தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை எனத் தமிழக பாஜக முடிவெடுத்திருக்கிறது. தாமதமான முடிவு என்ற போதிலும் அதற்கு பாதகமான முடிவு அல்ல.
ஆனால் இது அரைக் கிணறு தாண்டிய செயல். முழுமை பெற வேறு சில பணிகளையும் இதனுடன் சேர்த்துச் செய்ய வேண்டும். அது நிச்சயம் அவர்கள் சார்பு ஊடகம் ஒன்றை உருவாக்குவதல்ல (அவை என்ன என்பதை பகிரங்கமாக விவாதிக்க அவசியம் இல்லை)
சில நாள்களுக்கு முன்பு ராகுல் காந்தியின் ஏற்கப்படாத ராஜினாமாவை அடுத்து காங்கிரஸ் தனது கட்சிக்காரர்களுக்கு வாய்ப்பூட்டு போட்டது. சற்றொப்ப அதே நேரத்தில் ஒற்றைத் தலைமை விவகாரத்தையடுத்து அதிமுக தனது செய்தித் தொடர்பாளர்களுக்குத் தடை விதித்தது. 2015ல் தந்தி டிவி அதிமுக அரசுக்கு் ஆதரவாகச் செயல்படுகிறது என்று கூறி திமுக அவர்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்பதில்லை என முடிவெடுத்திருந்தது. பாமகவை இப்போதெல்லாம் தொலைக்காட்சி விவாதங்களில் காண முடிவதில்லை. எனவே இது புதிது அல்ல
ஆனால் பாஜக எடுத்திருக்கும் முடிவுக்கு ஒரு நியாயமான காரணம் உண்டு. கடந்த இரண்டாண்டுகளாகவே, குறிப்பாகச் சொல்வதனால் ஜெயலலிதா மறைவுக்குப் பின், பாஜகவிற்கு எதிரான மனநிலை தமிழ் ஊடகங்களால் கட்டமைக்கப்பட்டது. ஜெயாவின் மறைவுக்குப் பின் அதிமுக சிதறும், ஆட்சி கவிழும் எனப் பலர் எண்ணியிருந்த நிலையில் அதிமுக நாட்டின் மற்றொரு வலிமையான தலைமையான மோதியின் பக்கம் திரும்பியது் ஊடகங்களை அத்தகைய நிலையை மேற்கொள்ள உந்தியிருக்கக் கூடும்.
ஊடகவியலாளர்களில் ஜெயலலிதா மீது அபிமானம் கொண்டவர்களைக் காட்டிலும் கருணாநிதி மீது பற்றுக் கொண்டவர்கள் கணிசமானோர் என்பதை நான் அறிவேன்.
தனிப்பட்ட முறையில் இடதுசாரி/பெரியாரியம்/ தமிழ் தேசியம்/ காங்கிரஸ் பாணி தேசியம் போன்றவற்றில் ஈர்ப்புக் கொண்ட பத்திரிகையாளர்கள் இன்று ஊடகங்களில் கடமையாற்றுகின்றனர்.
50 ஆண்டுகளுக்கு மேலாக திராவிட கட்சிகளின் ஆட்சி நடைபெறுகிற ஒரு மாநிலத்தில் இது இயல்பே. இளம் வயதிலிருந்து அந்தக் கருத்துக்களைக் கேட்டும் கற்றும் கற்பிக்கப்பட்டும் வளர்ந்த தலைமுறையினர் அதன் பால் ஈர்க்கப்படுவதில் வியக்க ஏதுமில்லை. மேலும் அந்தக் கொள்கைகளுக்கு முற்போக்குச் சிந்தனைகள் என்ற ஒரு வசீகரமும் உண்டு!
ஊடக விவாதங்களைத் தொடர்ந்து பார்த்து வருபவர்கள் ஒன்றைக் கவனித்திருக்கலாம். மத்தியிலோ, மாநிலத்திலோ ஏன் சட்டமன்றத்தில் கூட இடம் பெற்றிராத கட்சிகளின் பிரதிநிதிகள் அனேகமாக தினமும் ஏதேனும் தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்று கருத்து உதிர்ப்பார்கள். இவர்களில் தேர்தலில் பங்கேற்காத தன்னார்வ அமைப்புக்களும் உண்டு. இவர்கள் எல்லாம் மக்கள் கருத்தைப் பிரதிநிதிப்பவர்களா? என்று யோசித்தால் அவர்கள் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள். அவர்கள் பிரதிநிதிப்பது அவர்களுடைய கருத்துக்களையே! (அவற்றோடு விவாதங்களை நெறிப்படுத்துகிறவர்களுக்கு உடன்பாடு உண்டோ என்ற சந்தேகமும், ஒரு நெறியாளர் என்ற நிலையில் அவர்கள் அக்கருத்துக்களை வெளிப்படுத்த ஊடக அறம் தடுப்பதால் அவர்கள் நெறியாளர்களின் குரலாகப் பங்கேற்கிறார்களோ என்ற கேள்வியும் எனக்குண்டு)
நாடு முழுக்க ஊடக முற்போக்காளர்கள் அடித்தள மக்களிலிருந்து எவ்வளவு தூரம் அந்நியப்பட்டிருக்கிறார்கள் என்பதைத் தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன
தமிழகத்தில் இரண்டாண்டுகளாக கட்டமைக்கப்பட்ட பாஜக -அதிமுக எதிர்ப்பு, தேர்தல் நெருங்க நெருங்க அது மோதி வெறுப்பாக வலுப்படுத்தப்பட்டது. வெறுப்பரசியலுக்குப் பழக்கப்படுத்தப்பட்டுள்ள தமிழகத்தில் அது வெகு எளிதில் வேகம் கொண்டது. மோதி ஆதரவாளர்கள் வன்மத்துடன் எதிர் கொள்ளப்பட்டனர்.
தண்ணீரில் ஆக்சிஜன் இரு பங்கு இருந்தாலும் தீப் பற்றாது. பெட்ரோலில் எளிதாய்ப் பற்றும்!
இதற்குப் பல எடுத்துக்காட்டுக்களைக் கூற முடியும். என்றாலும் இங்கு இடமில்லை. கல்கி மோதி பற்றி எழுதிய ஒரு தலையங்கம் – அதற்கு நான் ஆற்றிய எதிர்வினை, நியூஸ் 7 ஒளிபரப்பு இவற்றில் இருந்த பாரபட்சம் பற்றி நான் இங்கு முன்னரே பகிர்ந்து கொண்டிருக்கிறேன்!
ஊடகங்கள் யோசிக்க வேண்டிய தருணமிது.
ஏன் ஏதேனும் ஒரு நேரத்தில் கட்சிகள் ஊடக விவாதங்களைப் புறக்கணிக்கின்றன?
விவாதங்கள் ஆளுகையைப் பற்றியதாக இருக்கின்றனவா அல்லது கட்சி அரசியலைப் பற்றியா?
விவாத அரங்கம் சம நிலையோடு கட்டமைக்கப்படுகிறதா? (கருத்துக்களின் சமநிலை. கட்சிகளின் சமநிலை அல்ல)
விவாத இறுதியில் நடத்தப்படும் டிவிட்டர் கருத்துக் கணிப்பில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்ற எண்ணிக்கை ( சதவீதம் அல்ல.) தரப்படுமா? அந்தக் கேள்விகள் loadedஆக இல்லாமல் இருக்கின்றனவா?
யோசிக்க வேண்டிய வேளை இது!
– மாலன் நாராயணன் (மூத்த பத்திரிகையாளர்)