முன்னாள் இலங்கை சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிப்பதற்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் வன்னி அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருக்கும் வன்னி அரசு,
“நடிகர் விஜய்சேதுபதி இலங்கை விளையாட்டு வீரர் முத்தையா முரளிதரன் கதாபாத்திரத்தில் நடிப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு அதிர்ச்சியை தந்துள்ளது. வருத்தத்தை தருகிறது. நடிகர் விஜய் சேதுபதி சிறந்த நடிகர். பண்பாடு மிக்க, மனிதநேயமிக்க மனிதர். நடிப்பு அவரது தொழிலாக இருந்தாலும் சமூக அக்கறையோடும் தமிழின உணர்வோடும் செயல்படுபவர்.
அப்படிப்பட்டவர் முத்துயா முரளிதரன் போன்ற ராஜபக்சேவின் அடிமையின் கதாபாத்திரத்தில் நடிப்பது வேதனை அளிக்கிறது. முத்தையா முரளிதரன் கண்டியில் பிறந்து தமிழராக இருந்தாலும் ஒரு சிங்களராகவே வாழ்ந்து வருபவர். தமிழர் என்று சொல்வதில் அவமானப்படுபவர்.
சில ஆண்டுகளுக்கு முன்னால், கொழும்பு கொச்சிக்கடையில் வைத்து தமிழ் இளைஞர்களிடம் முரளி ‘தனக்கு தமிழ் தெரியாது” என்று சிங்களத்தில் உரையாடிய போது ஆத்திரம் அடைந்த தமிழ் இளைஞர்கள் முத்தையா முரளியை தாக்க முற்பட்டார்கள் என்பதெல்லாம் தனி வரலாறு.
சிங்களப் பேரினவாதத்துக்கு எதிராக விடுதலைப்புலிகள் போராடிக்கொண்டிருந்த போது சிங்களத்தின் பக்கம் நின்று துரோகம் செய்து வருபவர். இதை விட கொடுமை தமிழினப்படுகொலைக்கு பிறகு பாதிக்கப்பட்ட தமிழ் கிராமங்களுக்கு போகாமல், சிங்கள கிராமங்களுக்கு போய் ஆறுதல் சொன்னவர்.
அதுமட்டுமல்லாது, தென்னிலங்கையில் சிங்களவர்கள் மட்டுமே வசிக்கும் ‘தங்கல்லை” என்ற இடத்தில் இரண்டு சிங்கள கிராமங்களைத் தத்தெடுத்து இருக்கிறார். லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, முள்ளிவாய்க்காலில் யுத்தம் முடிவுக்கு வந்தபிறகு, “அமைதியை நிலைநிறுத்திய ராஜபக்சே” என்று
முத்தையா முரளிதரன் பாராட்டினார்.
இனப்படுகொலை நடத்திய ஒரு குற்றவாளிக்கு உறுதுணையாய் இருக்க கூடிய துரோகி முரளிதரனின் கதாபாத்திரத்தில் தமிழர்களால் அதிகம் நேசிக்ககூடிய விஜய் சேதுபதி போன்ற சிறந்த நடிகர் நடிப்பதை ஈழத்தமிழர்கள் யாரும் ஏற்கமாட்டார்கள்.
ஒரு தமிழினத் துரோகியை உலக அரங்கில் அடுத்த தலைமுறைக்கு நல்லவனாக-நாயகனாக காட்ட முயற்சிப்பது வரலாற்று பிழையாகத்தான் முடியும்” என்று வன்னி அரசு தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.
அதற்கு சிலர் பின்னூட்டமும் இட்டுள்ளனர். ஆனால் அவர்கள் கேட்க மறந்ததை நாம் கேட்டு வைப்போம். அதே பேஸ்புக்கில், இந்தப் படங்களுக்கு பதில் சொல்லும் வகையில்… திருமாவளவனைப் பார்த்து இதே அறிவுரையும் கேள்வியும் கேட்டிருக்கிறீகளா வன்னியரஷு..?!