― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஇளம் தலைமுறையைக் காப்பாற்றாதே இந்தக் கல்வித் தரம்!

இளம் தலைமுறையைக் காப்பாற்றாதே இந்தக் கல்வித் தரம்!

- Advertisement -
school leave

இந்தியாவில் ஆரம்பப் பள்ளி மாணவர்களிடையில் அடிப்படையான கல்வியறிவு எந்த அளவு உள்ளது என்பது குறித்து ஸ்டான்ஃபோர்டு பல்கலை மூலம் நிகழ்த்தப் பட்ட ஆய்வு முடிவுகள் குறித்த செய்தி தற்போது வந்துள்ளது.

இந்தியா முழுவதும் 10,000 பள்ளிகளைச் சேர்ந்த, 20 மொழிகளின் வழி கல்வி பயிலும் 86,000 மூன்றாம் வகுப்பு மாணவர்களைக் கொண்டு இந்த ஆய்வு நடத்தப் பட்டதாம். எனில், சராசரியாக ஒரு பள்ளிக்கு 8-9 மாணவர்கள். பயிற்று மொழியில் எழுதியிருக்கும் சாதாரணமான வாக்கியங்களை தப்பில்லாமல் வாசிக்க முடிவது, கணிதத்தில் எண்கள், கூட்டல் கழித்தல் தெரிந்திருப்பது – இதுதான் அடிப்படை கல்வியறிவுக்கான அளவுகோல். எல்லா மொழிகளிலும் ஒரே மாதிரியான சாதாரண வாக்கியங்களை எழுதி வாசிக்க சொல்லியிருப்பார்கள் என்று ஊகிக்கலாம்.

ஆய்வு முடிவுகளின்படி,

  • இந்திய அளவில் ஒட்டுமொத்தமாக 42% மாணவர்கள் சராசரி அடிப்படைக் கல்வியறிவு கொண்டிருக்கிறார்கள்.
  • பஞ்சாபி வழி பயிலும் மாணவர்களில் 56% பேர் (உலக அளவிலான) சராசரிக்கும் அதிகமான கல்வியறிவு பெற்றவர்களாக உள்ளனர், 6% பேர் சராசரிக்கும் குறைவு.
  • தமிழ் வழி பயில்பவர்களில் மிகக் குறைவாக 9% பேர் மட்டுமே சராசரிக்கு அதிகமான கல்வியறிவு கொண்டவர்கள். 48% பேர் சராசரிக்கும் கீழே.
  • பஞ்சாபி தவிர்த்து இன்னும் 6 மொழிகளில் (ஆங்கிலம், வங்காளி, ஒரியா.. ) பயில்பவர்களில் 30% பேர் சராசரிக்கும் அதிகமான கல்வியறிவு கொண்டுள்ளனர்.

இதன்படி “Tamil at the bottom” என்று சில பத்திரிகைகள் செய்தித் தலைப்பிட்டுள்ளனர். தமிழ் என்ற மொழியை இப்படிச் சுட்டி எழுதுவதில் அவர்களுக்கு ஏதேனும் குரூர சந்தோஷம் இருக்கும் போலும்.

நிற்க. இந்த ஆய்வு செய்யப் பட்ட விதத்தை வைத்துப் பார்த்தால், ஆங்கில மீடியம் என்பதையும் 20 மொழிகளில் ஒன்று என்று கணக்கெடுத்துள்ளார்கள் என்று தெரிகிறது. இந்தியாவில் நாகாலாந்து, மிசோரம் போன்ற வடகிழக்கு மாநிலங்களில் மட்டுமே ஆங்கிலம் அதிகார மொழி என்பதால் அங்கு மட்டும் ஆங்கிலத்தில் வாசிக்க சொல்லியிருப்பார்கள் போல. இல்லையென்றால் ஆங்கிலம் அல்லவா “டாப்”பில் வந்திருக்கும் 🙂 மற்ற அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மாநில மொழிவழி பயிலும் மாணவர்களிடமே அதிகமாக சென்று கணக்கெடுத்துள்ளார்கள் என்று தெரிகிறது. இந்த அணுகுமுறையால் தான் இத்தகைய முடிவுகள் வந்துள்ளன. உண்மையில் இது சரியான, பாராட்டுக்குரிய அணுகுமுறை.

