ஆழ்துளைக் கிணற்றில் சிக்குண்ட குழந்தையாய் மூச்சு திணறினோம்.
இயக்குநர் வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ்குமார், அபர்னதி, ராதிகா, யோகிபாபு மற்றும் பலர் நடித்துள்ள படம் ஜெயில் . இப்படத்திற்காக அனைத்து படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்சன் வேலைகளும் முடிந்து வெளியீட்டிற்குத் தயார் நிலையில் ஊரடங்கால் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது.
இந்நிலையில், இப்படத்தின் இயக்குநர் வசந்தபாலன் தனது பேஸ்புக் பக்கத்தில் ஜெயிலுக்குள் ஒரு வெளிச்சக் கீற்று வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அதில், ஜெயில் என்று பெயர் சூட்டியதால் என்னவோ படம் வெளிவர இயலாத ஜெயிலுக்குள் சிக்குண்டு கிடந்தது. எட்டுதிசையெங்கும் தட்டினோம்.குரல்வளை அறுபடும் வரை குரல் எழுப்பினோம். திறக்கும் தாழ் எங்குமில்லை. ஆழ்துளைக் கிணற்றில் சிக்குண்ட குழந்தையாய் மூச்சு திணறினோம்.
இதற்கிடையில் கரோனோ உலகை தன் பிடிக்குள் வைத்துக் கொண்டு ஆட்டிப்படைக்கிறது. கரோனோ வைரஸின் தாக்கம் குறைந்து வருவதாக வரும் செய்திகள் மகிழ்ச்சியளிக்கின்றன. விரைவில் ஜெயிலை வெளியிடும் ஆர்வத்தில் இருப்பதாக பதிவிட்டுள்ளார். ஊரடங்கு முடிந்து சினிமா திரையரங்குகள் திறக்கப்பட அனுமதி கிடைத்ததும் ஜெயில் படத்தின் வெளியீடு பற்றிய தகவல்கள் வெளிவர இருக்கின்றன.