Home உரத்த சிந்தனை ஒரு தேசபக்தரின் தலைமையில் நாடு இருப்பதால்…

ஒரு தேசபக்தரின் தலைமையில் நாடு இருப்பதால்…

pm modi in covai1

கோவிட்19 சற்றே திரும்பிப் பார்க்கிறேன்….

வித்யா சுப்பிரமணியன், எழுத்தாளர்

2019 ன் இறுதியில்தான் இப்பெயர் மெல்ல அடிபடத் துவங்கிற்று. அப்போது கூட, அதுசரி, இதற்குமுன் பன்றிக்காய்ச்சல் பரவலையா? பறவைக் காய்ச்சல் பரவலையா, எய்ட்ஸ் பரவலையா என்றெல்லாம் நினைத்து மக்கள் பெரிதாக அலட்டிக் கொள்ளவில்லை. பலர் சைனாவில்தானே, அமெரிக்காவில்தானே பரவியிருக்கு என்று கடந்து போனார்கள். உலகின் ஏதோ ஒரு மூலையில் வைரஸ் பரவிக் கொண்டிருக்கும் போதுதான் ஜனவரி 2020 துவங்கி மார்ச் இரண்டாம் தேதிவரை நான் வரிசையாக டூர் போய்க் கொண்டிருந்தேன்.

மார்ச் எட்டாம் தேதி சாகித்திய அகாடமி சென்னை அலுவலகத்தில் மகளிர் தின உரையாற்றும்போதுகூட கோவிட் அச்சம் எதுவுமில்லை. ஆனால் அதுதான் நான் கடைசியாக வெளியில் சென்று கலந்து கொண்ட நிகழ்ச்சி என்பதே உண்மை. அதன் பிறகு காட்சிகள் மெல்ல மாறத்துவங்கியது. ஒருநாள் அடையாள ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து ஒன்றல்ல இரண்டல்ல பல மாதங்கள் கடுமையான ஊரடங்கு உலகம் முழுவதுமே அறிவிக்கப்பட்டது. உலகமே முடங்கியது. மேலை நாடுகளில் கொத்து கொத்தாக மக்கள் மரணமடைந்ததை செய்தியில் பார்த்து உறைந்து போனோம். குவியல் குவியலாக பிணங்கள். புதைக்க இடமின்றி புதைப்பதற்கானக் காத்திருப்பில் பிணங்கள். அமெரிக்காவில் அதிக பட்சம் ஐந்து லட்சம் பேர் மரணம். ஐரோப்பிய நாடுகள் செய்வதறியாது திகைத்தன.

உலகம் முழுவதும் விமான சேவைகள் முடங்கின. பல நாடுகளில் பொருளாதாரம் சரிந்ததாகத் தகவல்கள். பொருளாதாரச் சரிவை நிர்வகிக்க முடியாமல் ஒரு பிரதமரே தற்கொலை செய்து கொண்டார்.

மேலை நாடுகளுக்கே இந்நிலை என்றால் இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகமுள்ள, அதுவும் வறுமைக் கோட்டிற்குக் கீழுள்ள மக்கள் அதிகம் வாழும் நாட்டின் நிலை என்ன ஆகுமோ என்று பலரும் கூற ஆரம்பித்தனர். இந்தியா அவ்வளவுதான் என்று கூட ஒருவித நையாண்டிகள். ஆனால் இந்திய அரசு விழித்துக் கொண்டு தொற்று அதிகம் பரவுமுன்பே ஊரடங்கை அறிவித்தது. மரணங்களைத் தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கைகளை யும் மேற்கொண்டது. ஆயினும் அந்த மர்ம மாநாட்டினரின் மூலம் அது பரவ ஆரம்பித்தது. ஒவ்வொரு தொற்று நோயாளியையும் தேடித்தேடிக் கண்டறிந்து அவரோடு தொடர்பு கொண்டவர்களையும் கண்டறிந்து சிகிச்சை அளித்த ஒரே தொற்று நோய் இதுதான்.

