பிப்.14 வியாழக்கிழமை காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் நம் இந்திய துணை ராணுவப் படையினர் மீது பாகிஸ்தான் ஆதரவு பெற்ற இஸ்லாமிய பயங்கரவாத அமைப்பான ஜெய்ஷ் இ மொஹம்மத் பயங்கரவாதி தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தியதில் நம் இந்திய வீரர்கள் 40 பேர் வீர மரணம் அடைந்தனர். இந்தச் சம்பவத்தால் நாட்டை நேசிக்கும் அனைவருமே அதிர்ச்சி அடைந்தனர். நம்மைக் காக்கும் ராணுவ வீரர்களுக்கு நாம் மனதால் ஒருங்கே நின்று தார்மீக ஆதரவு தருவதுதான் நன்றிக்கடனாக இருக்க முடியும்!
இந்தத் தாக்குதலைச் செய்தவன், பகிரங்கமாக வீடியோ வெளியிட்டிருக்கிறான். செய்தவன் நானே செய்தேன் என்று கொக்கரித்திருக்கிறான். ஆனால், இந்திய மண்ணில் விளைந்த சோற்றையும் நீரையும் உண்டு, இந்த மண்ணைத் தூற்றும் துரோகியரும் நாட்டில் இருக்கின்றனர் என்பதை இந்தச் சம்பவத்தின் பின்விளைவுகள் காட்டின. தாயின் பாலுண்டு தாயைத் தரம் தாழ்ந்து விமர்சிக்கும் பேயின் நிலையைப் பெற்றிருக்கிறார்கள் தமிழர்கள் என்று கூறிக் கொள்ளும் சிலர்!
தமிழ்க் கவிஞன் என்று சொல்லிக் கொள்ளும் சினிமா பாடல் எழுத்தாளர் வைரமுத்து, எங்கோ நடக்கும் சிரியாவுக்கு கவிதை எழுதினார். ஆனால், நாட்டின் சொந்த மகன்கள் அந்நிய மத பயங்கரவாதிகளின் கொடூரப் பசிக்கு இரையாகும் போது, வாய் ஊமையாகி வக்கற்ற நிலையில் கிடப்பார். இதை மையப் படுத்தி, சமூக வலைத்தளங்களில் பலரும் மனம் குமுறி கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
சிரியாவுக்குக் கவிதை எழுதிய வைரமுத்து, தன் சொந்த நாட்டு ராணுவத்திற்கு எழுத மாட்டான்.. திராவிட வளர்ப்பு அப்படி… – என்ற கருத்துகள் பேஸ்புக், டிவிட்டர், வாட்ஸ்அப் என சமூக வலைத்தளங்களில் பரவலாக வலம் வந்தது.
வைரமுத்து சிரியாவுக்கு எழுதிய கவிதையில்…
ஆயுத சூதாடிகளின் வங்கிக் கணக்கு நிறைவது பணத்தினால் இல்லை பிணத்தினால்.
கபால கோப்பைகளில் ஒயின் பருக முடியாது.
போரும் மரணமும் எவ்வடிவிலும் அழகில்லை….!
வழியும் குருதியும் எவ்வுடம்பிலும் சுகமில்லை….!
அழுத குழந்தையே பால் குடிக்கும் என்றால் அமைதி பால் எங்கே?
எல்லா நாடுகளின் மார்பிலும் சமாதானம் நிலவட்டும்.
- என்று குறிப்பிட்டிருந்தார். இப்போது அதே வார்த்தைகளை பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் பக்கம் வீசமாட்டார். மாறாக பதிலடி கொடுக்கக் கூடாது என்றும் சமாதானம் பேச வேண்டும் என்றும், இந்தியாவின் அடிமடியிலேயே கைவைப்பார் என்றே அவரது இயல்பை சுட்டிக் காட்டி கருத்து தெரிவிக்கின்றனர்.
கடந்த இரு நாட்களில், தமிழகத்தின் இன்னொரு அழகிய இலக்கிய முகம் குரூர மனத்தின் இருட்டுக் கறுப்பை தனதாக்கிக் கொண்டிருக்கிறது. அது, நான் இயல்பாகப் பேசுபவன், உண்மையைப் பேசுபவன், மனதில் பட்டதைப் பேசுபவன் என்று சொல்லிக் கொண்டு, தம் மனத்தின் அடியாழத்தில் ஒளிந்து கொண்டிருக்கும் குரூரத்தையும் வெறுப்பையும் வெளிப்படுத்திவிட்ட நெல்லை கண்ணன்!
