― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைபுலி வருது புலி வருது... 100 நாட்களில் ஊரையே கிலி பிடிக்க வைக்கிறேன்!

புலி வருது புலி வருது… 100 நாட்களில் ஊரையே கிலி பிடிக்க வைக்கிறேன்!

- Advertisement -
pk sekar babu

பொழுது போகாதவன் திடீரென்று நினைத்துக் கொண்டாற்போல புலிவருது புலிவருது என்று அவ்வப்போது கூறி ஊரைக் கிலிபிடிக்க வைப்பானாம். அதுபோன்றது “அனைத்து சாதி அர்ச்சகர்கள் சட்டத்தை 100 நாட்களில் செயல்படுத்துவோம்” என்ற இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு அறிவிப்பு.

இவர் அமைச்சராக இருக்கும் இந்த இ.அ.துறை என்பதே முற்றிலும் சட்டவிரோதமானது, அது கலைக்கப்பட வேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கு நிலுவையில் உள்ளது. இதே போல இந்துக் கோயில்களில் அரசு எந்தவிதத்திலும் தலையிட அதிகாரமில்லை என்ற ரீதியில் போடப்பட்ட பல வழக்குகளும் விசாரிப்பில் உள்ளன.

இந்த விவகாரம் தொடர்பாக, ஏற்கனவே தமிழகத்தில் முன்பு தொடரப்பட்ட வழக்குகளில் ஆகமக் கோயில்களில் ஆகம விதிமுறைப்படி மட்டுமே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று நீதிமன்ற தீர்ப்புகள் தெளிவாகக் கூறியிருக்கின்றன.

மேலும் தமிழகத்தின் பல்வேறுவிதமான கோயில்களில் ஏற்கனவே பல்வேறு சாதிகளைச் சேர்ந்த பூசாரிகள், அர்ச்சகர்கள் இருந்து வருகிறார்கள். எனவே அமைச்சர் “செயல்படுத்துவற்கு” சட்டபூர்வமாக ஒன்றுமில்லை என்பது தான் நிதர்சனம். ஒரு அமைச்சராகப் பட்டவர் இந்த விஷயங்களை சரியாகத் தெரிந்து கொண்டு பேசுவது நல்லது.

கோயில் என்பது மாநில அரசு அலுவலகம் அல்ல, இஷ்டத்துக்கு ஆட்களை நியமிப்பதற்கு. அது ஒரு பாரம்பரியமான நிறுவனம். கோயில் என்பது வெறும் கட்டிடம் அல்ல, சிலைகளும் சிற்பங்களும் அங்குள்ள பௌதீக பொருட்களூம் மட்டுமல்ல. அந்தக் கோயிலை உருவாக்கிய ஆன்மீக, சமய நெறிகள், மரபுகள், அதற்கு பிராண சக்தியையும் தெய்வீகத்தையும் அளித்த பிரதிஷ்டைகள், மந்திரங்கள், பூஜைகள், வேள்விகள், வழிபாடுகள், திருவிழாக்கள், அத்தலத்தில் வந்துறைந்த மகான்களின் நினைவுச் சுவடுகள் எல்லாம் சேர்ந்து தான் கோயில் உயிர்த்துடிப்புள்ளதாகிறது.

“வேதத்தின் மந்திரத்தால் வெண்மணலே சிவமாக – போதத்தால் வழிபட்டான் புள்ளிருக்கு வேளூரே” என்று சம்பந்தர் தேவாரம் கூறுவது இதைத் தான். மதுரையை நமக்கு மீட்டளித்த விஜயநகர சாம்ராஜ்யத்தின் தலைநகராக ஒருகாலத்தில் திகழ்ந்து இன்று இஸ்லாமியப் படையெடுப்பால் வீழ்ந்து சிதைந்து கிடக்கும் ஹம்பியின் கலைநயமிக்க கோயில்களுக்கும், அழிவிலிருந்து மீண்டு இன்றுவரை உயிரோட்டத்துடன் விளங்கும் மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இது தான்.