இந்திய அரசு வெகு சிறப்பாக செயல்பட்டும், விளக்கேற்றினால் கொரோனா போய்விடுமாக்கும் என்று வெளிநாட்டில் உட்கார்ந்து கொண்டு நக்கலடித்த தமிழரையும் நான் முகநூலில் கண்டிருக்கிறேன். இத்தனைக்கும் உருமாறிய இரண்டாம் தொற்றில் நிலைக்குலைந்தது அவர் பஞ்சம் பிழைக்கச்சென்ற அதே நாடுதான். ஆனாலும் மோடியை நக்கலடிப்பது ஒருவித அரிப்பு நோய்.

கொரோனாவில் மரணித்தவர்களை புதைப்பதிலும் பிரச்சனைகள் ஏற்பட்டன. இங்கே புதைக்காதே அங்கே புதைக்காதே என்று மக்கள் போராட்டங்களில் இறங்கினார்கள். அடித்து விரட்டினார்கள். கொரோனா தொற்று ஏற்பட்ட இடங்கள் தட்டிகள் கொண்டு அடைக்கப்பட்டன. ஒரு வீட்டில் அது இருந்தால் ஒரு தெருவே அடைக்கப்பட்டது.

சரித்திரத்தில் இதுவரை கண்டிராத ஒன்றாக அரசு அலுவலகங்களும் மூடப்பட்டன. திரையரங்குகள் மூடப்பட்டன. பொழுது போக்கு இடங்களுக்கு செல்ல அனுமதியில்லை. ஊர் விட்டு ஊர் செல்ல முன் அனுமதியுடன், ஈபாஸ் பெற வேண்டும். வெளிநாட்டிலிருந்து இந்தியா திரும்ப முடியாமல் பலரும் ஆங்காங்கே பரிதவித்தனர். புலம் பெயர் தொழிலாளர்கள் நடந்தே தங்கள் சொந்த ஊருக்குச் சென்ற காட்சிகளும் கண்டோம்.

மக்கள் முகமூடிகளோடு அலைந்தார்கள். மருத்துவர்கள் உயிரைப்பணயம் வைத்து முழு கவச உடையணிந்து லட்சக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றினார்கள். அதேநேரம் நாமறிந்த பலரின் மரணம் நம்மை அதிர்ச்சியடையச் செய்தது. ஏழை பணக்காரர், பிரபலம், சாதாரணம் என்ற எவ்வித வேறுபாடுமின்றி மரணித்தனர். இந்தியா உட்பட உலகில் பல நாடுகளும் தடுப்பூசி கண்டறியும் பணியில் இறங்கின.

வேறு எந்த பிரதமரும் இந்த அளவுக்கு கேலி செய்யப்படவில்லை என்னுமளவுக்கு நம் பிரதமர் எள்ளிநகையாடப்பட்டார். அவர் எது செய்தாலும் குற்றம் கண்டு பிடித்தனர். அவரோ யாருக்கும் பதில் சொல்லி நேரத்தை வீண்டிக்கவில்லை. தன் கடமைகளில் மட்டுமே கவனம் செலுத்தினார். ஒரு பக்கம் எல்லையில் பாகிஸ்தானும், சைனாவும் தொல்லை கொடுத்துக் கொண்டிருந்தன. முக்கியமாக சைனா அட்டூழியம் செய்தது. ஒருபுறம் கொரோனா உயிர்களை பலி வாங்கிக் கொண்டிருக்க, எல்லையில் போர் மூளுமோ என்ற அச்சம் ஒரு பக்கம். உலகமே வெறியோடு இந்தியாவை உற்று நோக்கிக் கொண்டிருந்தது.

ஆனால் நம் பிரதமர் உலகமே வியக்கும் வண்ணம் எல்லைப் பிரச்சனை, தொற்றுப் பிரச்சனை இரண்டையுமே அனாயாசமாகக் கையாண்டார். கத்தியின்றி இரத்தமின்றி சீனர்களை பின்வாங்கச்செய்தார். தடுப்பூசியும் வெற்றிகரமாகக் கண்டறியப்பட்டு இதோ இன்று அனைவருக்கும் செலுத்தப்பட்டது வருகிறது. முக்கியமாக தம்மக்களுக்கு மட்டுமல்லாது உலகம் முழுவதும் பல நாடுகளுக்கும் இலவசமாக அனுப்பி உதவிக்கொண்டிருக்கிறார். இன்னும் பல நாடுகள் இந்தியத் தடுப்பூசிக்காக கைநீட்டி காத்துக் கொண்டிருக்கின்றன. பகை நாடுகளுக்குக்கூட மனிதத் தன்மையோடு தடுப்பூசிகள் அனுப்பப்படுகிறது.

