Home உரத்த சிந்தனை அன்று சுவாதி… இன்று சுவேதா..! மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்!

அன்று சுவாதி… இன்று சுவேதா..! மாறாத ‘நாடகக் காதல்’ மனோபாவம்!

swetha murder
swetha murder

தடம் புரளும் இளம் தலைமுறை,
கேள்விக்குறியாகும் பெண்கள் பாதுகாப்பு.!
சு.ஆ.பொன்னுசாமி

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் சுவாதி என்கிற இளம் பெண்ணை ராம்குமார் என்கிற இளைஞன் காலை நேரத்தில் துடிதுடிக்க வெட்டி படுகொலை செய்த நிகழ்வின் ரணம் இன்னும் நம் மனதின் அடியாழத்தில் பதிந்திருக்கும் நிலையில் அதே போன்ற மற்றொரு நிகழ்வு வியாழக்கிழமை மாலை (23.09.2021) சென்னை, தாம்பரம் ரயில் நிலையம் அருகில் 19வயதான சுவேதா எனும் மைக்ரோ பயாலஜி மாணவியை ராமச்சந்திரன் என்கிற 24வயது பொறியியல் பட்டதாரி இளைஞர் கழுத்தை அறுத்து படுகொலை செய்திருப்பது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமைகள் பொது இடங்களிலும், கல்வி நிலையங்களிலும் நாளொரு மேனியும், பொழுதொரு வண்ணமுமாக தமிழகத்தில் சர்வசாதாரணமாக அரங்கேறி கொண்டிருக்கும் நிலையில் பெண்களின் பாதுகாப்பு என்பது மிகப்பெரிய கேள்விக்குறியாகி நிற்கிறது.

ஆண்கள் குறிப்பாக இளைஞர்கள் இப்படி தடம் மாறிச் செல்ல காரணம் தான் பட்ட கஷ்டங்களை, வேதனைகளை பிள்ளைகள் படக்கூடாது என்று அதீத செல்லம் கொடுத்து வளர்ப்பதும், அவர்களை முறையாக கண்காணிக்க தவறிய பெற்றோர் ஒருபுறம் என்றால்

நல்ல கல்வி கொடுத்து, நல்லெண்ணங்களை இளைய சமுதாயத்தினர் மத்தியில் விதைக்க வேண்டிய அரசுகளோ இளைஞர்கள் திசை மாறிச் செல்ல அவர்களுக்கு போதையூட்டும் சாராயக்கடைகளை நடத்தி அதன் மூலம் இலக்கு வைத்து வருவாய் ஈட்டிட துடிப்பதும், கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதை வஸ்துகள சர்வசாதாரணமாக புழங்கினாலும் அவற்றை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்காமல் வேடிக்கை பார்த்து கொண்டிருக்கும் ஆட்சியாளர்கள், அதிகாரிகள் ஒருபுறம்,

நாய் விற்ற காசு குரைக்காது என்பது போல கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பாலியல் வன்கொடுமை செய்து விட்டு சட்டத்தின் பிடியில் இருந்து எளிதாக எப்படி தப்பிக்கலாம் என பாடமெடுப்பதோடு, சமூகத்தில் நடப்பதையே படமாக்குகிறோம் என சுயநலத்தோடு தன்னிலை விளக்கமளிக்கும் திரையுலகம் ஒருபுறம்,

swetha murder1

குடும்பத்தை சீரழித்து பிற மனையாளின் கணவனை கவர்வது, அடுத்தவர் மனைவியை அபகரிப்பது, நயவஞ்சகமாக குடும்பத்தை பிரிப்பது, நல்லவனை, நல்லவளை குடிக்க வைத்து கும்மாளம் போட வைப்பது, இளம் சிறார் தொடங்கி பதின்ம வயது இளம் தலைமுறை வரை காதல் என்கிற பெயரில் திசைமாறி செல்ல வழிகாட்டுவது என சின்னத்திரை வழியே வீட்டின் வரவேற்பறைக்குள்ளேயே வந்து கெட்டுப் போக வகுப்பெடுக்கும் தொலைக்காட்சி தொடர்கள் என 21ம் நூற்றாண்டின் தலைமுறை சின்னாபின்னமாகி சீரழிந்து போக காரணமாக இருக்கிறது.

எதுவும் நம் வீட்டில் நடைபெறாதவரை அந்த தவறுகளை எல்லாம் வெறும் செய்திகளாக மட்டுமே பார்ப்பதும், இன்று செய்தியாகும் தவறுகளை நாமும் எளிதாக கடந்து போவதும், நீர்த்துப் போய் காலாவதியான சட்டங்களை வைத்து கொண்டு குற்றவாளிகள் எளிதில் தப்பிப்பதை கண்டும் காணாமல் ஆட்சியாளர்கள் இருப்பதும் மாற வேண்டும்.