என்னதான் காங்கிரஸ்காரர் என்றாலும், காங்கிரஸின் மேல்மட்டத்துக்கு எந்நாளும் வரவியலாத அடிமட்ட அளவினன் என்றாலும் நெல்லை கண்ணனின் திடீர் அவதாரம், நாட்டின் தமிழ் உள்ளங்களைத் திகைப்பில் ஆழ்த்தியிருக்கிறது.
நாடாளுமன்றத்தின் நிறைவு நாளில் முலாயம் சிங் யாதவ், தன் மாநில, குடும்ப அரசியலை உள் மனத்தில் கொண்டு, மோடியைப் புகழ்ந்து விட்டார் – மற்றவர்கள் எல்லாம், தம் தம் மாநில அரசியல், குடும்ப அரசியலை மனத்தில் கொண்டு பிரதமர் மோடியை வசை பாடி வரும்போது!
இதற்கு நெல்லை கண்ணன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஒரு கருத்தைத் தெரிவித்தார்… “வயதாகிப் போனதால் முலயாமுக்கு நினைவு தடுமாறுகின்றது என லாலுவின் மனைவியார் சொல்லுகின்றார்” – என்று!
இப்போது சமூக வலைத்தள வாசிகள் அனைவருமே சொல்கின்றனர்… “வயதாகிப் போனதால் நெல்லை கண்ணனுக்கு நினைவு தடுமாறுகின்றது என நெல்லைக் கண்ணனே சொல்லுகின்றார்” என்று!
காரணம் இவர் அடுத்து தெரிவித்த ஒரு கருத்தும், அதன் பின் தொடர்ச்சியாக வந்த எதிர்ப்புகளை அடுத்து தொடர்ச்சியாக அவர் பதிவு செய்த “தினத்தந்தி” செய்திகளும் அவரது மனக் கலவரத்தை நிகழ்நேர நிலவரமாகக் காட்டியிருக்கின்றது.
ராணுவ வீரர்கள் கொடூரமாகக் கொல்லப்பட்ட செய்திக்கு தன் கருத்தாக, “தேர்தலுக்கு முன்னர் ஓரு போர் தேவைப்படுகின்றதோ மோடி கூட்டத்திற்கு… இவர்களை நம்ப இயலவில்லையே!~ என்று தெரிவித்திருந்தார்.
இதை அடுத்து அவருக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்தன. இரு நாட்களாக, பேஸ்புக் பக்கங்களில் நெல்லைக் கண்ணனை வாரிச் சுருட்டி வக்கனையாய் வசைபாடி வருகிறார்கள். இதை எல்லாம் பார்த்ததாலோ என்னவோ, தன் தவறு தெரிந்தும், தன் கருத்தை நீக்கிக் கொள்ளாமல், கருத்துக்கள் தெரிவிக்கும் வழியை மட்டும் நீக்கியிருக்கிறார்.
ஒருவர் சொல்கிறார்… திர்னேலி சுப்பையா பிள்ளவாள் மகென் கண்ணன்; அவுக மகென் சுகா சினிமாப்படம் எடுக்காரு, நம்மூருல்லா! நல்லா கருப்பா, நெத்தீல திருநாறு பூசி, அளகா காத்துல கடுக்கன்போட்டு பளபளன்னு இருப்பாக. பாத்துக் களுவுங்க,
ஐயா. ஒரே நாள்ள
ராசீவு காந்தி கணாக்கா செவப்பாகிறப் போறாக. பெறவு அவுக டில்லி போனாகண்ணா சோனியாளுக்கு அடயாளமே தெரியாமெ போயீரும் – என்று எழுதியிருக்கிறார்.
நாடு சுதந்திரம் அடைந்த போது, நெல்லை ம.தி.தா. இந்துக் கல்லூரி வளாகத்தில் தேசியக் கொடி ஏற்றி வைத்து உரை நிகழ்த்தினார் தியாகி நெல்லை ஜெபமணி. அப்போது அவர் சொன்னது… பாரதி முப்பது வருடம் முன் முப்பது கோடி முகமுடையாள்னு பாடினான். இப்போ அது நாப்பது கோடி ஆயிடுச்சு. ஆனா இப்பவும் பாரதி பாடினது உண்மையாயிடுச்சு. பத்து கோடிய பாகிஸ்தான்னு ஒரு பாவி பிரிச்சிக் கொண்டு போயிட்டான்…! என்று தேசப் பற்றாளனாய் கண் கசிந்த நல்லோரை உருவாகிய மண் இந்த நெல்லை!