உலகமே இந்த மனிதனைப் பாராட்டி வியக்கிறது. இவர் கொரோனாவைக் கையாண்ட விதத்தை உலக சுகாதார நிறுவனம் பாராட்டுகிறது. ஒரு நிமிடம் யோசித்துப் பார்த்தால் இந்தியாவில் யாரும் பசி பட்டினியில் பெரிதளவு அவதிப்படவில்லை என்று நம்புகிறேன். அத்தனை மாநிலங்களுமே மக்களின் பசி தீர பல ஏற்பாடுகள் செய்திருந்தன. தமிழக அரசு மாதாமாதம் உதவித் தொகையும், அரிசி, மளிகை சாமான்களும் இலவசமாக வழங்கியது. அம்மா உணவகம் மூலம் மூன்று வேளையும் இலவச உணவு வழங்கியது. தவிர தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஓய்வூதியர்கள் என எவருக்கும் ஊதியம் நிறுப்படவில்லை. தமிழக முதல்வர் பிரச்சனைகளை சமாளித்த விதமும் பாராட்டுக்குறியது.

கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் இயல்பு நிலைக்குத் திரும்பி கொரோனாவிற்கே அச்சமேற்படும் வகையில் மாஸ்க் இன்றி அலைகிறார்கள். ஆயினும் மரண விகிதம் வெகுவாகக் குறைந்துள்ளது. மக்கள் இன்னும் கொஞ்சம் ஒத்துழைத்தால் இரண்டாம் அலை பரவுவது கூடத் தடுக்கப்படும். இந்தியப் பொருளாதாரம் வீழவில்லை.

எல்லோரும் எதிர்பார்த்த வேக்சினேஷனும் புழக்கத்திற்கு வந்துவிட்டது. 60+ வயதுடையோர் எல்லோரும் வேக்சினேஷன் போட்டுக் கொள்ளத் துவங்கி விட்டனர். அரசு மருத்துவ மனைகளில் இலவசம். 60 க்குக் கீழுள்ளவருக்கும் அடுத்து போடப்படும். இத்தொற்றின் பிடியிலிருந்து முழுமையாக விடுதலை பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை. போன ஆண்டு மார்ச் 21 ல்தான் லாக்டவுன் துவங்கியது. இதோ ஓராண்டிற்குள் மக்களுக்கு தடுப்பூசி கிடைத்திருக்கிறது என்பதோடு, நமது நாட்டு தடுப்பூசி உலகத்திற்கே விநியோகம் செய்யப்படுகிறது என்பது எவ்வளவு பெரிய சாதனை!

ஒருவேளை மோடியைத்தவிர வேறு எந்த பொம்மை பிரதமரோ, அல்லது அரைவேக்காடு ஆளோ, ஊழல்வாதிகளோ பிரதமாராகியிருந்தால் இந்தியாவின் நிலை வேறு மாதிரியாக ஆகியிருக்கக்கூடும். இதுநாள்வரை அவரை கேலி செய்தவரும், திட்டியவர்களும் கூட இப்போது வேக்சினேஷன் போட்டுக் கொள்கின்றனர். அவர்களுக்கெல்லாம் இதுவே அவரது பதில்.

இந்தியா என்பது கர்ம பூமி, புண்ணிய பூமி. கடவுள் இந்த கர்மபூமியை அழிய விடமாட்டார். இந்த கொடுமையான சூழலில் இம்மனிதர் நமக்கு பிரதமராக இருப்பது நாம் செய்த புண்ணியம். ஒரு சிறந்த தேசபக்தரின் தலைமையில் இந்தியா இன்று உலகளவில் தலைநிமிர்ந்து நிற்கிறது. பெட்ரோல் விலையேற்றத்தை விமர்சிப்பவர்கள் இதையெல்லாமும் கொஞ்சம் எண்ணிப்பார்க்கலாம். உயிர்வாழ்தல் அதனினும் முக்கியமன்றோ?

இந்தியன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா. பாரத் மாதா கி ஜெய் .

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version