முத்ரா கடன் பெற்றதில் தமிழகம் முதலிடம் என்றும், தமிழர்களுக்கு ரூ. 72 ஆயிரம் கோடி கடன் வழங்கப் பட்டுள்ளதாகவும் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் பதிவிட்டுள்ளார்.
இது குறித்து விரிவான தகவல்களுடன் தமிழக அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார். தொழில் முனைவோர் மற்றும் தொழில்துறையில் தனது மாஃபா நிறுவனம் மூலம் வழிகாட்டியாகத் திகழ்ந்த பாண்டியராஜன் தற்போதும் அந்தப் பணியை டிவிட்டர் மூலம் செய்கிறார். ஆனால் உண்மையில் இந்தப் பணி, தமிழக பாஜக.,வினர் செய்ய வேண்டிய பணி என்கிறார்கள் சமூக வலைத்தளங்களில்!
எஸ்எம்எஸ்இ – சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் வளர்ச்சிகளுக்காக இந்திய அரசால் உருவாக்கப்பட்டது பிரதான் மந்திரி முத்ரா யோஜனா திட்டம் (PMMY). இது குறுந்தொழில் மேம்பாட்டு மற்றும் மறுநிதி நிறுவனம் Micro Units Development and Refinance Agency(MUDRA) மூலமாக செயல்படுத்தப் படுகிறது.
முத்ரா வங்கி என்பது மத்திய அரசின் திட்டம்! இத்திட்டத்தின் கீழ் சிசு, தருண், கிசோர் என மூன்று வகை பிரிவுகள் மூலம், ஐம்பதாயிரம் ரூபாய் முதல் பத்து இலட்சம் ரூபாய் வரை சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர்க்கு எளிமையான வகையில் கடன் வசதி வழங்கப்படுகிறது.
முத்ரா வங்கி மூலம் சிறு மற்றும் குறுந் தொழில் உற்பத்தி நிறுவனங்கள், சிறிய வணிகக் கடைகள், பழங்கள் காய்கறி விற்பனையாளர்கள், அழகு மையங்கள், வாகன ஓட்டிகள், நடைபாதை வணிகர்கள், கைவினைக் கலைஞர்கள், இளைஞர்கள், படித்தவர்கள் மற்றும் மகளிர் தொழில் முனைவோர் என பலரும் நிதியுதவி பெறுகின்றனர்.
2014ஆம் ஆண்டுக்கு முன்பு வரை தொழில்முனைவோர் 100 பேர் கடன் கோரி வங்கிகளில் விண்ணப்பித்தால், 4 பேருக்கு மட்டுமே கிடைக்கும். இப்பொழுது அந்த நிலை இல்லை. தமிழகத்தைச் சேர்ந்த குறுந்தொழில் முனைவோர் பலர் இந்தத் திட்டத்தின் மூலம் பயனடைந்துள்ளனர்.
இந்தியா முழுவதும் இதுவரை ரூ.7 லட்சம் கோடி கடனாக வழங்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் மட்டும் ரூ.72 ஆயிரம் கோடி கடன் பெற்று முதலிடத்தில் உள்ளது. அதாவது முத்ரா திட்ட மொத்த நிதியில் 10% தமிழகத்திற்கு மட்டும் கொடுக்கப் பட்டுள்ளது.
அடுத்த இடத்தில் ரூ.70 ஆயிரம் கோடி கடன் பெற்று கர்நாடகா இரண்டாம் இடத்திலும், அடுத்து மகாரஷ்டிரம் மூன்றாம் இடத்திலும் உள்ளன.