அரங்கமாநகருளானே…….
நம் ஸ்ரீ வைஷ்ணவ சம்பிரதாயத்தில் தலைமை பீடமாக திகழ்வது ஸ்ரீ ரங்கம் கோவில். அவ்வுலகிலும் சரி இந்த நிலவுலகிலும் சரி 108 திவ்ய தேசங்களில் முதன்மையான ஷேத்திரம் ஸ்ரீ ரங்கம் மட்டுமே.
இஷ்வாகு குல தனம் இவர். ஸ்ரீ ராமர் ஆராதித்த பெருமாள் இவர். விபீஷணன் கேட்டான் என்ற ஒரு காரணத்திற்காகவே தூக்கி கொடுக்கப்பட்ட பெருமாள் இவர்.
வைகுண்ட வாசலுக்கான வழியும் இவரே…. பாரதத்தின் சரித்திர ஆதாரங்களின் சாட்சியும் இவரே. பண்டைய பாரதத்தின் அறிவியல் சான்றுகளுக்கு ஆதார ஸ்ருதியும் இவரே. புஷ்பக விமானத்தின் சரித்திர சான்றுக்கு இவரே அத்தாட்சி.
இன்று உலகெங்கும் உள்ள மனிதவள மேலாண்மை தத்துவங்களுக்கு ஸ்ரீ ராமாநுஜர் இங்கு ஏற்படுத்தி வைத்து பத்து கொத்து பரிவாரங்களே ஆதாரம் என்றால் அது மிகையாகாது.
நம் சாஸ்திர சம்பிரதாயங்களை நாம் காக்காது போனால் காணாமல் போகும் என்பதற்கும் ஸ்ரீ ரங்கமே ஆதாரம். நம் தேசத்தை காப்பது போல் நம் சம்பிரதாயத்தினையும் காப்பது நமது கடமையே. நம் தாய் தந்தையை நாம் காக்காது போனால் வேறு யார் அக்கறை கொள்வர் அதனை காக்க.
நேற்றைய தினம் வைகாசி 17 நாள் ஸ்ரீ ரங்கத்திற்கு மிக முக்கியமானதொரு நாள். அழகிய மணவாளன் புதியதாக #நம்பெருமாள் என நாமகரணம் செய்து கொண்ட திருநாள். உள்ளே மூலஸ்தானத்தில் பள்ளி கொண்டு இருக்கும் பெரிய பெருமாள் கண்ணன் அம்சம் என்பர், அதுபோலவே உற்சவ மூர்த்தியான அழகிய மணவாளனுக்கு ஸ்ரீ ராமர் அம்சம் என்பர்.
அதனால் தானோ என்னவோ இவரும் ஆஸ்தானத்தை விட்டு நீங்கி 48 ஆண்டு காலம் வனவாசம் போலும் தென் இந்தியா முழுவதும் சுற்றி வந்தார். காரணம் இஸ்லாமிய உலுப்கான் கொரில்லா படை சூரையாடியது நம் தமிழகத்தை. 13 ஆம் நூற்றாண்டில் ரத்த பூமியானது ஸ்ரீ ரங்கம். ஒருவர் அல்ல இருவர் அல்ல சற்றேறக்குறைய 12,000 பேர் தலையை கொய்து கொன்று இருக்கிறார்கள் இஸ்லாமியர்கள். பன்னீராயிரம் முடி திருத்திய பன்றி மேட்டு கலகம் என்பது இதனைத் தான்.
1323 ஆம் ஆண்டு பங்குனி மாதம் மக நட்சத்திரம் அன்று இஸ்லாமிய கொரில்லா படை இந்த காரியத்தை செய்தது. அதற்கு முன்பாக திருவண்ணாமலையில் இருந்து வல்லால மன்னனை பூண்டோடு அழித்தது. அது நடந்தது ஆதே ஆண்டு மாசி மாதத்தில்….. கிட்டத்தட்ட 35,000 வீரர்கள் அழிக்கப்பட்டனர்.
இன்றளவும் திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் வல்லால மன்னனுக்கு தன் தகப்பனை போல் வரிந்து திதி கொடுக்கின்றார். போரில் வென்று இருந்தால் கூட பரவாயில்லை…… பொய் சொல்லி ஏமாற்றி கொன்று குவித்து விட்டனர்.
1323 ஆம் ஆண்டு பிள்ளைலோகாச்சாரியர் தலைமையில் ஸ்ரீ ரங்கம் விட்டு நீங்கியவர் 1371 ஆம் ஆண்டு வைகாசி மாதம் 17 ஆம் தேதி அன்று தான் மீண்டும் வீர கம்மண்ணமுடையார் என்பவரின் பெரும் முயற்சியால் ஆஸ்தானம் திரும்பினார்.
