“திருமால் வேதத்தில் வணங்கப் படவில்லை . விஷ்ணு என்பதெல்லாம் பின்னாடி ஓட்ட வச்சது” என்று ஒரு ஆன்மீக சொற்பொழிவாளர் பேசி இருக்கிறார். அதாவது வேத வழிபாட்டு முறையை இங்குள்ள தமிழர் தெய்வமான திருமால் மீது “பொருத்தி விட்டனர்” வட நாட்டவர் என்றும் பேசி இருக்கிறார்.
எனக்கு ஒரு ஊசி முனை அளவு தமிழ் இலக்கியம் அறிமுகம் என்பதினால் இது தவறு என்பதை சொல்லக் கடமைப் பட்டிருக்கிறேன்.
சங்க இலக்கியங்களில் முழுவதும் பக்தி பாடல்கள் நிரம்பிய முழுமுதல் இலக்கிய நூல் பரிபாடல்.தமிழ் மக்களின் தொன்மையான வழிபாட்டு கடவுளர்களான திருமால் செவ்வேள் பற்றிய பாடல்கள் மட்டுமே இருக்கும் அற்புதமான தொன்மையான தமிழ் இலக்கிய நூல்.
திருமாலுக்கென்று தனியாக வரலாறு ஏதும் இல்லை. ஆனால் விஷ்ணுவின் தசாவதாரம் மற்றும் பல குணங்களை விவரிக்கும் இலக்கியம் ஸம்ஸ்க்ரிதம் மற்றும் தமிழில் ஏராளம்.
அறிஞர் சொன்ன “திருமால் விஷ்ணு கிடையாது” எனும் அப வாதம் பரிபாடலின் முதல் பாட்டின் முதல் வரியிலேயே வீழ்ந்து போகிறது.
பரிபாடலில் முதல் பாடல் இதோ:
“ஆயிரம் விரித்த அணங்குடை அருந் தலை
தீ உமிழ் திறலொடு முடிமிசை அணவர,
மாவுடை மலர் மார்பின், மை இல் வால் வளை மேனி,”
இதற்கு பரிமேலழகரின் உரை மிகவும் தெளிவாக ஆதிசேஷனை குடையாக கொண்டவன் என்று சொல்கிறது;
பரிமேலழகர்: “திருமாலே! ஆயிரம் முடியையுடைய ஆதிசேஷன் நின் திருமுடிமேல் கவிக்கப் பெற்றாய்; நீ திருமகள் தங்கும் மார்பையுடையை;” என்று லக்ஷ்மியை மார்பில் கொண்டவனே என்றும் தெளிவாக திருமாலே விஷ்ணு என்று சொல்லப்படுகிறது. மேலும் இடம் கிடைக்கும் போதெல்லாம் “அந்தணர் அரு மறைப் பொருளே” என்றே விளிக்கிறது பரிபாடல். அந்தணர் என்றால் கருணாநிதி போல் படித்தவர் என்று பொருள் கொள்ள மாட்டார் என்றே நினைக்கிறேன். அருமறை என்பது வேதம்.
இதைவிட முக்கியமான ஒன்று பரிபாடல் திருமால் புகழ் பாடும் பொழுது வராக அவதாரம் பற்றிச் சொல்கிறது. விஷ்ணுவின் முக்கியமான அம்சம் தசாவதாரம்.
இதோ பாடல்:
“உரு அறிவாரா ஒன்றன் ஊழியும்;
உந்து வளி கிளர்ந்த ஊழூழ் ஊழியும்;
செந் தீச் சுடரிய ஊழியும்; பனியொடு
தண் பெயல் தலைஇய ஊழியும்; அவையிற்று
உள் முறை வெள்ளம் மூழ்கி ஆர்தருபு,
மீண்டும் பீடு உயர்பு ஈண்டி”
பொருள்:
ஊழிக் காலத்தில் உயிர்கள் உளவாதற் பொருட்டு வராகத்திருக்கோலம் கொண்டு நீ நிலத்தினை மீட்டெடுத்தாய்.
இது விஷ்ணுவின் வராக அவதாரத் சிறப்பு. இதை சொல்லித்தான் திருமாலை “நின் அடி
தலை உற வணங்கினேம்” என்கிறது பரிபாடல்.
A =B , B =C . அப்புறம் A வேறு C வேறா?
இவற்றை எழுதும் போது அன்றைய தமிழ் வழக்கில் எது வழங்கி வந்ததோ அதையும் அதற்கும் மேலாக அன்றய காலகட்டத்தில் கிடைத்த சான்றுகளை வைத்தே இலக்கியம் உருவாக்கப் பட்டிருக்க வேண்டும்.
எனவே பரிபாடல் சொல்லும் திருமால் வேதத்தில் சொல்லப் படும் விஷ்ணுவே அல்லாமல் வேறு (வரலாறே இல்லாத) தனித் தமிழ் கடவுள் அல்ல என்பது பரிபாடல் மூலம் நான் கண்டு கொண்டது.
இன்றைக்கு ஜீஸஸ் முருகனாக கள்ளழகராக வேடம் கட்டியிருக்கிறார். ஜீஸஸுக்கு பாதயாத்திரை, மொட்டை போடுதல், அகல் விளக்கு போன்ற நம் வழிபட்டு முறைகளும் நமது பூசை முறைகளும் கடத்தப் பட்டிருக்கிறது. வேண்டுமானால் அவர்களிடம் சொல்லலாம் “சாமி உன்து, பூசை என்து” என்று. மற்றபடி திருமால் வேறு விஷ்ணு வேறு எனும் வாதம் உண்மைக்கு வெகு தூரம்.
எனவே குழம்ப வேண்டாம். சாமியும் நம்முடையது, பூஜையும் நம்முடையதே!
– ச. சண்முகநாதன்