கடந்த ஜூன் 14-ம் தேதி நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மும்பையில் உள்ள அவரது வீட்டில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டார். அவர் தற்கொலை செய்துகொண்டார் என காவல்துறை தெரிவித்தது.
நடிகர் சுஷாந்த் சிங்கின் தற்கொலை பாலிவுட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாலிவுட்டின் வாரிசு ஆதிக்கம் குறித்து கடுமையான விவாதங்கள் நடந்தேறின. சுஷாந்த் மரணம் தொடர்பாக ரியா சக்ரபர்த்தி மற்றும் பாலிவுட் பிரபலங்களான சஞ்சய் லீலா பன்சாலி, ஆதித்யா சோப்ரா, கரண் ஜோகர் உட்பட 40 பேரிடம் மும்பை போலீசார் விசாரணை நடத்தினர்.
எனினும் சுஷாந்த் தற்கொலைக்கான காரணம் குறித்து ஒரு முடிவுக்கு வர முடியாமல் மும்பை போலீசார் உள்ளனர். சுஷாந்த் மரணம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி நடிகையும், சுஷாந்தின் நெருங்கிய தோழியுமான ரியா சக்ரபர்த்தி, உள்துறை அமைச்சர் அமித் ஷாவை குறிப்பிட்டு இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருந்தார்.
மேலும், ஜூலை 14-ம் தேதி அதாவது சுஷாந்த் இறந்த 30வது நாள் ரியா சக்ரபர்த்தி தனது இன்ஸ்டாகிராமில் சுஷாந்த் குறித்து ஒரு உருக்கமான கடிதத்தைப் பதிவிட்டிருந்தார். அதில், ”என் உணர்ச்சிகளை எதிர்கொள்ள இன்னும் சிரமப்படுகிறேன். காதல் மீது எனக்கு நம்பிக்கை வந்ததும், அதன் சக்தியை புரிந்துகொண்டதும் உன்னால்தான்.”
”நீ இப்போது இன்னும் அமைதியான இடத்தில் இருப்பாய் என்பது எனக்குத் தெரியும். பால்வெளிகளும், நிலவும், நட்சத்திரங்களும் ‘சிறந்த இயற்பியலாளரை’ வரவேற்றிருக்கும்.” ”அன்பும், மகிழ்ச்சியும் கொண்ட நீ நட்சத்திரங்களை ஒளிரச் செய்வாய். ஒரு அழகான மனிதருக்கான எடுத்துக்காட்டாக இருந்தாய்.உலகம் கண்ட சிறந்த அதிசயம் நீ. உன்னை இழந்து 30 நாட்கள் ஆகிறது. ஆனால், உன்னை நேசிக்க இந்த வாழ்நாள் இருக்கிறது.” என குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையில், சுஷாந்த் சிங்கை தற்கொலைக்கு தூண்டியதாக அவரது தந்தை கே.கே.சிங் ரியா சக்ரபர்த்தி மீது பீகார் மாநிலம் பாட்னா போலீசில் புகார் அளித்தார். சுஷாந்திடம் நிதி மோசடியில் ஈடுபட்டு மன ரீதியாக துன்புறுத்தியதாகவும் ரியா குறித்து புகாரில் அவர் தெரிவித்தார்.
இந்த புகாரின் பேரில் ரியா மீது சுஷாந்தை தற்கொலைக்குத் தூண்டியது, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட 6 பிரிவுகளில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாட்னா மத்திய மண்டல ஐ.ஜி சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.