சரி யார் இந்த வீர கம்மண்ணமுடையார் ?
விஜயநகர சாம்ராஜ்யம் உருவாக காரணமாக இருந்தவர் வித்யாரண்யர். இவரது சீடர்களாக ஹரிஹர புக்கர் என்று இருவர். இந்த இருவரும் 1323 போரின் போது பிடித்து செல்லப்பட்டு மதம் மாற்றம் செய்து போர் வீரர்களாக இஸ்லாமிய படையில் இருந்திருக்கிறார்கள். பிறகு மன மாற்றம் ஏற்பட்டு வித்யாரண்யரிடம் சீடர்களாக சேர்ந்தனர்.
இதில் புக்கரின் மகன் தான் வீர கம்மண்ணமுடையார். இவரது மனைவி கங்காதேவி. இவர் இயற்றிய சமஸ்கிருத காவியம் தான் #மதுராவிஜயம். மதுரை சுல்தானகத்தின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்ததை சொல்லும் காவியம் தான் இந்த மதுரா விஜயம். இவர் காலத்திலேயே மாதரஸன்பட்டிணம் துறைமுகமாக இருந்தது என்று 1367 ஆம் ஆண்டு காலத்திய கல்வெட்டு ஒன்று காணக்கிடைக்கிறது. இந்த வகையில் பார்த்தால் நாம் தற்போது சொல்லும் சென்னை துறைமுகம் அல்லது மெட்ராஸின் வயது 379 ஆண்டுகள் அல்ல….. அது போலவே அது மதராஸப்பட்டிணமும் அல்ல. இன்றைய தேதியில் சற்றேறக்குறைய 653 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு அதற்கு உண்டு. இதற்கு கல்வெட்டு ஆதாரங்களும் உள்ளன. இதனை Indian council for historical research ICHR Southern region center, Bangalore. ஆவணங்களாக இன்றளவும் பார்க்க முடியும். இதில் 1356-77 வரை ஆட்சி பொறுப்பில் இருந்த சங்கம மரபைச் சேர்ந்த முதலாம் புக்க ராயரின் இரண்டாவது மகன் தான் வீர கம்மண்ணமுடையார் என்று தெளிவாக வரையறை செய்யப்பட்டு இருக்கிறது. இவரது மகன் #விருப்பன்னஉடையார்.
இவரே 1383 ஆண்டு சித்திரை மாதத்தில் இருந்து மீண்டும் ஸ்ரீ ரங்கத்தில் உற்சவங்கள் தொடங்கிட 17,000 பொற்காசுகள் 52 கிராமங்கள் நிவேதனமாக கொடுத்து சித்திரை தேர் திருவிழா கொண்டாட காரணமாய் இருந்தார்.
அதன் பொருட்டே இன்றளவும் இவரது பெயரிலேயே விருப்பன் திருநாளாக ஸ்ரீ ரங்கத்தில் சித்திரை தேர் திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்த தேர் #கோரத மூலையில் உள்ள தேரில் இருந்து பவனி வரும். அந்த 52 கிராமங்கள்…… அதன் விளை நிலங்கள்……. எது பற்றியும் எந்த குறிப்பும் முழுமையாக இன்று காணக்கிடைக்ககூடியதாக இல்லை என்றால் என்னவென்று சொல்வது இதனை. 19 ஆம் நூற்றாண்டு வரை பதிவுகள் இருக்கின்றன.ஆனால் தற்போது இல்லை. எப்படி இருக்கிறது இது? யார் காரணம்?
சந்தேகமே வேண்டாம் நாம் தான் காரணம். இவை சொத்து மாத்திரம் அல்ல. நம் ரத்த சரித்திரத்தின் சாட்சி இவை. இதனை தூக்கி தானம் கொடுக்க இந்திய சட்டத்திலேயே இடம் இல்லை. அதனால் அதன் அடையாளத்தை அழித்து விட்டனர். இது சித்திரை தேர் திருவிழாவிற்காக மட்டுமே வழங்கப்பட்ட இடங்கள். இது போல் ஏராளம் ஸ்ரீ ரங்கத்திற்கு உண்டு. வருடம் 365 நாளும் உற்சவம் நடைபெறும் ஒரே கோவில் ஸ்ரீ ரங்கம் மாத்திரமே.கரூர் முதல் கோவை கொமண்டூர் வரை ஏராளமான விளைநிலங்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது.
