திருமணச் சிக்கலும் கொரொனாவும்:
இப்பொழுது ஆண், பெண் திருமணங்கள் எல்லாப் பிரிவினருக்கும் சிக்கலாக இருக்கின்றன!
பெற்றோர்கள் பெருங் கவலையில் இருக்கிறார்கள். இனி உறவு கடந்து எல்லை கடந்து செல்ல வேண்டிய காலம் வந்து விட்டது. இப்போது ஒரு குழந்தை போதும் என்பதும் குடும்பக் கட்டுப்பாடு என்பதும் ஆண், பெண் எண்ணிக்கை சம நிலையைப் பெற முடியவில்லை.
சில பெற்றோர் முடிவைப் பிள்ளைகள் கேட்பதில்லை; பிள்ளைகள் விருப்பத்தைப் பெற்றோர்கள் ஏற்பதில்லை, சிலர் அப்பா, அம்மா முடிவே தன் முடிவு என்றும் 45 வயது வரை திருமணமாகாமல் இருக்கும் இரு பாலரையும் உள்நாட்டிலும், வெளிநாட்டுப் பயணங்களிலும் பார்த்து வருகிறேன்.
சில நேரங்களில் வரதட்ணை பிரச்னை இன்னும் ஓயவில்லை. அப்புறம் ஜாதகம்… பெண் வீட்டார் சரி என்றால் மாப்பிளை வீட்டார் பொருத்தமில்லை என்கிறார்கள். படித்தவர்களுக்கு வேலைவாய்ப்பு இல்லை என்பது இளைஞர் மத்தியில் பெரும் அழுத்தமாகவும் திருமணத் தடையாகவும் இருக்கிறது.
நண்பர்களும் உறவினர்களும் தொலைபேசியில் அழைத்து என்னிடம் கல்லூரியில் படிக்க இடம் கேட்பார்கள். கடந்த ஒரு மாதமாக தொலைபேசியில் அழைத்து கொரொனா கிசிச்சைக்கு இடம் கேட்டு வருகிறார்கள். நானும் இடம் வாங்க பட்ட பாடு சொல்லில் விவரிக்க முடியாது. அப்படியும் இருவரைக் காப்பாற்றி விட்டேன்.
ஆனால் என் நண்பர் குடும்பத்தின் 32 வயது நிறைந்த மென்பொறியாளரைக் காப்பாற்ற முடியாமல் 10 நாட்களாகத் தவித்து வருகிறேன். அவரின் மனைவியும் இரண்டு கைக்குழந்தைகளும் அப்பாவைக் கேட்டு அழும் குரலைக் கேட்டு உறங்க முடியவில்லை.
அவருக்கு ஆரம்ப நிலையில் மருத்துவம் பார்த்த டாக்டர்,
நிலைமை மோசமான நிலைக்குப் பின் எடுத்துச் செல்லக் கட்டாயப் படுத்திய பின் பெரிய பரிந்துரையில் அரசு மருத்துவக் கல்லூரியில் அவசரப் பிரிவில் சேர்த்த பின் டாக்டர்கள் போராடி ஆக்சிஜன் 85க்குக் கொண்டு வந்து எல்லாவித ஊசிகளும் போட்டும் காப்பாற்ற முடியவில்லை. அங்கு என் மாணவர்கள் டாக்டர்கள் சண்முகம், ஜெயபிரகாஷ் தினம் தினம் பேசி உரிய சிகிச்சைக்குத் துணையாக இருந்தார்கள். அவரின் உயிரைக் காக்கப் போராடிய டாக்டர்களுக்கு நன்றி கலந்த வணக்கம்.
இதில் முதலில் மருத்துவம் பார்த்தவர் சரியாகக் கவனித்து வழிகாட்டியிருந்தால் காப்பாற்றி இருக்கலாம் என்பது என் புரிதல். அவர் குடும்பத்தோடு மே மாதம் அமெரிக்கா செல்ல இருந்தார். அவருக்கு வந்த கொரோனா, அந்தக் குடும்பத்தின் வாழ்க்கையைச் சோகமாகி விட்டது.
இப்போது எனக்கு வரும் தொலைபேசி அழைப்புகள் எல்லாம் பையனுக்குப் பெண் பார்க்க வேண்டும்; பெண்ணுக்கு நல்ல பையானா பார்த்து சொல்லுங்க என்பதுதான். நண்பர்களும் உறவினர்களும் எல்லாப் பிரிவினரும் இப்படி கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.. அதிலும் தாத்தா, பாட்டிகளும் அழைத்துப் பேசும் தவிப்பைக் கேட்டு வருகிறேன்.
பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்கள் பிள்ளைகளுக்குரிய நேரத்தில் திருமணம் செய்யாமல் வேலை வேலை என்று அலைந்து விட்டேன் என்று புலம்பி வருகிறார்கள். அதிலும் கொரோனா வந்து இன்னும் பெரிய சிக்கலை உருவாக்கி விட்டது. நிச்சயித்த திருமணத்தை நடத்த முடியவில்லை. அமெரிக்காவிலிருந்து மாப்பிள்ளை வர முடியவில்லை. திருமணம் முடித்தவர்கள் போகவும் முடியவில்லை. இப்போது எங்கும் திருமண மையங்கள் உருவாகி வணிக மயமாகி விட்டது. இதை ஒரு முறைப்படுத்த வேண்டும். இதில் தகவல் காப்பு இல்லை.. சில தகவல்கள் சரியாக இல்லாமல் பிரச்னைகள் வருகின்றன.
தகவல்கள் சரிபார்க்கப்பட்டு தக்கார் ஒருவரிடமும் உறவினர் ஒருவரிடமும் சான்று பெற்றுப் பதிவேற்றம் செய்ய வேண்டும். இக்காலச் சூழலுக்கு இது தேவையானது தான். ஆனால் முறைப்படுத்த வேண்டும். இதைப் பலரின் குரலாகப் பதிவு செய்கிறேன்.
கவிஞர் நா. காமராசன் 1970ல் எழுதிய முதிர்கன்னி கவிதையில்
“எல்லாப் பத்திரிகைக்கும் ஆயுள் சந்தா கட்டிவிட்டு, கல்யாணப் பத்திரிகைகளைக் கண்ணில் காணமுடியாத புத்திரிகள் ஏராளம்”
அதில் இப்போது கல்யாணப் பத்திரிகைகள் கண்ணில் காண முடியாத புத்திரர்களும் ஏராளம்” என்று சேர்த்துக் கொள்ளும் கால கட்டம் வந்து விட்டது.
- சுபாஷ் சந்திரபோஸ்
(பேராசியர், பணி ஓய்வு)