தமிழ் குறித்த முடிவுகள் எதை உணர்த்துகின்றன?

  • தமிழ்நாட்டில் மிகச்சில அரசு உதவி பெறும் பள்ளிகள், அதைவிடக் குறைவான தனியார்கள் பள்ளிகள் தவிர்த்து, அரசுப் பள்ளிகளில் மட்டுமே பெரும்பான்மையாக தமிழ் மீடியம் உள்ளது. அங்குள்ள குழந்தைகளிடம் தான் ஆய்வு செய்யப் பட்டுள்ளது என்று தோன்றுகிறது.
  • தமிழ்நாட்டில் இன்று சமூகத்தின் கடைசி நிலை அடித்தட்டில் உள்ள மிக ஏழையான மக்கள் மட்டுமே தங்கள் குழந்தைகளை அத்தகைய அரசுப் பள்ளிகளில் படிக்க வைக்கிறார்கள். அதற்கு சற்று மேல்நிலையில் உள்ள உழைக்கும் மக்களின் குடும்பங்கள் கூட ஆங்கில மீடிய பள்ளிகளுக்குத் தான் அனுப்புகிறார்கள்.

இதுதான் தமிழ்நாட்டின் நிலைமை என்று கருதலாம். இப்படி இருக்கையில், முடிவுகள் அந்த மாதிரி வருவதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

பஞ்சாபிலும் மற்ற சில மாநிலங்களிலும் பல இடங்களில் நடுத்தர வர்க்கத்தினரும் கூட தங்கள் குழந்தைகளை அரசுப் பள்ளிகளுக்கு அனுப்புகிறார்கள், தாய்மொழி வழிக் கல்வியை அந்தக் குழந்தைகள் கற்கிறார்கள் என்று தோன்றுகிறது. அதன் காரணமாக வங்காளி, குஜராத்தி, ஹிந்தி மீடியம் அரசுப் பள்ளிகள் ஓரளவு குறைந்தபட்ச தரத்துடன் செயல்படுகின்றன என்று கருதலாம்.

தேசம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் ஆங்கில மோகத்தைப் பார்க்கையில், அந்த மாநிலங்கள் இந்த விஷயத்தில் கவனமாகவும் தன்முனைப்புடனும் தொடர்ந்து செயல்படவில்லை என்றால், தமிழ்நாட்டைப் போன்ற நிலைமை தான் அங்கும் சில வருடங்களில் ஏற்படும்.

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியின், அரசுப் பள்ளிகளின் மாபெரும் வீழ்ச்சி – அதைத் தான் இந்த ஆய்வு முடிவுகள் சுட்டுகின்றன. மக்களிடத்திலும் அரசுப் பள்ளியை மேம்படுத்த வேண்டும் என்ற மனப்பான்மைக்குப் பதிலாக, எப்படி குழந்தைகளை கூடிய சீக்கிரம் அங்கிருந்து அகற்றி வேறு “நல்ல” பள்ளியில் சேர்க்கலாம் என்ற மனநிலையே உள்ளது.

இந்த சூழலில், மக்களின் ஈடுபாடு, அதிரடியான கண்காணிப்புகள், ஆசிரியர்கள் மற்றும் கற்பித்தல் குறித்த தரக்கட்டுப் பாடுகள் ஆகியவற்றை தீவிரமாக அமல்படுத்தினால் அன்றி இனி இதில் முன்னேற்றம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவு என்றே தோன்றுகிறது.

-ஜடாயு, பெங்களூரு

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version