பலரும் இங்கு தவறான புரிதலை கொண்டு இருக்கிறார்கள். ஸ்ரீ ராமாநுஜர் காலத்தில் பிராமணர்களை மட்டுமே கொண்ட குழு அமைத்து கோவில் நிர்வாகத்தை பராமரித்தார் என்று. இஃது முற்றிலும் தவறான கருத்து. பத்து கொத்து பரிவாரங்கள் என்பவர்களை சாத்தாத ஸ்ரீ வைஷ்ணவர் என்பர். அதாவது முப்புரி நூல் சாற்றாதவர் என்று பொருள். இவர்களின் பெயரில் திருவீதி சுற்று ஒன்று ஸ்ரீரங்கத்தில் இன்றளவும் உள்ளது. பெயரே சாத்தாரை வீதி தான்.
இவ்வளவு ஏன் ..?! அழகிய மணவாளனுக்கு நம்பெருமாள் என்கிற பெயர் கொடுத்ததே ஒரு #ஈரங்கொல்லி தான். இப்படி சொன்னால் உங்களுக்கு புரிந்து கொள்ள முடியும். துணி வெளுக்கும் வண்ணானை நல்ல தமிழ் சொல்லில் ஈரங்கொல்லி என்றே அந்நாளில் அழைத்தனர். அழகிய மணவாளனை வீர கம்மண்ணமுடையார் ஏளப்பண்ணி ஸ்ரீ ரங்கம் கொண்டு வந்த சமயத்தில் அங்கு கோவிலில் ஏற்கனவே ஒருவர் இருந்தார்.
இதனால் அங்கு இருந்தவர்களுக்கு பெருங் குழப்பம். யார் நிஜத்தில் உண்மையான அழகிய மணவாளன் என்று. ஏனெனில் அச்சு அசலாக இருவரும் ஒன்று போலவே இருந்தனர். இன்றும் கூட நாம் எடுத்து சொல்ல வேதாந்த தேசிகனும் இல்லை. 1369 ஆம் ஆண்டே பரம பதித்து இருந்தார். இவரே நடையாய் நடந்தார் திருமலைக்கும் திருவரங்கத்திற்கும்….. இவர் தான் முழுமுதற் காரணம் அழகிய மணவாளன் ஸ்ரீ ரங்கம் வர. அப்படி வரும் சமயத்தில் இவர் அதனை காண இயலாதவண்ணம் பரமபதித்து இருந்தார்.
அந்த சமயத்தில் பெருமாளின் வஸ்திரங்கள் துவைத்து தரும் இந்த ஈரங்கொல்லி முன் வந்தார். தன்னால் அழகிய மணவாளன் கண்டுபிடித்து விட முடியும் என்றார். கேட்டவர்கள் ஆடிப் போய் நின்றனர். காரணம் இவரோ கண் தெரியாதவர். இவரால் எங்கனம் இது சாத்தியம் என்று கேட்க….. தாம் தான் பெருமாளின் திருமஞ்சனத்தின் போது உடுத்தி இருக்கும் ஆடையின் தீர்த்தத்தை உண்டு பல நாட்கள் ருசித்து இருப்பதாகவும், அது தன் நினைவில்… தன் நாக்கின் சுவை நரம்புகளில் ஊடுருவி இருப்பதால் மீண்டும் ஒரு முறை அந்த தீர்த்த பிராசாதத்தை தந்தால் உண்டு பார்த்து சொல்லி விடுவதாக சொல்ல……. அதனை அங்கு இருப்பவர்களும் ஏற்றனர்.
திருமஞ்சனம் நடக்கிறது. ஈர ஆடை தீர்த்தத்தை பிரசாதமாக அந்த ஈரக்கொல்லிக்கு சாதிக்க ருசித்த அவர் இவரே நம்பெருமாள் இவரே நம்பெருமாள் என்று கூத்தாடுகிறார். அதன் பொருட்டே அந்த பெயரே அவருக்கு அழகிய மணவாளனுக்கு இன்றளவும் நிலைத்து விட்டது. அந்த வம்சத்தினர் இன்றும் கூட ஸ்ரீ ரங்கத்தில் வசித்து வருகிறார்கள்.
அந்த குடும்பத்தில் நடக்கும் ஈமச்சடங்கின் போது கோவிலில் இருந்து #கங்கு(நெருப்பு) செல்கிறது. நம்மில் எத்தனை பேருக்கு இது அத்தனையும் தெரியும். தெரிந்தபின் இந்த கோவிலை தவிர்த்து விட்டு நீங்குவது எங்கணம் சாத்தியம், சொல்லுங்கள் பார்க்கலாம்…
ஸ்ரீரங்கம் வெறும் கோவில் மாத்திரம் அல்ல……. உள்ளத்துள் கலந்து விட்ட உயிரோவியம்!
- ஸ்ரீ ராம்