தன்னுடைய பெயரை தவறாக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு நடிகர் அஜித்குமார் தெரிவித்துள்ளார்.
இது குறித்து நடிகர் அஜித்குமார் சார்பில் அவரது வழக்கறிஞர் எம்.எஸ்.பரத் ஓர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், அண்மை காலமாக தனிநபர்கள் சிலர் நடிகர் அஜித்தின் பெயரை தவறாக பயன்படுத்தி முன்னிலைப்படுத்தும் சம்பவங்கள் கவனத்திற்கு வந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அவர் வெளியிட்ட அறிக்கை:
நான் அஜித் குமாரின் அதிகாரப்பூர்வ சட்ட ஆலோசகர். அவர் சார்பில் இந்த அறிக்கையை வெளியிடுகிறோம். சமீப காலமாக ஒரு சில தனி நபர்கள் பொது வெளியில் என் கட்சிக்காரர்(அஜித்) சார்பாகவோ அல்லது அவரது பிரதிநிதி போலவோ அவரின் அனுமதியின்றி தங்களை முன்னிலைப்படுத்தி வருவதாக சில சம்பவங்கள் கவனத்துக்கு வந்துள்ளன. அஜித்தின் மேலாளரான சுரேஷ் சந்திரா மட்டுமே அவரின் சமூக மற்றும் தொழில் ரீதியான நிர்வாகி.
தன்னுடைய பெயரைப் பயன்படுத்தி எந்த ஒரு தனி நபரோ, நிறுவனமோ யாரையேனும் அணுகினால் அந்தத் தகவலை சுரேஷ் சந்திராவிடம் உடனடியாகத் தெரிவிக்க வேண்டும். இதை மீறி இத்தகைய நபர்களிடம், தன் சம்பந்தமாக யாரும் தொழில் மற்றும் வர்த்தக ரீதியாகத் தொடர்பில் இருந்தால், அதனால் ஏதேனும் பாதகம் ஏற்பட்டால் அதற்கு என் கட்சிக்காரர் எந்த விதத்திலும் பொறுப்பு இல்லை என்று அறிவிப்பதோடு, பொதுமக்களும் இத்தகைய நபர்களிடம் எச்சரிக்கையாக இருக்குமாறு அவர் கேட்டுக் கொள்கிறார்”.என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
Source: Vellithirai News