நீட்டிற்கு எதிராக ஒன்றிணைவோம் என்ற சூரியாவின் ட்வீட்டைப் பார்த்தேன். மாணவர்கள் படிக்க விரும்புகிற படிப்புக்களைப் படிக்க அனுமதிக்க வேண்டும், தகுதியளப்புக் கூடாது என்ற ரீதியில் கவிஞர் மகுடேஸ்வரனின் பதிவையும் பார்த்தேன். இவற்றிற்கான உந்துதல் மாணவர்களின் தற்கொலை செய்தி தந்த உணர்ச்சி வேகமாக இருக்கலாம்.
உணர்ச்சிகளை ஒதுக்கி வைத்து விட்டு சில யதார்த்தங்களைப் பார்க்கலாம்.
தகுதித் தேர்வு அவசியமா?
2019ஆம் ஆண்டின் தரவுகளின்படி இந்தியா முழுக்க உள்ள எம்.பி.பி.எஸ், பிடிஎஸ் இடங்கள் 97000. சுமார் ஒரு லட்சம் இடங்கள் என வைத்துக் கொள்ளலாம். இதற்குப் போட்டி போடுகிறவர்கள் 15 லட்சம் பேர்.
தமிழ்நாட்டில் 5000 இடங்கள் இருக்கலாம். அதற்கு ஒரு லட்சம் பேருக்கு மேல் முயற்சிக்கிறார்கள். எல்லோருக்கும் கொடுக்க இடம் இல்லை என்பது வெளிப்படை. இருக்கிற இடத்தை எப்படிக் கொடுப்பது என்னும் போது ஏதாவது ஒரு நடைமுறை யைப் பின்பற்றி மாணவர்களைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கிறது. நாடு முழுக்க பின்பற்றப்படும் நடைமுறையாக நீட் நடத்தப்படுகிறது.
வேறு வழிகளில் தேர்வு செய்ய முடியாதா?முன்பு நீட் இல்லையே?
1989 முதல் 2006 வரை தமிழ்நாட்டில் எல்லாத் தொழிற்படிப்புக்களுக்கும் (professional courses- MBBS, BDS, BE, BSc Agriculture) நுழைவுத் தேர்வுகள் இருந்தன. நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ள கட்டணம் வாங்கிக் கொண்டு, பயிற்சி வகுப்புகள் நடக்கின்றன, நுழைவுத் தேர்வுகள் ஏழை மாணவர்களுக்கு எதிராக இருக்கின்றன என்று அரசியல்கட்சிகள் குரலெழுப்பின. அதனால் நுழைவுத் தேர்வுகள் கைவிடப்பட்டு ஒற்றைச் சாளர முறை அறிமுகப்படுத்தப்பட்டது.
+2 மதிப்பெண்களின் அடிப்படையில் அட்மிஷன்கள் தீர்மானிக்கப்பட்டன. அதனையடுத்து பள்ளிகளில் +2 வகுப்புகள் தீவிரப்படுத்தப்பட்டன. 12ஆம் வகுப்புப் பாடங்கள் 11ஆம் வகுப்பிலேயே நடத்தப்பட்டு 12ஆம் ஆண்டு மறு ஆய்வு ஆண்டாக ஆக்கப்பட்டது.
நாமக்கல் போன்ற இடங்களில் எம்.பி.பி.எஸ். இடங்களைக் குறி வைத்துப் பள்ளிகள் மாணவர் பண்ணைகளாக மாறின. 2016ஆம் ஆண்டு நடைபெற்ற மருத்துவ மாணவர் சேர்ககையில் 50% (3200ல் 1705 பேர்) நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மாவட்டங்கள்லிருந்து தேர்வானார்கள்.
இவர்களில் நாமக்கலில் மட்டுமிருந்து ஆயிரக்கணக்கான மாணவர்கள். ஒரு குறிப்பிட்ட பள்ளியிலிருந்து மாத்திரம் 220 மாணவர்கள் என்று ஒரு தகவல் தெரிவிக்கிறது ( மகுடேஸ்வரன் பதிவில் சரவணநாயகம்) கருத்துரை) எந்த ஒரு முறையிலும் குறைபாடுகள் உண்டு.
ஏழை மாணவர்கள் பெரும்பாலும் அரசுப் பள்ளிகளில் படிக்கிறார்கள் . அவர்கள் பாதிக்கப்படுகிறார்களே?
ஆம். அது துயரமானது. ஆனால் நீட்டில் மட்டுமல்ல, எந்த நடைமுறையிலும் அவர்கள் பாதிக்கப்பட்டே வந்துள்ளார்கள். 2006 முதல் 2016 வரையிலான, நீட் தேர்வு நடக்காத பத்தாண்டுகளில், அரசு மருத்துவக் கல்லூரிகளில் நிரப்பப்பட்ட 29, 925 இடங்களில் அரசுப் பள்ளியில் படித்து மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தவர்கள் 213 பேர் மட்டுமே.
போட்டி அதிகமாக இருப்பதால் அதை வைத்துக் காசு பண்ணுவதும் நடக்கிறது. எந்த வகைத் தேர்வானாலும் இந்த வணிகம் நடக்கும். எந்த ஒன்றிலும் வணிக வாய்ப்பைக் காணும் வணிக முனைப்பும். தங்கள் குழந்தைகள் அவையத்து முந்தி இருக்க எதை வேண்டுமானாலும் செய்யத் தயாராகப் பெற்றோர்கள் இருக்கும் சூழலில் நம் சமூகம் இருக்கிறது. இதில் பாதிக்கப்படுபவர்கள் ஏழை மாணவர்கள்.