“அண்ணே அடிக்காதீங்கண்ணே வலிக்குதுண்ணே” என கதறிய அழுததைக் கூட ரசித்து பெல்டால் அடித்து பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிகள் அதிகார பலத்தால் தப்பிக்கும் நிகழ்வுகள் இச்சமுதாயத்தை பிடித்துள்ள புற்றுநோயை விட கொடுமையான விஷங்களாகும்.

ஜனநாயகம், ஜனநாயகம் என பேசிப் பேசி இங்கே பணநாயகமும், அதிகார திமிரும் தான் வளர்ந்துள்ளதே தவிர ஜனநாயகம் காக்கப்பட சட்டங்கள் கடுமையாக்கப்படவில்லை. குற்றவாளிகளுக்கான தண்டனையும் கடுமையாக இல்லை என்பதே இங்கே தவறு செய்பவர்களையும், தவறு செய்ய நினைப்பவர்களையும் மேலும், மேலும் தவறு செய்ய தூண்டுவதாக அமைந்து விடுகிறது.

அரபுநாடுகளைப் போல இந்தியாவிலும் தவறு செய்தவர்களுக்கு கடுமையான தண்டனை தாமதமின்றி வழங்கப்பட வேண்டும். அதிகார பலமும், ஆள்பலமும் சட்டங்களை வளைக்காத வகையிலும், ஆட்சி, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு வளைந்து கொடுக்காத நிலையிலும் உள்ள பலமான சட்டங்கள் இயற்றப்பட்டால் மட்டுமே சுவாதி, ஸ்வேதாக்களும், ஹாசினி போன்ற பிஞ்சுகளும் இனி தமிழகத்தில் காப்பாற்றப்படுவார்கள். பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை போன்ற கொடுமைகளும் தவிர்க்கப்படும்.

அதுமட்டுமின்றி இளம் தலைமுறையினர் பெருமளவில் சீரழிந்து போக காரணமாக இருக்கும் வகையிலான வன்முறைக் காட்சிகள், திசைமாறி போகும் போதை வஸ்துகள் பயன்படுத்தும் காட்சிகள் திரைப்படங்களில் இடம்பெறாவண்ணம் தணிக்கைத்துறையின் விதிகள் கடுமையாக்கப்பட வேண்டும். அத்துடன் இல்லத்தின் வரவேற்பறைக்கே தீயவைகளை கொண்டு வரும் சின்னத்திரையை தணிக்கைத்துறையின் (சென்சார் போர்டு) கொண்டு வந்து பிஞ்சுகளின் மனதில் நஞ்சை விதைக்கும் சின்னத்திரை தொடர்களை ஒளிபரப்ப நிரந்தரமாக தடை விதிக்க வேண்டும்.

மேலும் படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்தும் வகையில் டாஸ்மாக் மதுபான கடைகளில் 30வயதுக்கு மேற்பட்டோருக்கே மது விற்பனை செய்யவும், மது வாங்க வருவோர் ஆதார் எண் மூலம் மது விற்பனை செய்திடவும் அதற்கு பயோமெட்ரிக் முறையை அமுல்படுத்திடவும் தமிழக அரசு உத்தரவிட வேண்டும்.

பள்ளி, கல்லூரி மற்றும் வழிபாட்டு தலங்கள், பேருந்து, ரயில் நிலையங்களின் சுற்றுவட்டார பகுதிகளில் மதுபானக்கடைகள் முற்றிலுமாக இயங்கிடவும், சிகரெட், பான்மசாலா, குட்கா உள்ளிட்ட போதை வஸ்துகளை விற்பனை செய்திட நிரந்தரமாக தடை விதிப்பதோடு, காவல்துறையினரின் ரோந்து நடவடிக்கைகளை அதிகப்படுத்த வேண்டும்.

இந்த தலைமுறையும், அடுத்த தலைமுறையும் சீரழிந்து போகாமல் இருக்க வேண்டுமானால் தீய சக்திகளை அழிக்க அரசு இரும்புக்கரம் கொண்டு ஒடுக்குவதே நிரந்தர தீர்வாக இருக்க முடியும்.


கட்டுரையாளர்: நிறுவனத் தலைவர், தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம்

NO COMMENTS

LEAVE A REPLY Cancel reply

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Exit mobile version