வருமானவரி தாக்கல் செய்ய வருகிற சனிக்கிழமை (ஆக.31) கடைசி நாள் என வருமானவரித்துறை தெரிவித்தது.
கடந்த 2018 – 19ஆம் நிதியாண்டில் ஈட்டிய வருமானத்துக்கான வருமான வரி படிவத்தை சமர்ப்பிக்க ஆக்ஸட் 31-ஆம் தேதி கடைசி நாளாகும். அதற்குள் வருமான வரி படிவம் தாக்கல் செய்யாவிட்டால், தாமத கட்டணமாக ரூ.1,000 முதல் ரூ.10 ஆயிரம் வரை செலுத்த நேரிடும். வட்டி அபராதம் போன்றவற்றையும் சந்திக்க நேரிடும்.
இதனிடையே வருமானவரி தாக்கல் செய்ய செப்டம்பர் மாதம் 30-ஆம் தேதி வரை கால நீட்டிப்பு செய்யப்பட்டதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி பரவின. ஆனால், வருமானவரித்துறை இதனை மறுத்துள்ளது. இதுதொடர்பாக வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டதாவது,
வருமானவரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் செப்டம்பர் 30-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது எங்கள் கவனத்துக்கு வந்தது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட படி வருமானவரி தாக்கல் செய்ய ஆகஸ்ட் 31-ஆம் தேதி தான் கடைசி நாளாகும் என்றிருந்தது.