அரசு ஏதும் செய்ய முடியாதா?
மாநில அரசு இலவசப் பயிற்சி வகுப்புகள் நடத்தி வருகிறது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கென்று 7.5% இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு செய்துள்ளது. மத்திய அரசின் துணையுடன், புதிதாகப் 11 கல்லூரிகள் திறந்ததின் மூலம் முன்பு இருந்ததை விட 40 சதவீதம் அதிகரித்திருக்கிறது.
இதெல்லாம் நீட் தேர்வைத் தவிர்க்க முடியாது என்ற நிலையில் அதன் கடுமையைக் குறைக்க, மேற்கொள்ளக் கூடிய சாத்தியமான நடவடிக்கைகள்
கொள்கை அளவில் மாநில அரசு நீட் தேர்வை எதிர்க்கிறது. அதை எதிர்த்து சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றியது. உச்ச நீதிமன்றத்தில் வழக்காடியது. அதில் வெற்றி கிட்ட வாய்ப்புக்கள் குறைவு
உச்ச நீதிமன்றம் ஏன் இதில் மூக்கை நுழைக்கிறது?
2014ம் ஆண்டு மார்ச் 3ந்தேதி, காங்கிரஸ் தலைமையில் திமுக உள்ளிட்ட கட்சிகள் கொண்ட ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இருந்த போது, பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட, குடும்பம் பொதுநலம் குறித்த நிலைக்குழுவின் அறிக்கையில், தனியார் மருத்துவக் கல்லூரிகள் பெருகியுள்ள நிலையில் பணம் படைத்தோருக்குக் கல்வி கிடைக்கிறது, திறன் வாய்ந்தோருக்குக் கிடைப்பதில்லை
எனவே. இந்த நிலையை மாற்ற வேண்டும் என்பதற்காகவும், தனியார் மருத்துவக் கல்லூரிகளை கட்டுப்படுத்துவதற்காகவும், நாடு முழுவதும் பொது மருத்துவ நுழைவுத் தேர்வு நடத்த ஆலோசித்து வருவதாக சுகாதாரத் துறை செயலர் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், 5பேர் கொண்ட உச்சநீதிமன்ற அமர்வு மருத்துவ கல்வி சேர்க்கையை ஒழுங்குபடுத்த மத்திய அரசுக்கு கூறியது.
ஒஇன் இந்தத் தேர்வை யார் நடத்துவது போன்ற விஷயங்கள் தொடங்கி, பல நடைமுறை விஷயங்களில் உச்சநீதிமன்றம் தொடர்ந்து ஆணைகள் இட்டுவருகிறது. இந்த கோவிட் காலத்தில் தேர்வு நடத்தக் கூடாது என்ற மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்ததன் அடிப்படையிலே இவ்வாண்டு தேர்வு நடந்தது
மாணவர்கள் தற்கொலை செய்து கொள்கிறார்களே?
மருத்துவக் கல்லூரிச் சேர்க்கைக்கு மட்டுமல்ல, ஐஐஎம், ஐஐடி, மத்தியச் சட்டக் கல்லூரி போன்றவற்றிற்கு CAT, JEE, CLAT போன்ற தேர்வுகள் நடக்கின்றன. சிவில் சர்வீஸ் பணிகளுக்குத் தேர்வு நடக்கிறது. பட்டயக் கணக்காளர் படிப்புக்குத் தேர்வு நடக்கிறது. இவையெல்லாம் கடினமான தேர்வுகள்தான்.
அந்தத் தேர்வு எழுபவர்கள், தேர்வுக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டதாகச் செய்திகள் இல்லை. காரணம், இவற்றைக் குறித்து அச்ச உணர்வுகள் பரப்பப்படுவதில்லை. நீட் அரசியல் மயப்படுத்தப்பட்டு விட்டதால் அதைக் குறித்த அச்ச உணர்வை அரசியல் கட்சிகளும் அவற்றிற்கு சார்பான, பரபரப்பிற்குப் பசித்திருக்கும் ஊடகங்களும் பரப்புகின்றன.
ஆனால் அவற்றைப் பொருட்படுத்தாமல் பல மாணவ்ர்கள் தேர்வு எழுதிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.அச்ச உணர்வுக்கு பலியானோர். மூன்று பேர். ஆனால் நேற்று தேர்வு எழுதியவர்கள் ஒரு லட்சம் பேருக்கு மேல்
மாநில அரசுப் பணிக்கு, மத்திய அரசுப் பணிக்கு, ரயில்வே பணிக்கு, வங்கிப் பணிக்கு போன்ற பணிகளுக்குத் தேர்வுகள் நடக்கின்றன. ஆசிரியர்கள் கூட தங்கள் பணி நிமித்தம் தேர்வுகள் எழுதுகிறார்கள். வாழ்வில், குறிப்பாக மாணவப் பருவத்தில் தேர்வுகள் என்பது தவிர்க்க இயலாதவை.
அவை இயல்பானவை, அவற்றைக் கண்டு மிரளத் தேவை இல்லை என்ற மனோபாவத்தை மாணவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். பெற்றோர்கள், ஆசிரியர்கள், சகமாணவர்கள், ஊடகங்கள், தன்னார்வ அமைப்புக்கள், அரசியல் கட்சிகளின் அமைப்புகள் அதை மேற்கொள்வது ஆக்க பூர்வமாக இருக்கும்.
சூர்யா இதற்காக ஒரு படம் தயாரித்து இலவசமாக நடிக்கலாம்.காசு இல்லாமல் யூ டியூபில் வெளியிடலாம்.
- மாலன் நாராயணன் (மூத்த பத்திரிகையாளர்)