வக்ப் நிலங்களை குறைந்த வாடகைக்கு தான் கொடுக்க வேண்டும். சர்ச் நிலங்களை ஏழைகளுக்கு மட்டுமே சகாய வாடகைக்கு கொடுக்க வேண்டும் என்று எவரும் சொல்வதில்லை.
₹300 கோடி சொத்தை மீட்டோம் என்று அமைச்சர் சொல்கிறார். பாராட்டுகிறோம். இந்த சொத்தை ஏழைகளுக்கு குறைந்த கட்டணத்தில் வாடைக்கு கொடுப்போம் என்கிறார். பெரும் தவறு என்கிறோம்.
சந்தனகட்டையை அடுப்பு எரிக்கப் பயன்படுத்தலாமா? அதன் உரிய விலை பெற்றால் பல வீடுகளில் அடுப்பெரியுமே? நூற்றுக்கணக்கான ஏழைகள் பசி தீர்க்கலாமே?
கோயில் நிலங்களை எந்தக் காரணத்திற்காகவும் விற்கக் கூடாது. குறைந்த வாடகைக்கும் கொடுக்கக் கூடாது. அவற்றின் நியாய வாடகை/சந்தை வாடகை பெற்று அந்தப் பணத்தில் அறம் செய்ய வேண்டும். இதைக் கோயில் அறங்காவலர்கள் மட்டுமே செய்ய வேண்டும்.
அரசு அதிகாரிகள் இவ்விஷயத்தில் முடிவெடுக்க எந்த அதிகாரமும் அவர்களுக்கு இல்லை ( அறம், தர்மம் இவற்றைச் சிந்திக்க அவர்களுக்குத் தெரியாது என்பது வேறு விஷயம் அரசியல்வாதிகள் சொற்படி பணிந்து நடப்பது தான் அவர்கள் கற்றது )
8 வருடங்களாக அயோக்கியன் ஒருவன் வடபழனி ஶ்ரீ முருகன் கோயில் சொத்தை அனுபவிக்க விட்டு விட்டு தற்போது அதை புதிய அரசு மீட்டிருக்கிறது. நல்லது. சரி. 8 வருடங்களாக கோயிலுக்கு வர வேண்டிய பணம்?
அதற்கு முன்பாக தமிழக அரசின் மகளிர் மேம்பாட்டுக் கழகம் வருடக்கணக்கில் வாடகைக் கொடுக்காமல் ஏமாற்றி வந்தது. வேடிக்கை பார்த்து வந்தது துப்பு கெட்டத் துறை.
அது மட்டுமன்றி, வடபழனி ஶ்ரீ முருகன் கோயில் பணத்தை எடுத்து ஆணையர் அலுவலக கழிப்பறை கட்டுவது, கூட்ட அரங்குக்குச் செலவு செய்வது, ஆணையர் அலுவலகத்திற்கு வாரம் தோறும் ஒரு லாரி டாங்கர் குடிநீர் சப்ளை, ஆணையர் அலுவலக கூட்டத்திற்கு டிபன், உணவு சப்ளை…. இப்படி கொள்ளை அடித்து வந்தனர்.
இப்படித்தான் கோயில் நிலங்கள் மீட்பு என்று அடிக்கடி செய்தி வரும். ஆனால், அந்த நிலங்களில் இருந்து வர வேண்டிய கோடிக்கணக்கான வாடகை பாக்கி? அது பற்றி வாய் திறக்காது இந்த யோக்கியர்கள் துறை.
- டி.ஆர்.ரமேஷ்