இந்தப் பண்பாட்டுப் பிரக்ஞை எதுவும் இல்லாத மூடர்கள் தான் “மக்களின் வரிப்பணத்தில் கட்டிய கோயில் பார்ப்பானின் தனிச் சொத்தா” என்று ஊளையிடுகிறார்கள். இவர்களுக்குக் கோயில்களின் மீது எந்த உள்ளார்ந்த அபிமானமும் பற்றும் கிடையாது.

தி.மு.க காரர்களைப் பொறுத்த வரை கோயில் என்பது அதிகாரம் செலுத்துவதற்கும் தாங்கள் கொள்ளையடித்துக் கொழிப்பதற்குமான ஒரு இடம், அவ்வளவு தான்.. நேற்று வரை ‘சீரங்க நாதனையும் தில்லை நடராசரையும் பீரங்கி வைத்துப் பிளக்கும் நாள் எந்நாளோ’ என்று பாடிய மூர்க்கர்களின் அரசியல் வாரிசு தானே இவர்கள்.

தமிழகத்துக் கோயில்களின் மீதும் அது சார்ந்த சமயம், கலை, பண்பாடு மீதும் அன்பும் பற்றும் கொண்ட எல்லா சாதிகளையும் சேர்ந்த இந்துக்களுக்கு, இதுவா அதிமுக்கியமான பிரசினை? இந்து அறநிலையத்துறை கோயில்களில் நடத்தும் பெரும் ஊழல்கள், நிர்வாக முறைகேடுகள், கோயில் சொத்துக்கள் பறிபோகுதல், மிக மோசமான பராமரிப்பு, கலைச் செல்வங்களின் சீரழிவு, கோயில் வளாகத்தின் தூய்மை, பாதுகாப்பு, சீரற்ற கூட்ட ஒழுங்கு, பக்தர்களுக்கும் பயணிகளுக்கும் ஏற்படும் இடர்ப்பாடுகள், கோயிலில் புனிதமும் பக்தியுணர்வும் குறைந்து வணிகமயமாதல் – இவை தான் அவர்களை வருத்தும் பிரசினைகள். இவற்றை வைத்துத் தான் “ஆலய வழிபடுவோர் சங்கம்” உள்ளிட்ட பல அமைப்புகள் போராடிக் கொண்டிருக்கின்றன.

சமயச் சீர்திருத்தம் என்ற அளவில், அனைத்து சமுதாய இந்துக்களுக்கும் வழிபாட்டிலும் சமயப் பணிகளிலும் சமமான பங்களிப்பும் உரிமைகளும் கடமைகளும் இருக்கவேண்டும் என்பது ஒரு நல்ல இலட்சியம் தான். அதை நான் கொள்கையளவில் ஆதரிக்கிறேன்.

ஆனால், பழமை வாய்ந்த கோயில்களில் அவற்றின் பழைய மரபுகளும், பாரம்பரியமுமே ஒரு மதிப்புக்குரிய பொருளாகக் கருதிப் பாதுகாக்கப் படுகின்றன என்பதை மறந்துவிடக் கூடாது. அந்த மரபுகள் வழிவழியாக அர்ச்சகர்கள், ஓதுவார்கள், அரையர்கள், சிற்பிகள், தேவதாசிகள், வாத்தியக் காரர்கள் மற்றும் பூக்கட்டிப் பண்டாரங்கள் வரையில் தொடர்ந்து வந்தன.

தமிழகத்தில் இவற்றில் எல்லாம் அழிந்து விட்டாலும் அர்ச்சகர்களும் சிற்பிகளும் ஓரளவுக்கு ஓதுவார்களும் மட்டுமே தங்கள் மரபுகளைக் காப்பாற்றி வாழ வைப்பதற்கு முடிந்துள்ளது. இதற்காக அவர்கள் செய்துள்ள தியாகங்கள் கணக்கிலடங்காதவை. “பிழைப்பு” “வாழ்வாதாரம்” என்ற அளவில் மட்டும் இதைக் குறூக்கி விட முடியாது.

