”20000 கிமீ போய்த் தாக்கும் ராக்கெட்டு எங்காள் அன்னிக்கே விட்டுட்டாரு. வெறும் முன்னூறு கிமீல இருக்கிற ஒரு செயற்கைக்கோளை அடிக்கறது, செத்தபாம்பை அடிக்கறா மாரி”
சொன்ன மனிதரைப் பரிதாபத்துடன் பார்த்தேன். நல்லா இருந்தமனுசன்.. இப்படி ஆஜ்தக், NDTV பாக்கறதுன்னு எப்ப ஆரம்பிச்சாரோ, எப்ப மும்பையில தி இந்து பேப்பர் வாங்க ஆரம்பிச்சாரோ, அப்பவே சட்டையைக் கிழிக்கிற நிலை வந்திருச்சு, பாவம்.
”உங்களுக்கு எண்களை எண்ணத் தெரியுமா?”
அவர் இதை எதிர்பார்க்கவில்லை. சிறு கோபத்துடன் “ Don’t insult others – just because they have different opinion” என்றார்.
“அட உங்களை இகழ்ந்தெல்லாம் பேசலை; நீங்க இஞ்சினீயர். எனவே கேட்டேன். எந்த எண் வரை எண்ணத் தெரியும்?”
“கோடி..கோடி .. ஏன்?”
“வெரிகுட். அப்ப இந்த கணக்குக்கு உடனே பதில் சொல்லணும். 127 * 7 =? ”
“ஏழேழு நாப்பத்தொம்பது. ஒம்பது போட்டுக்குங்க. நாலு இருக்கு. ஏழிரெண்டு பதினாலு. அதோட நாலு கூட்டி…”
“பதில் .. உடனே “
“இருங்க” என்றார் எரிச்சலில் “ இது பெருக்கறது. கொஞ்சம் புத்திசாலித்தனமா கணக்குப் போடணும்”
“அட! கோடிக்கணக்குல பெரிய எண் தெரியும். ரொம்பக் குட்டியான எண்ணைப் பெருக்கத் தெரியலை உங்களுக்கு?”
அவர் விழித்தார்.
“அக்னி போகிற ரேஞ்ச் வேற. அதனோட இயற்பியலே வேற. ஷக்தி , ஒரு செயற்கைக்கோளை சிறு தொலைவில் அடிக்கிற விச்யம் வேற. இதுக்கு துல்லியமான அறிவியல், தொழில்நுட்பம், அறிவு வேறுவிதமாகத் தேவை. எல்லாத்தையும் எம் முப்பாட்டன் செஞ்சான்னு சொல்லிட்டுத் திரியாதீங்க. ஏற்கெனவே அவனவன் உங்களைப் பாத்துச் சிரிக்கறான்”
“இருந்தாலும்….”
“ராஜதானி ரயில் விட்ட டெக்னாலஜியை வைச்சுகிட்டு, ஆலந்தூர்ல மெட்ரோ ரெயிலை நிறுத்தவோ கிளப்பவோ முடியாது. ரெண்டும் தண்டவாளத்துல ஓடுதுங்கறதுக்காக , ரெண்டும் ஒண்ணுகிடையாது”
அவர் எதிர்க்க வந்தார். கையை நீட்டினேன்.
‘ரைட்டு அப்புறம் பாப்போம். வேலை இருக்கு எனக்கு. உ ங்களுக்கு?”
படித்தும் அறிவில்லாதவர்களுடன் பேசுவது வீண்.
– சுதாகர் கஸ்தூரி