சுபஸ்ரீ மரணத்தை படிப்பினையாக கொண்டு இனி வரும் காலங்களில் அஜித்திற்காக கட் அவுட்டோ, பேனரோ வைக்கப்போவதில்லை என்று அவரது மதுரை ரசிகர்கள் முடிவு எடுத்துள்ளனர்.
அதிமுக பிரமுகர் வைத்த பேனரால் இளம் பெண் சுபஸ்ரீயின் உயிர் அநியாயமாக பறிபோனதனால் தமிழகம் முழுவதும் பேனர், கட் அவுட்டுகளுக்கு எதிரான பிரச்சாரம் தீவிரமாகியுள்ளது. ஒவ்வொரு கட்சியும் தங்கள் தொண்டர்களை கட்அவுட், பேனர் வைக்க வேண்டாம் என்று வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில் மதுரை மாவட்ட அஜித் ரசிகர்கள் சார்பில் மாநகரம் முழுவதும் போஸ்டர்கள் அடித்து ஒட்டப்பட்டுள்ளன. அதில் சகோதரி சுபஸ்ரீ மரணம் மிகுந்த வேதனை அளிக்கிறது, தவறு நடப்பதற்கு முன்பு நாம் சிந்தித்து செயல்பட வேண்டும் என்று ஒரு தவறு நிகழ்ந்த பிறகு தான் நமக்கு தெரிகிறது
இனிமேலாவது சிந்தித்து செயல்படுவோம், அந்த சகோதரி ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திப்போம் என்று அந்த போஸ்டரில் கூறப்பட்டுள்ளது. மேலும் அஜித் படங்களுக்கு இனி அவர் புகழை பரப்பும் வகையில் எங்கும் பேனரோ கட் அவுட்டோ வைக்க மாட்டோம் உறுதி மொழி எடுக்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.