்சநேயரை, சீதாப்பிராட்டி இருக்கும் இடம் தெரிந்து வரத் தூது அனுப்பினார்.
அசோக வனத்தில் சீதையைச் சந்தித்த,
அநுமார் ராமரின் கணையாழியைப் பிராட்டியிடம் கொடுத்தார்.பிராட்டி தன் சூடாமணியைக் தந்து ராமரிடம் கொடுக்கச் சொன்னார். மாருதியிடமிரு ந்து சீதையின் சூடாமணியைப் பெற்ற ராமர் பெரிதும் உகப்படைந்தார்.
சீதையின் இருப்பிடம் தெரிந்ததால், இனி நாம் அவரை நம்மிடம் அழைத்துக் கொண்டு வந்து விடலாம் என்றார் வானர அரசர் சுக்ரீவன்.சுக்ரீவன் சொல் கேட்ட
ராமர் வெறுமனே பேசிப்பொழுதைப் போக்காமல்,உடனே செயலாற்ற வேண்டும் என்பதையே இவ்வாறு சொன்னார்.
“காலம் தாழ ஈண்டு,இனும் இருத்தி போலாம்”
=”வீணே காலம் தாமதமாக,இங்கேயே இருக்கின்றாய் போலும்”
“ஆண்டையின், அருக்கன் மைந்தன், ‘ஐய! கேள், அரிவை நம்பால்
காண்டலுக்கு எளியள் ஆனாள்’ என்றலும், ‘காலம் தாழ,
ஈண்டு, இனும் இருத்தி போலாம்’ என்றனன்; என்றலோடும்,
தூண் திரண்டனைய தோளான், பொருக்கென எழுந்து சொன்னான்”
ஆண்டையின்அருக்கன் மைந்தன் -அப்பொழுது சூரியன்மகன்
சுக்கிரீவன்;
ஐய ! கேள் – (இராமபிரானை நோக்கி) ஐயனே ! கேட்டருள்வீராக!;
அரிவை நம்பால் காண்டலுக்கு எளியள் ஆனாள் என்றலும் – பிராட்டி, நாம் நம்மிடம் அழைத்துக் கொணர்தற்கு, எளியதன்மையில் உள்ளாள் என்று சொன்ன அளவில்;
காலம் தாழ ஈண்டு இனும்
இருத்தி போலாம் என்றனன் – வீணே காலம் தாமதமாக, இங்கேயே இருக்கின்றாய் போலும் ! என்று சொன்னான்;
என்ற லோடும் – என்றுசொன்னவுடனே;
தூண் திரண்டு அனைய தோளான் பொருக்கென எழுந்து
சொன்னான் – தூண் திரண்டிருப்பது போன்ற தோள்களை உடைய சுக்கிரீவன் விரைவில் எழுந்திருந்து கட்டளையிடுபவனானான்.
பிரதமர் வலியுறுத்திய ஸ்ரீராமரின் ஆணை !!
நீதிமன்ற அனுமதியும் கிடைத்து விட்டது.
பொதுமக்கள் அனைவரும்-மத வேறுபாடின்றி- ஸ்ரீராமர் கோயில் உடனே கட்ட வேண்டும் என்று விரும்புகின்றனர்.
எனவே காலம் தாழ்த்தாமல் உடனே கட்டுமானப் பணிகளைத் தொடர்ந்து நடத்தி மிக விரைவில் உலகம் வியக்கும் வண்ணம் ஸ்ரீராமருக்கு அழகான கோயில் கட்டி முடிக்கவும் என்பதே.
வேறொரு கோணத்தில் பார்த்தால்,
“அரசாங்கம் பல நல்ல திட்டங்களை அறிவிக்கிறது.ஆனால் அவற்றை முடிப்பதில் ஏன் கால தாமதம்?
தேவையான முயற்சிகள் எடுத்து, உடனே செயல் படுத்துங்கள்” என்று அரசாங்கத்தின் அங்கங்களான பல் வேறு துறைகளுக்கும்,மக்கள் பிரதிநிதி களுக்கும்,அரசியல்வாதிகளுக்கும்,
அதிகாரிகள்/ ஊழியர்களுக்கும்,நம் போன்ற பொதுமக்களுக்கும் சொல்வது போல உள்ளது.பொதுமக்களும் தங்கள் பொறுப்பை உணர்ந்து கடமை உணர்ச்சியுடன் செயலாற்ற வேண்டும்.
- அடியேன் பார்த்தசாரதி ராமாநுஜ தாசன்