பற்பல ஏராளமான கிராமங்களிலும் ஊர்களிலும் ஒரு வேளை சோற்றுக்கே அல்லாடும் நிலை வந்த போது கூட, கோயிலை விட்டுவிட்டு ஓடிவிடாமல் அதன் நித்ய பூஜையை தங்கள் தர்மமாகக் கருதி அவற்றைக் காப்பாற்றி வழிபாட்டிடங்களாகப் பாதுகாத்து அளித்திருக்கிறார்கள் சிவாச்சாரியார்களும் பட்டர்களும் மற்றும் சில அர்ச்சக சமுதாயங்களும்.

இதன் அடிப்படையில் அத்தகைய ஆகமக் கோயில்களின் பூஜை உரிமைகளை சட்டபூர்வமாகத் தங்கள் குடும்ப வாரிசுகளுக்கு தக்க வைத்துக் கொள்ளக் கோருவதற்கான தார்மீக நியாயம் அவர்களிடம் உள்ளது (பூஜை உரிமைகளை மட்டுமே அவர்கள் கோருகிறார்கள், சொத்துக்களை வாங்கும், விற்கும், நிர்வாகம் செய்யும் எந்த உரிமைகளையும் அல்ல). இந்த உரிமையை அவர்களிடம் விட்டு வைத்திருப்பதால், தற்போதைய சூழலில் இந்துமத சமூக சீர்திருத்த திட்டத்திற்கு மிகப் பெரிய கேடு எதுவும் வந்து விடாது என்பது என் தனிப்பட்ட கருத்து.

கடந்த 150 ஆண்டுக்கால சமய சீர்திருத்தங்களின் விளைவாக, இன்றைக்கு இந்து மத ஞானமும், புனித நூல்களும், வேத வேதாந்தக் கல்வியும், அடிப்படையில் கோயில் சார்ந்து உருவான பரதம் போன்ற பல கலைகளும் வெகுஜன அளவில் பரவலாக எல்லா தரப்பினராலும் பயிலக் கூடிய நிலை வந்திருக்கிறது. சின்மயா மிஷன், அமிருதானந்தமயி மடம் போன்ற அமைப்புகள் வைதீக, தாந்திரீக பிரதிஷ்டை முறைகளின் படி தாங்கள் அமைக்கும் புதிய கோயில்களில் எந்த சாதிப் பாகுபாடுகளும், ஆண் – பெண் வேறுபாடுகளும் இன்றி அர்ச்சகர்களை உருவாக்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள்.

பண்டரிபுரம் மற்றும் பீகாரின் ராம் ஜானகி மந்திர் போன்ற பழம்பெருமை கொண்ட கோயில்களில் கூட, அக்கோயிலின் நிர்வாகமும் பரம்பரை பூசாரிகளும் சேர்ந்து ஏகமனதாக முடிவெடுத்து தலித்கள் உட்பட பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் அர்ச்சகராகி இருக்கிறார்கள்.

இது எதுவும் அரசின் நிர்ப்பந்தத்தாலோ அதிரடி சட்ட நடவடிக்கைகளாலோ வந்ததல்ல. ஆனால், இந்தக் கோயில்கள் செய்வது போலவே தமிழகத்தின் மரபார்ந்த ஆகமக் கோயில்களும் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துவது இந்துமதத்தின் பன்மைத் தன்மைக்கே எதிரானது. அர்ச்சகர் விஷயத்தில் மட்டுமல்ல, கோயில்களில் பலிகொடுப்பதைத் தடுப்பது, சபரிமலைக் கோயிலில் பெண்களுக்கு அனுமதியளிப்பது போன்ற விவகாரங்களிலும் இதுவே எனது நிலைப்பாடு.

  • ஜடாயு, பெங்களூர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version