இந்த மண்ணில் பிறந்த நெல்லை கண்ணனின் தற்போதைய கருத்துகளைப் பார்த்தபோது, பாரதி சொன்ன அந்த முப்பது கோடி முகத்தில் இவர் முகம் வரவில்லை என்றே தோன்றுகிறது!
எதிர்ப்புகள் எழுந்த போதும், அதனை மேலும் மேலும் ஊக்குவிக்கும் விதமாய், தன்னை ஏதோ உலகளாவிய அறிஞனாய் நினைத்துக் கொண்ட நெல்லை கண்ணன் தொடர்ந்து பதிலளித்தார் இப்படி… “எழுபதினாயிரம் பேர் என்னை விரும்பிப் படிக்கின்றனர்; தொண்ணூறாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் என்னைப் பின்பற்றுகின்றனர்; உண்மைகளை எழுதத் தான் இயலும்!” என்றும்,
“அகில இந்திய அளவில் எனக்கு பெயர் வர பாஜகவினர் ஏற்பாடு செய்வார்கள் என எண்ணுகின்றேன்” என்றும் கூறும் மனநிலையில் நெல்லை கண்ணன் இருப்பது, இந்த மண்ணுக்கு அழகல்ல! இத்தனை இலக்கியச் செழுமை உள்புகுந்தும் அதன் சாரம் கூட சித்தத்தில் கலக்கவில்லை என்றே எண்ணத் தோன்றுகிறது.
தொடர்ந்து அவர் எழுதிய இன்னொரு கருத்து…
பாகிஸ்தான் இவர்களுக்கு ஒரு யுத்தி என்று எழுதினேன்! காலையில் எனது முதல் பதிவே பிரியங்கா காந்தி வீரர்களுக்கு தெரிவித்த அஞ்சலியே! பாரத மாதாவிற்கு ஜே என்னும் பாஜகவினர் என் தாயைப் பற்றி எனக்கு எழுதியுள்ள பதில்களைப் பார்த்தால் கடவுளை இவர்கள் எப்படி நம்புகின்றனர் எனப் புரியவில்லை
எனக்கும் எங்கள் ஊரில் எல்லோருக்கும் என் தாயைத் தெரியும் கடவுளுக்கும் தெரியும்! பலர் என்னைப் பெரிய மனிதன் என்று நினைத்தேன் என்று எழுதி மோடியைக் குறித்து எழுதியதனால் என்னை மிக மிகத் தரம் தாழ்ந்து எழுதினர்! முகநூலில் எழுத ஆரம்பித்த காலம் தொட்டு நான் எங்கேயும் என்னைப் பெரியவன் என்று சொல்லிக் கொண்டதில்லை!
பெருக்கத்து வேண்டும் பணிதல் சிறிய சுருக்கத்து வேண்டும் உயர்வு! என்கின்ற வள்ளுவப் பேராசானின் வழி எந்தன் வழி! மோடியின் படத்தோடும் தாமரை படத்தோடும் எழுதிய சிலரின் நேர்மையைப் பாராட்டுகின்றேன்! திராவிட இயக்கங்களை விட மிகக் கீழானவர்கள் இவர்கள் எழுதிய செய்திகளை வைத்து எழுதுகின்றேன்!
ஒருவர் என்னை நடுரோட்டில் வைத்து பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி விடுவேன் என்கின்றார்! மோடியைப் பற்றி எழுதிய பதிவை நீக்க வேண்டும் என்றனர்!
மரணம் தருவோம் என்று தானே சொல்லுகின்றனர்! உலகம் முழுவதும் பாசிஸ்ட்டுகள் இதைத் தானே செய்தார்கள்! நான் வாழ்ந்து விட்டேன் உண்மையை எழுதி மரணம் என்பது பெரும் பரிசு
அரண்டு விட்ட நிலையில் இருண்ட மனத்தை வெளிப்படுத்திய வார்த்தைகளாய்த்தான் இதை எடுத்துக் கொள்ள முடிகிறது. அடிப்படையில் நெல்லை கண்ணன் எழுதிய முதற்கருத்தே முற்றிலும் ஒரு கோணல் கருத்து.
நிகழ்ந்த சம்பவத்தை மோடி கும்பல் ஒரு கருவியாக்கிக் கொள்ளும் என்று ஒரு காங்கிரஸ்காரராக நெல்லை கண்ணன் கூறியிருப்பது, காங்கிரஸும் அப்படியே இதனை ஒரு தேர்தல் கருவியாக்கிக் கொள்ளும் என்ற எண்ணத்தை அல்லவா இந்த நாட்டுக்கு தெளிவாகச் சொல்லியிருக்கிறது!
~ செங்கோட்டை ஸ்ரீராம்