வாடிக்கையாளர்கள் பத்தாயிரம் ரூபாய்க்கு மேல் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க ஓடிபி எனப்படும் ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் முறை வருகின்ற ஜனவரி மாதம் ஒன்றாம் தேதி முதல் எஸ்பிஐ வங்கியில் அமலுக்கு வருகிறது
வங்கிகளில் தானியங்கி பண பரிவர்த்தனை மையமான ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் எனப்படும் ரகசிய கருவிகள் பொருத்தப்பட்டு அதன் மூலம் வாடிக்கையாளர்களின் பணத்தைத் திருடும் சம்பவங்கள் அண்மைக் காலமாக அதிகரித்து வருவதாக புகார்கள் கூறப்படுகின்றன.
இது போன்ற மோசடிகளைத் தடுக்கும் விதமாக அதிகபட்சம் பணம் எடுக்கும் வரம்பை 40 ஆயிரம் ரூபாயிலிருந்து 20 ஆயிரம் ரூபாயாக எஸ்பிஐ பாரத ஸ்டேட் வங்கி குறைத்தது!
இந்த நிலையில் 10,000 ரூபாய்க்குமேல் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுப்பது என்றால் ஒரு முறை பயன்படுத்தும் ரகசிய எண் முறையை எஸ்பிஐ வங்கி அறிமுகம் செய்துள்ளது
இதுகுறித்து எஸ்பிஐ வங்கி வெளியிட்டுள்ள அறிவிப்பில்… ஏடிஎம் இயந்திரத்தில் நடக்கும் சட்டவிரோத பண பரிவர்த்தனையை குறைக்கும் விதமாக 10,000 ரூபாய்க்குமேல் படம் எடுப்பதற்கு ஒரு முறை ரகசிய எண்ணை பயன்படுத்தும் திட்டத்தை நாங்கள் அறிமுகம் செய்துள்ளோம்.
இரவு 8 மணி முதல் காலை 8 மணி வரை இந்த நடைமுறை அமலில் இருக்கும். இந்த ரகசிய எண் வாடிக்கையாளர்களின் பதிவு செய்யப்பட்ட மொபைல் போன் எண்ணுக்கு வரும். இது சட்டவிரோத பண பரிவர்த்தனைகளிலிருந்து ஏடிஎம் வாடிக்கையாளர்களை பாதுகாக்கும்.
ஜனவரி 1-ஆம் தேதி முதல் நாடு முழுவதும் இது செயல் பாட்டுக்கு வருகிறது. ஆனால் எஸ்பிஐ வாடிக்கையாளர்கள் இதர வங்கி ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுத்தால் இந்த பாதுகாப்பு நடைமுறை பொருந்தாது என்று அதில் கூறப்பட்டு இருக்கிறது.