நீட் தேர்வு பற்றி மநீம துணைத் தலைவர் திரு.பொன்ராஜ் செய்தியாளர்களிடம் பேசியதைக் கேட்டேன். அதில் அவர் இரண்டு ‘ஓட்டைகள்’ இருப்பதாகவும் “அது கூட திமுக அதிமுக கட்சிகளுக்குத் தெரியாதிருப்பதாகவும்” சொன்னார்.
அவர் கண்டு பிடித்த அந்த ‘ஓட்டைகள்’: 1.தேசிய அளவில்தான் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று சட்டத்தில் சொல்லப்படவில்லை. 2. சிபிஎஸ்சி பாடத் திட்டத்தின் கீழ்தான் நீட் தேர்வு நடத்தப்பட வேண்டும் எனச் சொல்லப்படவில்லை.
இது உண்மையா?
- நீட் தேர்வு National Medical Commission Act, 2019 என்ற சட்டத்தின் கீழ் நடத்தப்படுகிறது. அந்தச் சட்டம் சொல்வது என்ன? அந்தச் சட்டத்தின் 14 (1) பிரிவு //There shall be a uniform National Eligibility cum Entrance Test for admission to the undergraduate and post graduate super specialty medical education in all medical institutions which are governed by the provisions of this Act.//
UNIFORM, NATIONAL என்ற வார்த்தைகளை கவனியுங்கள். ஒரு மாநில அரசு எப்படி நாடு முழுமைக்குமான Uniform தேர்வை நடத்த முடியும்?
- இப்போது தேர்வை நடத்துவது சிபிஎஸ்இ யா?
அல்ல. நீட் தேர்வை நடத்துவது NTA எனப்படும் நேஷனல் டெஸ்டிங் ஏஜென்சி. 11, 12 ஆம் வகுப்புகளுக்கு NCERT பரிந்துரைத்த பாடத்திட்டத்தின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. NEET 2020ல் கேட்கப்பட்ட கேள்விகளில் 97% தமிழ்நாடு அரசின் பாட நூல்களிலிருந்து அமைந்திருந்தன
மாநில அரசுகள் நீட் தேர்வை எதிர்க்கவில்லையா?
தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், குஜராத், மே.வங்கம், உள்ளிட்ட பல மாநிலங்கள் நீட்டை எதிர்த்து வழக்காடின. 2016ஆம் ஆண்டு ஏப்ரல் 16ஆம் தேதி ஐந்து நீதிபதிகள் கொண்ட உச்ச நீதி மன்ற அரசியல் சாசன அமர்வு மத்திய அரசு நீட் தேர்வை நடத்தலாம் எனத் தீர்ப்பளித்தது
மநீம ஆட்சிக்கு வந்தால் மாநில அரசு NEETக்கு பதில் SEET (State Entrance Eligibility Test) நடத்தும் என்றும் அது மாநிலப் பாடத்திட்டத்தின் கீழ் இருக்கும் என்றும் சொன்னார். நீட்டிற்கு சீட் தீர்வாகுமா?
மருத்துவக் கல்லூரிக்கு நுழைவுத் தேர்வு என்பது 1984ல் எம்.ஜி.ஆர் அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு பின் 22 ஆண்டுகளுக்குப் பின் ஜெயலலிதா அரசால் ரத்து செய்யப்பட்டது. அதற்காக தொழிற்படிப்புகளின் சேர்க்கை ஒழுங்குபடுத்தும் தமிழ் நாட்டுச் சட்டம் 2006’ என்று ஒரு சட்டம் மாநில சட்டப் பேரவையில் இயற்றப்பட்டது. அந்தச் சட்டம் குறித்து ” நுழைவுத் தேர்வு அடிப்படையிலேயே தொழிற்கல்லூரிகளில் மாணவர்களைச் சேர்க்க வேண்டும் என்று இந்திய மருத்துவக் கவுன்சிலும், அகில இந்தியத் தொழில் நுட்பக் கவுன்சிலும் விதிமுறைகளை வகுத்துள்ளன. அதற்கு முரணாக சட்டம் இயற்ற சட்டப் பேரவைக்கு அதிகாரம் இல்லை. இச்சட்டத்தை நடைமுறைப்படுத்தவும் முடியாது” என சென்னை உயர் நீதி மன்றம் கருத்துத் தெரிவித்தது.
எனவே நீட்டிற்கு மாற்றாக சீட் என்பது காதில் பூச் சுற்றும் வேலை. அப்படி ஒரு நுழைவுத் தேர்வு வந்தால் மட்டும் கிராமப் புற ஏழை மாணவர்கள் பாதிக்கப்பட மாட்டார்களா?
எடப்பாடியார் கொண்டு வந்துள்ள இட ஒதுக்கீட்டு முறையால் 400க்கு மேற்பட்ட அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்கள் மருத்துவப் படிப்புக்களில் சேர்ந்துள்ளனர். அவர்களின் படிப்புச் செலவை அரசு ஏற்றுள்ளது.
மற்றவர்கள் மக்குகள், தங்களுக்குத்தான் எல்லாம் தெரியும் என்ற மனோபாவத்திலிருந்து மநீம அறிவுஜீவிகள் விடுபடுவார்களா?
- மாலன் நாராயணன்