உயர்நீதிமன்றத்தில் முதன்முதலில் பட்டியல் சமூகத்தவரை நீதிபதியாக்கியது திமுகதான், கலைஞர்தான் என்று புதிய தலைமுறையில் பேட்டிக்கொடுத்த வைகோ கூறியிருக்கிறார். இது உண்மையல்ல. வடிகட்டின பொய்.
இந்த நிகழ்வைப் பற்றி அப்போதே ஆங்கிலத்தில் தி.பெ.கமலநாதன் அவர்கள் எழுதியிருக்கிறார். இப்போது அந்நூல் தமிழிலும் கிடைக்கிறது. அவர் எழுதுகிறார் :
…இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வேளையில் நீதிபதி வரதராஜன் செசன்ஸ் நீதிபதிக்குரிய அந்தஸ்தில் நீதிமன்றங்களின் பணிவரம்பு நிர்ணயக் குழுவில் ஒரு உறுப்பினராக இருந்தார். அடுத்த பதவி உயர்வு இயல்பாகவே உயர்நீதிமன்ற நீதிபதி பதவியே.
நீதிபதி வரதராஜன் மிகக் கீழ்மட்டத்திலுள்ள மாவட்ட நீதிபதி என்ற நிலையிலிருந்து செசன்ஸ் நீதிபதியெனும் அந்தஸ்துக்கு தம்மைத் தாமே உயர்த்திக் கொண்டவர். எந்தவொரு கறையுமில்லாதிருந்த அவரது பணி அனைத்துத் தரப்பினராலும் பாராட்டப்பட்டது.
உயர்நீதிமன்ற நீதிபதிகள் நியமன வட்டத்தில் பணி மூப்புள்ள நீதிபதியின் வாய்ப்பு வந்தது. அவ்வேளையில் நீதிபதி வரதராஜன் பதவி உயர்வுக்கான விளிம்பில் இருந்தார். நீதிபதி வரதராஜனின் பெயர் பணிமூப்புள்ள நீதிபதிகளின் பட்டியலிலிருந்து உயர்நீதிமன்ற நீதிபதி பதவிக்குச் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியால் பரிந்துரைக்கப்பட்டது.
அக்காலக் கட்டத்தில் தமிழ்நாட்டில் திமுக கட்சி அதிகாரத்திலிருந்த்தென்பது வெறும் தற்செயல் நிகழ்வேயாகும். முதல் அமைச்சரும் சட்ட அமைச்சரும் குடியரசுத் தலைவரால் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படுவதற்காகத் தலைமை நீதிபதி அளிக்கும் பரிந்துரைக்கு ஒப்புதல் தந்து அப்பரிந்துரையை மத்திய அரசுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
முதல் அமைச்சரும் சட்ட அமைச்சரும் தங்களிடம் அந்தக் கோப்பு வந்தவுடனேயே தங்களது முத்திரையை அதில் இட்டிருக்க வேண்டும். அவர்கள் அதைச் செய்தார்களா? நீதிபதி வரதராஜனைத் தமிழ்நாடு பொதுப்பணித் தேர்வாணையத்தின் ஒரு உறுப்பினராக்கிட திமுக முயற்சி செய்தது. நீதிபதி வரதராஜன் தமது இசைவினைத் தந்திட மறுத்துவிட்டார். பின்னர் அவர்கள் சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி மூலமாகவும் முயற்சி செய்தார்கள். அவர்களுடைய கோரிக்கையை அவரும் நிராகரித்தார். நீதிபதி வரதராஜன் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமனம் பெறுவது ஆறு மாதங்களாகத் தாமதப்படுத்தப்பட்டது.
இதுதான் நடந்தது. இவற்றை மறைத்துவிட்டு ஏதோ அவர் திமுக ஆட்சியால்தான் – திராவிட இயக்கத்தவரால்தான் உயர்நீதிமன்ற நீதிபதியானார் என்று சொல்வது கடைந்தெடுத்த அயோக்கித்தனமாகும்.
- ம.வெங்கடேசன்